(திருமறைத்தீபத் தொகுப்புகள் பற்றிய கருத்துரை) – ஷேபா மைக்கேள் ஜோர்ஜ்
(மைக்கேள், ஷேபா தம்பதிகள் ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன் எனக்கு அறிமுகமானார்கள். மத்திய கிழக்கு நாடொன்றில் வாழ்ந்து வரும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. விசுவாசத் தம்பதிகளான அவர்கள் திருமறைத்தீப இதழைப் பல வருடங்களாக வாசித்து வருவதோடு, நாம் வெளியிட்டு வரும் நூல்கள் அனைத்தையும் பெற்று ஆர்வத்தோடு வாசித்து வருகிறார்கள். முக்கியமாக சகோதரி ஷேபா இளம் வயதில் இருந்தே இலக்கிய வாசிப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். தமிழ் சஞ்சிகைகளையும் நூல்களையும் தவறாமல் பெற்று வாசித்து வாசிப்பில் வளர்ந்திருக்கிறார். திருமறைத்தீபமும், நமது நூல்களும் அறிமுகமான காலத்தில் இருந்து அவருடைய வாசிப்பு இன்னுமொரு கட்டத்தை அடைந்து, அவர் ஆர்வத்தோடு எழுதுவதிலும் ஈடுபட ஆரம்பித்தார். தன் வாசிப்பு அனுபவங்களைச் சரளமாக எழுத்தில் வடிப்பதற்கு அவருடைய வாசிப்புப் பழக்கம் அவருக்கு அருமையாகக் கைகொடுத்திருக்கிறது. நம் வலைத்தளத்திலும், இதழ்களிலும் அவர் எழுதியிருக்கும் சில ஆக்கங்களே அதற்குச் சான்று.
வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரியும் ஷேபா அங்கு ஓய்வுக்காக நேரங்கிடைக்கும் நேரத்திலும் வாசிக்கத் தவறுவதில்லை. வேலைக்குப் போகும்போது அறுநூறு பக்கங்களுக்கும் மேலான திருமறைத்தீபத் தொகுப்பு ஒன்றையும் கையோடு கொண்டு சென்று வாசிப்பது அவருடைய வழக்கம். அந்தத் தொகுப்புகளில் நீச்சலடித்துத் தன் சத்தியத் தாகத்தைத் தணித்துக்கொள்வதை அவர் அன்றாட வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த அனுபவங்களை அவர் இந்த ஆக்கத்தின் மூலம் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அவருடைய வாசிப்பும், எழுத்தும் மென்மேலும் உயரக் கர்த்தர் உதவட்டும். – ஆசிரியர்)