‘நம்ம ஊருக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது’ அல்லது ‘நம்ம பண்பாட்டுக்கு இதெல்லாம் ஒத்துவராது’ என்ற வார்த்தைகளை நம்மினத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் அடிக்கடி கேட்கலாம். இவை அதிகம் கேட்டுக்கேட்டுக் காது புளித்துப்போன வார்த்தைகள். இந்தப் பண்பாடே அநேக மிஷனரிகளுக்கு நம்மினத்தில் அடிபதிக்க முடியாதபடி ஆபத்தாக இருந்திருக்கிறது. போப் ஐயரும், கால்ட்வெல்லும் இன்று உயிரோடிருந்தால், ஏன்! சீகன்பாலும், வில்லியம் கேரியுங்கூட இதைப்பற்றி அதிகம் சொல்லிச் சலித்திருப்பார்கள். இந்த வார்த்தைகளை வாசிக்கிறபோதே, மேலைத்தேசத்து கிறிஸ்தவ தலைவர்களுக்கு நான் வக்காலத்து வாங்குவதாக ஒருசில குரல்கள் நம்மினத்தில் எழும். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ளுவதெல்லாம், இயேசு நம்மினத்தில் பிறக்கவில்லை என்பதைக் கொஞ்சம் உணருங்கள் என்பதுதான். வேறொரு இனத்தில் பிறந்த இயேசு வேண்டும், ஆனால் வேறு இனங்களில் பிறந்த கிறிஸ்தவ தலைவர்கள் தேவையில்லையா? வெளிதேசத்தில் இருந்து நம்மினத்துக்கு வந்ததுதான் கிறிஸ்தவம். அதேநிலைதான் உலகத்திலுள்ள ஏனைய தேசங்களுக்கும். யார், எங்கிருந்து வந்¢தார் என்பதல்ல முக்கியம்; சத்தியமும் சத்திய தேவனும் மட்டுமே நமக்குத் தேவை.