இதழ் 4, 1996
கடந்த பத்தாண்டுகளில் பாதை தவறி பரிசுத்தத்தை இழந்து பாழாய்ப்போன நற்செய்தியாளர்களின் பட்டியல் சிறிதல்ல. பிரதானமாக அமெரிக்காவில் ஜிம் பேக்கர், ஜிம்மி சுவகர்ட் போன்றோர் பணத்தாசையாலும், பெண்ணாசையாலும் அழிவை நாடிச்சென்றதை நாடறியும். அதே வகையில் தமிழ் பேசும் நாடுகளிலும் பலர் இவ்விதமாக சரீர இச்சைகளுக்கு இடம் கொடுத்து சர்வேசுவரனின் ஐக்கியத்தை இழந்து, தேவ ஊழியத்திற்கே இழுக்கைத் தேடித் தந்துள்ளனர். மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டியவர்களே வழி தவறி, நிலைகுலைந்து வழுக்கி வீழ்ந்துள்ளனர். ஆனால் சிலர் கிறிஸ்தவ வாழ்க்கையில் தவறுகள் நேரிடத்தான் செய்யும்; தாவீது தன் வாழ்வில் தவறு செய்யவில்லையா? என்று இவற்றைக் கண்டும் காணாமலும் இருந்துவிட முயலுகின்றனர்.
இவை சாதாரண தவறுகள்தானா? கிறிஸ்தவ வாழ்க்கையில் பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வழிகாட்டுபவர்கள் வாழ்க்கையில் இவை தவிர்க்க முடியாதவையா? என்ற கேள்விகளுக்கு நாம் விடை காணத்தான் வேண்டும். அத்தோடு இவ்வாறு வாழ்க்கையில் வழுக்கிவிழுந்தவர்களை நாம் எவ்வாறு நடத்தவேண்டும் என்றும் அறிந்துகொள்ளத்தான் வேண்டும்.