வேதம் போதிக்கும் தேவபயம் – 4
– அல்பர்ட் என். மார்டின் –
[அல்பர்ட் என். மார்டின் எழுதி, ஹெரிட்டேஜ் வெளியீடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் ‘மறந்துபோன தேவபயம்’ (The Forgotten Fear of God) என்ற நூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு அதிகாரம். மொழிபெயர்ப்பு: M. ஜேம்ஸ்]
“தேவபயமென்பது கடவுளுடைய ஆராதனையைப்பற்றி மட்டுமே குறிக்கிறதாக இல்லாமல், தேவபக்தியின் எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது. அத்தோடு அது மெய்யான கிறிஸ்தவத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்டது என்பது எல்லாரும் அறிந்த ஒன்றுதான்” என்று சென்ற தலைமுறையில், வேதத்தை மிகுந்த கவனத்துடன் கற்ற மாணவர்களில் ஒருவர் எழுதியிருக்கிறார். இதை அவர் இப்படியும் சொல்லியிருந்திருக்கலாம், அதாவது, தன்னுடைய வேதத்தை நன்கு அறிந்திருக்கிற எந்தவொரு நபரும் பொதுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று என்னவென்றால், “மெய்யான கிறிஸ்தவம்” என்பதற்கான இணை வார்த்தையாக “தேவபயத்தை” நாம் பயன்படுத்தலாம் என்பதுதான். வேதத்தை முறையாகப் படிப்பது இந்த முடிவுக்குத்தான் நம்மை வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த உண்மை பயத்தையும் பயங்கரத்தையும் உள்ளடக்கியது. தேவபயமென்பது மெய்யான கிறிஸ்தவத்தைக் குறிப்பிடுவதற்கான இணை வார்த்தையாக இருக்குமானால், தேவபயம் இல்லாமல் இருப்பதென்பது மெய்யான கிறிஸ்தவம் இல்லை என்பதற்கான அறிகுறியாகவே இருக்கும்.