சாதாரணமாக மனிதர்களிடம் நாம் நகைச்சுவையை எதிர்பார்க்கலாம். ஆனால், கர்த்தருக்கும் நகைச்சுவை தெரியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சங்கீதம் 2ல், “பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்” என்கிறது. உலகத்தில் மனிதர்கள் மத்தியில் நடக்கும் அத்தனைக்கு பின்னும் கர்த்தரே இருக்கிறார். அவரை மீறி எதுவும் நடந்துவிட முடியாது என்பது வேத சத்தியம் மட்டும் அல்ல; சீர்திருத்த சத்தியத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. அத்தோடு மனிதர்களின் ஆர்ப்பாட்டமான, அகங்காரப்போக்குகளையெல்லாம் மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் கர்த்தர் நகைக்கவே செய்கிறார். ‘மனிதன் ஒன்றை நினைக்க தேவன் ஒன்றை நினைக்கிறார்’ என்ற வார்த்தைப் பிரயோகம் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் நிச்சயம் உண்மை.