அஞ்சரைப்பெட்டியைத் திறந்து பார்த்து சில வருடங்களாகி விட்டது. காலங்கள் கடந்துபோக வாழ்க்கையில் நாம் கேட்பதும், வாசிப்பதும், பிறரோடு பழகும் அனுபவத்தில் கிடைப்பதும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. எத்தனையோ விஷயங்கள் அவசியமில்லாதவையாகிவிடுகின்றன. அவற்றையெல்லாம் மனமாகிய அஞ்சரைப்பெட்டிக்குள் நாம் சேர்த்து வைப்பதில்லை. மறக்கமுடியாத, அவசியமான பல நிகழ்வுகளையும், செய்திகளையும், உண்மைகளையுந்தான் நாம் அஞ்சரைப்பெட்டிக்குள் வைத்திருப்போம். பசுமாடு தேவையான அளவுக்கு புல்லை வயிற்றில் சேமித்த பிறகு மரத்தடியில் ஆசுவாசமாக அமர்ந்து அதை மறுபடியும் வாய்க்குக்கொண்டுவந்து அசைபோடும். என் அஞ்சரைப்பெட்டியை இன்னொரு தடவை திறந்து பார்த்து அசைபோடும் சமயம் வந்துவிட்டது. நீங்களும் என்னோடு வாருங்களேன்!