கிறிஸ்தவ வேதத்தில் கடவுளைப்பற்றியும், கிறிஸ்தவ வாழ்க்கையைப்பற்றியும் தெளிவான போதனைகளைக் கர்த்தர் நமக்குத் தந்திருக்கிறார். அந்தப் போதனைகளில் அடிப்படைப் போதனைகள் அநேகம் இருக்கின்றன. அதாவது, ஒரு கிறிஸ்தவன் நிச்சயம் அறிந்து விசுவாசிக்க வேண்டியதும், அவைபற்றிய எந்தத் தவறான எண்ணங்களைக் கொண்டிராமலும் இருக்கவேண்டியதுமான அநேக போதனைகள் இருக்கின்றன. இந்தப் போதனைகள்பற்றிய குளறுபடியான எண்ணங்களைக் கொண்டிருந்தாலோ அல்லது அவற்றை விசுவாசிக்காமல் இருந்தாலோ அல்லது இந்தப் போதனைகளை எதிர்த்தாலோ ஒரு மனிதன் கிறிஸ்தவனாக இருக்கமுடியாது. அந்தளவுக்கு இந்தப் போதனைகள் கிறிஸ்தவத்தின் அடித்தளமாக இருக்கின்றன. இந்தப் போதனைகள் இல்லாமல் கிறிஸ்தவம் இருக்கமுடியாது. இவை கிறிஸ்தவத்தின் உயிர்நாடி.