நாம் ஒருபோதும் எந்தப் பெயரையும் வெறும் ‘லேபலாக’ பயன்படுத்தக்கூடாது. அதாவது வசதிக்காகவோ, சுயலாபத்திற்காகவோ, காரணங்கள் எதுவுமின்றியோ, பாப்திஸ்து, பிரெஸ்பிடீரியன், கல்வினிஸ்ட்டு, சீர்திருத்தவாதம் என்பவற்றையெல்லாம் எந்தவித ஆழ்ந்த இறையியல் புரிந்துணர்வோ, நம்பிக்கைகளோ இல்லாமல் பயன்படுத்திவருவது நம்மினத்தில் மிகச் சாதாரணமாக இருந்துவருகிறது. தமிழகத்தில் எனக்குப் பரிச்சயமான ஒரு சபைப்பிரிவு மேலைத்தேய நாட்டில் இயங்கி வரும் ஒருசபைப்பிரிவின் பெயரை, அது எந்த நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறது, ஏன் அந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டிருக்கிறது, அது வேதபூர்வமானதா, இல்லையா என்பதெதுவுமே தெரியாமலும், அறிந்துவைத்திராமலும் அந்தப் பெயரைச் சூட்டித் தன்னை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த மேலைத்தேய சபைப்பிரிவைத் திருப்திப்படுத்தி அவர்களிடம் வசதி பெறுவதை மட்டுமே நோக்கமாகக்கொண்டு அது இதைச் செய்துவருகிறது. இந்தப் பிரிவைப் பொறுத்தவரையில் அந்தப் பெயர் வசதிக்காகப் பயன்படுத்திக்கொள்ளுகிற வெறும் ‘லேபல்’ மட்டுமே.