குடும்பத்திற்குத் தலைவன் கணவன் என்று முந்தைய ஆக்கத்தில் பார்த்தோம். கணவன் குடும்பத் தலைவன் என்றால், மனைவியைக் குடும்ப விளக்கு என்று கூறுவது நியாயமே. மனைவி குடும்பத்தில் விளக்கைப்போல ஒளியேற்றி வைக்க வருபவள். ஒரு நல்ல கிறிஸ்தவ மனைவி விளக்கைப்போல குடும்பத்திற்கு ஒளி கொடுப்பவள் மட்டுமல்ல, சுயநலமற்ற தனது வாழ்க்கையின் மூலம் திரியாக எரிந்து அதில் இன்பம் காண்பவள். நமது சமுதாயத்தின் புலவர்கள் பெண்களைப்பற்றி பெரிதாகப் பேசியும், எழுதியும் வந்துள்ளார்கள் என்றால் அதற்குப் பெண்களின் குணம்தான் காரணம். ஆனால், பெண்ணுக்கு எழுத்தின் மூலம் மதிப்புக் கொடுக்கும் அளவிற்கு நடைமுறையில் நம் மக்கள் மதிப்புக் கொடுக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். பெண்ணுக்கு இருந்த நிலை தொடர்ந்தும் நிலவுகிறது என்று கூறுவது பெரிதுபடுத்துவதாகாது. ஒவ்வொரு ஆணும் பெண்களைப்பற்றித் தன் மனத்தில் கொண்டுள்ள எண்ணத்தில் இன்றும் அதிக மாற்றமடையவில்லை. தொழில் நுட்பம் வளர்ந்துள்ள அளவிற்கு தமிழ் மக்களின் எண்ணங்களில் இந்த விஷயத்தில் துரித மாற்றங்கள் ஏற்படவில்லை. இவ்விதழில், வேதம் குடும்பத்தில் கிறிஸ்தவ மனைவியின் பங்கைப்பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம். கிறிஸ்தவ மனைவியின் பங்கைப்பற்றிப் போதிக்கும் முக்கியமான வேதப் பகுதிகள்:
- எபேசியர் 5:22-23
- கொலோசெயர் 3:18-21
- 1 பேதுரு 3:1-7
- தீத்து 2:3-5
- 1 தீமோத்தேயு 5:9-16