வேதம் போதிக்கும் தேவபயம் – 5 – அல்பர்ட் என். மார்டின்
[அல்பர்ட் என். மார்டின் எழுதி, ஹெரிட்டேஜ் வெளியீடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் ‘மறந்துபோன தேவபயம்’ (The Forgotten Fear of God) என்ற நூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு அதிகாரம். மொழிபெயர்ப்பு: M. ஜேம்ஸ்]
முந்தைய அதிகாரத்தில், எப்போதெல்லாம் தேவபயம் காணக்கூடியதாக இருக்கிறதோ, அது கிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலாகிய உடன்படிக்கையின் ஆசீர்வாதமாக, கடவுள் தம்முடைய வல்லமையினால் தந்தது என்பதைப் பார்த்தோம். ஆகவே தேவபயம் என்பது பாவமன்னிப்பை மகிழ்ச்சியோடு உணர்வதாகிய ஆசீர்வாதமாக இருக்கிறது. இதைப்பற்றி பியூரிட்டன்களில் ஒருவரான, தாமஸ் மென்டன் (Thomas Manton) என்பவர், அருமையாக சொல்லியிருக்கிறார், “கண்டனம் பண்ணுகிற கடவுளைப் பற்றி நம்முடைய இருதயம் வெட்கப்பட்டாலும், அவரே மன்னிக்கிற கடவுளாக இருப்பதனால், அவரை நெருங்கிப் பின்தொடரவும் செய்கிறது. ஆகவே தேவபயமானது, கிறிஸ்துவுக்குள்ளாக கர்த்தருடைய நன்மையை அறிந்துணரச் செய்கிறதே தவிர, நம்முடைய உள்ளத்தை புண்படுத்துகிறதில்லை”. நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலாகிய பாவமன்னிப்பை ஒருவன் அறியாதவரை, அவன் ஒருபோதும் கடவுளைப்பற்றிய மெய்யான பயத்தைக் கொண்டிருக்க மாட்டான். அவன் கடவுளைப் பற்றி பயங்கரமாக உணரலாம், அவரைப்பற்றிய திகிலைக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்த பயங்கரமும், திகிலும் கடவுளைவிட்டு அவனைத் தள்ளி நிற்கும்படிச் செய்யும். ஆனால் பாவமன்னிப்பின் உணர்வோடு இணைந்திருக்கிற தேவபயமானது, கடவுளையும் அவருடைய வழிகளையும் பற்றிக்கொண்டிருக்கும்படி, அவனைக் கடவுளிடத்தில் நெருங்கிச் சேரும்படிச் செய்யும்.