அதிகாரம் 3
பரிசுத்த வேதவார்த்தைகளின் மெய்யான பொருளை அறிய விரும்புகிற ஒருவனில் இருக்க வேண்டிய மிக முக்கியமானதும் அடிப்படையானதுமான சில தகுதிகளைக் குறித்து முந்தைய அதிகாரத்தில் விளக்கினேன். அத்தகுதிகள் பொதுவாக எல்லா விசுவாசிகளிடத்திலும் இருக்க வேண்டியவை. இந்த அதிகாரத்தில், கர்த்தருடைய வேதத்தைப் பிரசங்கிக்கவும், போதிக்கவும் கர்த்தரால் அழைக்கப்பட்டவர்களில் (பிரசங்கிகளில்) இருக்க வேண்டிய சில குறிப்பிட்ட தகுதிகளைக் குறிப்பிடப் போகிறேன். அவர்கள் தங்களுடைய முழு நேரத்தையும், ஆற்றலையும், ஆத்துமாக்களின் ஆவிக்குரிய மற்றும் நித்திய நன்மைக்கான பிரயோஜனத்துக்காகவும், அந்த ஆசீர்வதிக்கப்பட்ட, உன்னதமான, மற்றும் முக்கியமான வேலைகளைச் செய்யத் தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளவும் அர்ப்பணித்தவர்கள். கர்த்தருடைய சத்தியத்தை எடுத்துரைப்பதும், தான் பிரசங்கிக்கிற சத்தியத்தின்படியாக, நடைமுறையில் மிகுந்த கவனத்துடன் வாழ்ந்துகாட்டி, தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்களுக்குத் தேவபக்திக்கேதுவான நடைமுறை உதாரணமாக வாழ்ந்து காட்டுவதுமே அவர்களுடைய முதன்மையான பணி. அவர்கள் சத்தியத்தைப் பிரசங்கிக்க வேண்டியிருப்பதனால், அவர்கள் பிரசங்கிப்பது வேத வார்த்தைகளாகிய களங்கமில்லாத பாலாக இருப்பதனால், இதில் எந்தத் தவறும் செய்துவிடக்கூடாது என்பதற்கான சகல முயற்சிகளையும் செய்கிறவர்களாக இருக்க வேண்டும். சத்தியத்திற்குப் பதிலாக தவறானதைப் போதிப்பது, கர்த்தரையும் அவருடைய வார்த்தையையும் அவமதிப்பது மட்டுமல்ல, அதைக் கேட்கிறவர்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களுடைய மனதையும் கெடுக்கும் செயலாகும்.