குடும்பம் பல அங்கத்தவர்களைக் கொண்டது. கணவன், மனைவி, பிள்ளைகள் என்று அமைந்துள்ள குடும்பம் நல்ல நிலையில் சீராக வாழ்ந்து வளர வேண்டுமானால் அது ஒழுங்காக ஓடும் நீரோடைபோல் கட்டோடு, அமைதியாக ஓட வேண்டும். கட்டுப்பாட்டோடும், கண்ணியத்தோடும் குடும்பம் இருக்க அதற்கு ஒரு தலைமை அவசியம். தலை இல்லாமல் சரீரம் இருக்க முடியாது. இதற்காகவே குடும்பத்தை ஏற்படுத்திய தேவன் அதற்குத் தலைமை அவசியம் என்பதால் கணவனுக்கு குடும்பத்தை நடத்தும் தலைமைப் பொறுப்பை அளித்துள்ளார். இது மனிதன் ஏற்படுத்திக்கொண்ட ஒரு வசதி அல்ல. இன்று கணவனுக்குச் சொந்தமான இத்தலைமைப் பொறுப்பைக் குறித்து கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக மேலை நாட்டுக் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெண்ணுரிமை சார்பான இறையியலாளர்கள் தேவன் ஏற்படுத்தியுள்ள கணவனுக்குச் சொந்தமான இத்தலைமைப் பொறுப்பிற்கு புது விளக்கம் கொடுத்து வருகிறார்கள். இது வெறும் விவாதப் பொருளாக மட்டும் அமையாமல் ஆண், பெண் உறவிலும், கணவன், மனைவி உறவிலும், குடும்ப வாழ்க்கையிலும், சபை வாழ்க்கையிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.