அதிகாரமும் அடங்காப்பிடாரிகளும்

சமீபகாலங்களில் உலக நாடுகளிலும், சமுதாயங்களிலும், திருச்சபைகளிலும் நிகழ்ந்து வரும் நிகழ்வுகளும், சிந்தனைப்போக்கும் அதிகாரத்தைப் பற்றி என்னை அதிகமாக சிந்திக்கவைத்தது. அரசுகளுக்கும், அதிகாரங்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவது மட்டுமல்லாமல், பொதுஉடமைகளுக்கு தீவைப்பதும், வாகனங்களைத் தாக்கி உடைப்பதும், எதிராளிகளைத் தாக்கிக் காயமேற்படுத்துவதும் சமுதாயத்தில் இன்று சர்வசாதாரணமாக நிகழ்ந்து வரும் நிகழ்வுகளாக இருக்கின்றன. அல்ஜிசீரா போன்ற சில மீடியாக்கள் இத்தகைய தாக்குதல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் துன்பத்தை அனுபவித்து வருவது உண்மைதான். அதை நிர்வகிக்கும் ஹமாஸ் ஒரு சமாதானப் புறா அல்ல; ஆரம்பத்திலிருந்தே இஸ்ரவேலுக்கு எதிராக வன்முறை நடத்திவரும் வன்முறைக்கூட்டம் அது. பாலஸ்தீனியர்களைத் தூண்டிவிட்டு வன்முறையை சர்வசாதாரணமாக அது நடத்திவருவதை அல்ஜிசீரா தொடர்ந்து மிகுந்த அனுதாபத்தோடு செய்தி வெளியிட்டு வருகிறது. இதேபோல்தான் சீரியாவிலும் ஐசிஸ் அமைப்பு உருவாகி வன்முறையை வளர்த்தது. இவர்களெல்லோரும் அரசுகள் தவறான போக்கில் போவதாகவும் அதனால் அவற்றைத் தூக்கியெறிய இதுவே வழி என்றும் சொல்லுகின்றனர். இதே நியாயத்தைத்தான் ஸ்ரீ லங்காவில் புலிகளை ஆதரித்தவர்களும் சொன்னார்கள். அதிகாரங்கள் தவறான போக்கில் போனால் வன்முறை செய்து அவற்றை நீக்க வேண்டும் என்ற தத்துவமே உலகமெங்கும் காணப்படும் அரசியல் வன்முறை அமைப்புகளின் சித்தாந்தமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசைப் பிடிக்காவிட்டால் குடிமக்கள் அரசுக்குக் கீழ்ப்படியாமல் எதிர்ப்புக்காட்டும் Civil disobedience சமுதாயத்தில் சாதாரணமாகிவிட்டது.

Continue reading