இந்த வருடம் ஜூலை மாதம் ஒரு சனிக்கிழமை நான் என் வழமையான உடற்பயிற்சிக்கான ஆறு கிலோமீட்டர் ஓட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது நண்பரொருவரின் ஈமெயில் ஒன்று ஜிம் பெக்கர் மறைந்துவிட்டார் என்ற செய்தியைக் கொண்டுவந்தது. இன்னுமொரு இவென்ஜலிக்கள் இறையியலறிஞர் இறைபதம் அடைந்துவிட்டார். ஜிம் பெக்கர் என்றும், ஜே. ஐ. பெக்கர் என்றும் கிறிஸ்தவ உலகில் பலராலும் அறியப்பட்டிருந்தார் ஜேம்ஸ் பெக்கர். முப்பது வருடங்களுக்கு முன் ஜே. ஐ. பெக்கரின் முக்கிய நூலொன்று எனக்குப் பெரும் பயனளித்தது. இப்போதும் நினைவிருக்கிறது; கர்த்தரின் முன்குறித்தலுக்கும் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கும் இடையில் முரண்பாடிருக்கிறதா என்ற விஷயத்தில் பெக்கரின் ‘சுவிசேஷ அறிவித்தலும் கர்த்தரின் இறையாண்மையும்’ (Evangelism and the Sovereignty of God) என்ற சிறு நூல் பால் வார்த்ததுபோல் அக்காலத்தில் எனக்கு உதவியது. எத்தனையோபேரை அதை வாசிக்கும்படி ஊக்குவித்திருக்கிறேன்; என் பிரசங்கங்களிலும், போதனைகளிலும் பயன்படுத்தியிருக்கிறேன். பெக்கர் இவை இரண்டிற்கும் முரண்பாடில்லை என்பதை மிக அழகாகவும், வேதபூர்வமாகவும், ஆணித்தரமாகவும் அந்நூலில் விளக்கியிருந்தார். இன்றும் அந்தப் பிரதி என் படிப்பறை நூல்களுக்கு மத்தியில் இருக்கிறது.