குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? மிகவும் கஷ்டம். இரண்டு பேருக்குமே கண் தெரியாததால் இரண்டு பேருக்கும் அதனால் ஆபத்து ஏற்படும். அதுமட்டுமல்லாமல் பாதை தெரியாத ஒருவன் இன்னொருவனுக்கு பாதை காட்ட முடியாது. இரண்டு பேருமே தட்டுத்தடுமாறி வீடுபோய்ச் சேரமுடியாமல் எங்கோ நின்று தடுமாறிக்கொண்டிருப்பார்கள். இதெல்லாம் நமக்குத் தெரிந்ததுதான். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இதே நிலைமைதான் இன்று நம்மினத்து ஊழியங்கள் மற்றும் சபைகளைப் பாதித்துக்கொண்டிருக்கின்றன. வெறும் சுயநல உணர்ச்சியோடு தங்களுடைய தேவைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக ஆத்மீக ஆசை இருப்பதுபோல் பாவனை செய்து கூட்டங்களுக்குப் போய்க்கொண்டிருக்கும் கூட்டம் ஒருபுறமிருந்தபோதும், இன்னொருபுறம் உண்மையாகவே சத்திய வாஞ்சைகொண்டு சத்தியத்தைத் தேடிக்கொண்டிருக்கின்ற ஒரு சிறிய கூட்டமும் எங்கும் இருந்து வருகிறது. அத்தகைய சத்திய வாஞ்சையை எந்த இருதயத்திலும் விதைக்கிறவர் பரிசுத்த ஆவியானவர்தான். வேதம் அதிகம் தெரியாமலிருந்தாலும் உண்மையான, உறுதியான விசுவாசத்தைக் கொண்டிருந்து சத்தியத்திற்காக ஆவலோடு காத்திருக்கின்றது இந்தக் கூட்டம். இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களை நான் பல நாடுகளில் என்னுடைய பிரயாணங்களின்போது சந்தித்திருக்கிறேன். அவர்களோடு உறவாடி, சத்தியத்தைப் பகிர்ந்துகொண்டு அவர்களுடைய சந்தோஷத்தில் பங்கேற்றிருக்கிறேன். அப்படியான ஒரு சந்தர்ப்பம் இந்த டிசம்பர் மாதமும் கிடைத்தது.