நம்மினத்தில் சிந்தனைக்கு அநேகர் இடங்கொடுப்பதில்லை. அதாவது, ஆழ்ந்த அறிவுபூர்வமான சிந்தனைக்கு இடம்கொடுப்பதில்லை என்றே சொல்லவந்தேன். நம்மவர்கள் மனத்தில் ஆழ்ந்த அறிவுபூர்வமான சிந்தனையைவிட உணர்ச்சிகளுக்கே அதிக இடம் கொடுக்கிறார்கள். தமிழ் சமுதாயம் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியது. சிந்திக்க அவசியமில்லாமல் உணர்வுகளை மட்டும் சந்தோஷப்படுத்தும் ஒருவகைக் கிறிஸ்தவமே நம்மினத்தை இன்று ஆளுகிறது. 16ம் நூற்றாண்டுக்கு முன் ரோமன் கத்தோலிக்க மதம் வேதத்தை வாசித்து மனிதன் சிந்திக்க வழியில்லாமல் செய்திருந்தது. சிந்தனை இருக்கவேண்டிய இடத்தை சிலை வணக்கமும், சடங்குகளும் பிடித்துக்கொண்டன. 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் எழுந்தபோதே சிலைவணக்க சிறைவாசத்தில் இருந்து மக்கள் விடுதலை அடைய முடிந்தது. இன்று மறுபடியும் சிந்தனை இருக்கவேண்டிய இடத்தை வெறும் உணர்ச்சிகள் பிடித்துக்கொண்டிருக்கின்றன. இது 21ம் நூற்றாண்டு சிலைவணக்கமாக மாறியிருக்கிறது. அறிவுபூர்வமானதும், ஆக்கபூர்வமானதுமான சிந்தனைக்கு இடம்கொடாததாலேயே கிறிஸ்தவ சபைகளும், பிரசங்கங்களும், கிறிஸ்தவ தலைமையும் இன்று தாழ்ந்த நிலையில் காணப்படுகின்றன. உண்மையில் அத்தகைய நிலையில் இருக்கிறோம் என்பதையே உணராததாக நம்மினத்துக் கிறிஸ்தவம் இருந்து வருகிறது. அது நமக்குக் கிடைத்திருக்கும் சாபம் என்றே சொல்வேன்.