வேதத்தை விளங்கிக்கொள்ள இன்றியமையாத அம்சங்கள் – A.W. பின்க்

 அதிகாரம் 2

இதற்கு முந்திய அதிகாரத்தில், வேதத்தை விளக்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்துப் பார்த்தோம். பரிசுத்த வேதத்திலுள்ள ஒவ்வொரு வாக்கியத்தின் அர்த்தத்தையும் ஆராய்ந்தறிய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதையும் கவனித்தோம். கடவுள் தன் வார்த்தையில் சொல்லியிருப்பவை மிக முக்கியத்துவமும், பெரும் மதிப்பும் கொண்டவை. இருந்தாலும், அதிலுள்ள போதனைகளை நாம் தெளிவாக அறியாமற்போனால், அதிலிருந்து நாம் எத்தகைய நன்மையை அடைய முடியும்? வேதத்திலுள்ள சில சொற்களுக்கு வேதத்திலேயே அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் இதை நமக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறார். புதிய ஏற்பாட்டின் முதல் அதிகாரத்திலேயே, இயேசு கிறிஸ்துவைக் குறித்து இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது, “அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.” (மத்தேயு 1:23). மேலும், யோவான் 1:41ல், “மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்” என்றிருக்கிறது. மாற்கு 15:22, “கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய்” என்கிறது. எபிரெயர் 7:2, “இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம்” என்கிறது. வேதத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையின் பொருளையும், நாம் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதன் அவசியத்தை இந்த வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. கர்த்தருடைய வேதம், வார்த்தைகள் மூலம் நம்மை வந்தடைந்திருக்கிறது. அவ்வார்த்தைகளுக்கான பொருளை நாம் அறியாதிருந்தால், அவற்றின் அர்த்தத்தை நாம் அறிந்துகொள்ள முடியாது. ஆகவே வேதத்தில் நாம் வாசிப்பவைகளின் பொருளை ஆராய்ந்தறிவதே நம்முடைய முதன்மையான பொறுப்பு.

Continue reading