மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. இதில் வரும் ‘குதிர்’ என்ற வார்த்தை படிப்படியாக மாறிப் பின்னால் ‘குதிரை’ என்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையில் இந்தப் பழமொழி குதிரையைப் பற்றியதல்ல. குதிர் என்பது மணல்திட்டைக் குறிக்கிறது. அதாவது, ஆற்றில் சில இடங்களில் மண்திட்டுக்கள் தீவுகள்போலத் தெரியும். அது குவிந்திருக்கும் வெறும் மணல்தானே தவிர உறுதியான தரை அல்ல. தரைதானே என்று நினைத்து அதில் கால்வைத்துவிட்டால் புதைமணல் நம்மை உள்ளே இழுத்துவிடும் ஆபத்து இருக்கிறது. அதனால்தான் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்ற பழமொழி உருவானது.