வேதம் மட்டுமே! என்ற பல்லவியைப் பாடுகிறவர்களை நீங்கள் நிச்சயம் சந்தித்திருப்பீர்கள். மேலெழுந்தவாரியாகப் பார்க்கிறபோது இந்தப் பல்லவி ஆபத்தில்லாததாக, நேர்மையானதாகத் தெரியும். ஆனால், இந்தப் பல்லவியைப் பாடுகிறவர்களுடைய உள்நோக்கமே வேறு. வேதத்தை மட்டுமே பயன்படுத்துவோம் என்று மார் தட்டுகிற இவர்கள் மனித எழுத்துக்களை ஒதுக்கித் தள்ளுகிறார்கள்; அவற்றைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அவற்றால் பயனில்லை என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த அறிவீனத்தால் வேதத்திலும் தேவையான ஞானமில்லாமல் தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலும் ஊழியப்பணிகளிலும் வளர முடியாமல் தேங்கி நிற்கும் தண்ணீர்போல எவருக்கும் பயனற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.