வாசிக்கிறவர்கள் தங்களுடைய வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுவதை நான் வரவேற்கிறேன். ஒருவருடைய அனுபவத்தைப் பேச்சின் மூலம் மட்டுமல்லாமல், எழுத்தின் மூலமாகவும் அறிந்துகொள்ளுகிறோம். எழுதுகிறபோது சிந்தனைக்கு வேலை கிடைக்கிறது. நம் உள்ளத்தின் எண்ணக் குமுறல்களுக்கு வார்த்தையால் வடிவம் கொடுக்கமுடிகிறது. ‘உன்னுடைய காகிதங்களை உன் இருதயத்து மூச்சுக்களால் நிரப்பு’ என்று சொன்னார் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வேர்த். மூச்சை எந்த மனிதனாவது நிறுத்த முயற்சிப்பானா? இயல்பாக மூச்சுவிடுவதுபோல் இயல்பாக எண்ணங்களை எழுத்தில் வார்க்கவேண்டும். நம் வாசிப்பின் அனுபவத்தை எழுத்தில் பகிரும்போது வாசிப்பவர்கள் நம்மை அறிந்துகொள்ளுகிறார்கள்; நம் அனுபவங்களை அனுபவிக்க ஆரம்பிக்கிறார்கள். வாழ்க்கையில் நாம் ஒருபோதும் நேரில் சந்திக்க முடியாதவர்களோடுகூட எழுத்தில் இணைந்து நடக்கமுடிகிறது. அது நல்லதுதானே! கீழ்வரும் வாசக நண்பர்களின் வாசிப்பு அனுபவத்தை சுவைக்கலாம் வாருங்கள். – ஆர். பாலா