[பேராசிரியர் ஜோன் மரே ‘மீட்பின் நிறைவேற்றம்’ என்ற ஆங்கில ஆக்கத்தில் விளக்கியிருக்கும் கிறிஸ்துவின் பாவநிவாரணபலி பற்றிய ஆழமான சத்தியங்களை எளிமையாக தொடர்ச்சியாக விளக்கப்போகிறேன். அதுபற்றிய இரண்டு ஆக்கங்கள் கடந்த இதழில் வந்திருந்தன. இது அவற்றின் தொடர்ச்சி. – ஆசிரியர்].
கிறிஸ்துவின் பாவநிவாரணபலியின் தன்மையை ஆராய்ந்து வருகிறோம். கடந்த இதழில் அந்தப்பலியில் அடங்கியுள்ள அத்தனை உண்மைகளையும் விளக்கும் ஒரே வார்த்தையாக கிறிஸ்துவின் கீழ்ப்படிவு அமைந்திருப்பதாகக் கண்டோம். அவருடைய முழுமையான கீழ்ப்படிதல் பாவநிவாரணபலியைப் பூரணமாக நிறைவேற்றியிருக்கிறது. இருந்தபோதும் வேதத்தில் கிறிஸ்துவின் பாவநிவாரணபலியை விளக்கும் வேறு தனிப்பட்ட பதங்களும் காணப்படுகின்றன. இந்தப் பதங்கள் ஒவ்வொன்றும் பாவநிவாரணபலியின் விசேட தன்மைகளை பிரித்துக்காட்டுவனவாகவும், அதேநேரம் பாவநிவாரணபலிபற்றிய முழுமையான புரிதலை நாம் அடையும்படியாகவும் உதவுகின்றன. பாவநிவாரணபலி பற்றி நாம் இந்தளவுக்கு சாதாரணமாக சிந்தித்துப் பார்ப்பதில்லை. வேதம் அதுபற்றி விளக்கும் உண்மைகளை அறிந்துகொள்ளுகிறபோதுதான் கிறிஸ்துவின் பலி எத்தனை மகத்தானது என்பதையும், அவர் நமக்களித்திருக்கிற இரட்சிப்பு எத்தனை மேன்மையானது என்பதையும் நாம் அறிந்துணர முடிகிறது. அறிவுக்காக மட்டுமல்லாமல் நாம் கிறிஸ்துவுக்குள்ளாக பரிசுத்தத்தில் உணர்வுபூர்வமாக நடைமுறையில் வளருவதற்கும் பேருதவியாக இருக்கும் பெருஞ்சத்தியங்கள் இவை.
பாவநிவாரணபலியின் பல்வேறு அம்சங்களை விளக்குகின்ற ஏனைய பதங்களாக பலி, கோபநிவாரணபலி (ப.தி. – கிருபாதாரபலி), ஒப்புரவாக்கம், மீட்பு ஆகியவற்றை வேதத்தில் காண்கிறோம். கிறிஸ்துவின் பாவநிவாரணபலியோடு தொடர்புடைய இந்தப்பதங்களை வேதத்தில் அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களின் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும்போது இவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படும் அருமையான சத்தியங்களை அறிந்துகொள்ள முடிகிறதோடு பாவநிவாரணபலியின் மகிமையை இவை இன்னும் உயரத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடுகின்றன. இப்போது இத்தகைய வார்த்தைப்பிரயோகங்களில் ஒன்றான பலியை ஆராய்வோம்.
பலிகள் (Sacrifices)
கிறிஸ்துவின் மீட்புப்பணி பலியாக இருக்கவேண்டுமென்பதை அநாதியிலேயே திரித்துவதேவன் தீர்மானித்துவிட்டார். இந்த நேரத்தில் நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வியொன்று இருக்கிறது. கிறிஸ்துவின் மீட்பின் செயலை விபரிக்கும்விதமாக பலி என்ற வார்த்தை வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறபோது அது எத்தகைய பலியை விளக்குவதாக இருக்கிறது என்பதுதான் அந்தக் கேள்வி. புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் எந்த அர்த்தத்தில் இந்தப் பதத்தை தங்களுடைய எழுத்துக்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே நாம் அதைத் தீர்மானிக்க முடியும். பழைய ஏற்பாட்டு நூல்களில் ஆழமாகவும், பரவலாகவும் இது பயன்படுத்தப்பட்டிருப்பதால், பழைய ஏற்பாடு எந்த அர்த்தத்தில் இந்தப் பதத்தைப் பயன்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்வது அவசியம். அப்படி ஆராய்கின்றபோது பழைய ஏற்பாடு அடிப்படையில் ‘கழுவுதல்’ என்ற அர்த்தத்தில் இந்தப்பதத்தைப் பயன்படுத்தியிருப்பதாக அறிந்துகொள்ளுகிறோம். எதைக் கழுவுதல் என்று கேட்போமானால் அதற்குப் பதில் பாவமும், அதனால் ஏற்படும் குற்றவுணர்வும் என்பதே பதிலாகக் கிடைக்கிறது.
பாவம் ஒருவனைத் தன் செயலுக்கு பொறுப்பானவனாக்கியிருக்கிறது. இதற்கு, ஒருபுறம் கடவுளின் பரிசுத்தமும் இன்னொருபுறம் அந்தப் பரிசுத்தத்திற்கு எதிரான அவனுடைய பாவத்தின் கோரமும் காரணமாக இருக்கின்றது. இந்நிலையில் பலியானது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பெருஞ்செயலாகக் காணப்படுகிறது. அதன் மூலம் ஒருபுறம் அவர் பாவத்தைக் கழுவி மறுபுறம் பாவத்தினால் உண்டாகியிருக்கும் சாபத்தையும், தெய்வீகக் கோபத்தையும் நீக்குகிறார். பழைய ஏற்பாட்டு மனிதன் ஆலயத்துக்குள் ஆராதனை செய்ய வருகிறபோது அங்கிருக்கும் பலிபீடத்தில் தன்னுடைய பாவத்துக்குப் பரிகாரமாக ஓர் ஆட்டை வைக்கிறான். அந்த ஆட்டின் தலையில் அவன் கையை வைக்கிறபோது அவனுடைய பாவமும், அதற்குத் தகுந்த தண்டனையும் அடையாளபூர்வமாக அந்த ஆட்டின் மீது சுமத்தப்படுகிறது. பலிகொடுக்கிறவனின் பாவம் பலிகடாவின் மீது சுமத்தப்படுவதோடு பலிகடா பலிகொடுக்கிறவனுக்காக மரணத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கிறது. இங்கே பாவம் செய்தவனுடைய இடத்தில் இன்னொருவர் அந்தப் பாவத்தை சுமந்து அதன் பலனாகிய மரணத்தை ஏற்பதைக் காண்கிறோம்.
பழைய ஏற்பாட்டில் காணப்படும் இந்தப் பலியை கிறிஸ்துவின் பலியோடு ஒப்பிடும்போது ஆலயத்துக்கு பலிகொடுக்க வந்த மனிதனுக்கும் பலியாட்டுக்கும் இடையிலும், பாவியாகிய மனிதனுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையிலும் இருக்கும் வேறுபாடுகள் சமமானவையல்ல. பழைய ஏற்பாட்டுப் பலிகள் வெறும் நிழல்களும், உதாரணங்களும் மட்டுமே. இருந்தபோதும் அவற்றில் காணப்படும் கழுவும் தன்மையை நம்மால் கவனிக்காமல் இருக்கமுடியாது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த கழுவியெடுக்கும் அம்சமே கிறிஸ்துவின் பலியை நாம் சரியாக விளங்கிக்கொள்ளுவதற்கு துணையாக இருக்கிறது. கிறிஸ்துவின் பலி கழுவியெடுக்கும் பலி மட்டுமல்ல அந்தபலியின் பலாபலன்கள் தொடர்கின்ற தன்மையையும், வலிமையையும் கொண்டிருக்கின்றன. அத்தோடு அது மிருகப்பலிகளோடு ஒப்பிட முடியாத பூரணத்துவத்தைக் கொண்டிருந்து பழைய ஏற்பாட்டுப் பலிகள் நிழலாகக் காட்டும் கழுவும் தன்மையைத் தன்னில் கொண்டிருக்கின்றன. இதெல்லாம் எதைத் சுட்டுகிறதென்றால், எவர்களுக்காக கிறிஸ்து குற்றமற்ற மகத்தான பலியாகத் தன்னை ஒப்புக்கொடுத்தாரோ அவர்களுடைய பாவங்கள் அவர்மீது சுமத்தப்பட்டு அவர்களுடைய இடத்தில் அவர் பலியானார். கிறிஸ்துவின் பலியில் காணப்படும் இந்தப்பரிமாற்றத்தை வேதம் imputation என்று அழைக்கின்றது. தமிழில் இதைக் ‘கணிக்கப்படுதல்’ அல்லது ‘எண்ணப்படுதல்’ என்று சொல்லலாம். கிறிஸ்துவின் பலியில் இந்தக் ‘கணிக்கப்படுதலாகிய’ சத்தியத்தை நாம் காண்கிறோம். இதற்காகவே அவர் நீதியற்றவர்களுக்காக நீதியாகவும், நம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவும் பலியாகி மரித்தார்.
பழைய ஏற்பாட்டில் மிருகபலிகளை விளக்கும் லேவியராகம பலிகளின் அத்தனை அம்சங்களும் எழுத்துபூர்வமாக கிறிஸ்துவின் பலிமூலம் நிறைவேற்றப்படவில்லை என்பது புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களுக்குத் தெரிந்திருந்தபோதும், மோசேயின் பலிகளில் காணப்பட்ட முக்கியமான அம்சமொன்று அவர்களுடைய மனதில் தெளிவாகப் பதிந்திருந்தது. உதாரணத்திற்கு எபிரெயர் 9:6-15 வரையுள்ள வசனங்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் முக்கியமாக பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பாவநிவாரணபலி தினத்தில் நிகழும் சம்பவங்கள் விளக்கப்பட்டாலும், இவற்றின் மூலம் அடையாளமாக வெளிப்படுத்தப்படும் அம்சங்களை அடிப்படையாக வைத்தே கிறிஸ்துவின் பலியின் நிறைவேற்றம் அதன் என்றும் தொடருகின்ற தன்மை, பூரணத்துவம் ஆகியவற்றை நிருபத்தை எழுதியவர் விளக்குகிறார்.
எபிரெயர் 9:11-12 – கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
எபிரெயர் 9:23-24 – ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே. அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.
அதேபோல எபிரெயர் 13:10-13லும் அதை எழுதியவர் பழைய ஏற்பாட்டு பாவநிவாரணத்துக்கான பலிகளையும் அதன் அம்சங்களையும் கிறிஸ்துவின் பலியோடு ஒப்பிட்டு விளக்குகிறார். இங்கே ஆசாரியனுக்கான பலியைப்பற்றியும், அனைத்து மக்களுக்கான பலியைப்பற்றியும், அந்தப் பலியின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பாவநிவாரணத்துக்காகக் கொண்டுபோகப்பட்டு, அதனுடைய சரீரம், இரத்தம், தோல், கால்கள் என்பவை கூடாரத்துக்குப் புறம்பாகக் கொண்டுபோய் எரிக்கப்படுகின்றன என்றும் வாசிக்கிறோம். இந்த இடத்தில் நிருபத்தை எழுதியவர் மிருகபலியின் அத்தனை அம்சங்களையும் கிறிஸ்துவின் பலியோடு ஒப்பிட்டு விளக்கங்கொடுக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுவது அவசியம். மிருகத்தின் எந்தப்பாகங்களும் ஆசாரியனுக்குப் போய்ச்சேராவிட்டாலும் அவற்றை கிறிஸ்துவோடு ஒப்பிட்டு நிருபத்தை எழுதியவர் விளக்குகிறார். அதாவது மிருகத்தின் பாகங்கள் அனைத்தும் கூடாரத்துக்கு வெளியில் கொண்டுபோய் எரிக்கப்பட்டதுபோல கிறிஸ்துவும் வெளியே கொண்டுபோய் பலிகொடுக்கப்பட்டார்.
எபிரெயர் 13:10-13 – நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனைசெய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை. ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும். அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப்போகக்கடவோம்.
லேவியராகமத்தில் விளக்கப்பட்டுள்ள பலிகளின் மாதிரியின்படி இயேசு தன்னைப் பலியாக ஒப்புக்கொடுத்தார். அதன்படி அவர் நம்முடைய குற்றவுணர்வையும் பாவத்தையும் முற்றாகக் கழுவி கடவுளிடமும், பரிசுத்த ஸ்தலத்தினுள்ளும் கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் நாம் விசுவாசத்தின் முழுமையான நிச்சயத்தோடு அணுகவும், நம்முடைய இருதயங்களின் தீய மனச்சாட்சி தெளிக்கப்பட்டு நம்முடைய சரீரங்கள் தூய்மையான தண்ணீரால் கழுவப்படவும் கிருபை செய்தார்.
இந்த இடத்தில் நாம் இன்னுமொரு முக்கிய உண்மையையும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். லேவியராகமத்தில் விளக்கப்படுகின்ற பலிகள் அனைத்தும் எபிரெயருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் ‘பரலோகத்திலுள்ளவைகளுக்கு எடுத்துக்காட்டாக’ விளக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் அந்த உண்மை. கிறிஸ்துவின் மகத்தான பலியின் சாயலுள்ளதாக மோசேயின் இரத்தப்பலிகள் அமைந்திருக்க கிறிஸ்துவின் பலியினால் பரலோகத்திலுள்ளவைகளும் சுத்திகரிக்கப்பட்டன என்கிறார் எபிரெயருக்கு எழுதியவர். எபிரெயர் 9:23 – “ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே.”
இதிலிருந்து லேவியராகம பலிகளுக்கு எந்த அம்சம் முக்கியமானதாக இருந்ததோ அதுவே கிறிஸ்துவின் பலியிலும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்ற உண்மையை மறுபடியும் நினைவில்கொள்ள வேண்டும். லேவியராகமபலிகள் கழுவுதலை அடிப்படையாகக் கொண்டிருக்குமானால் அதன் ஒப்பீட்டுச் சாயலான கிறிஸ்துவின் பலி அதை எந்தளவுக்கு அவசியமானதாகக் கொண்டு அமைந்திருக்கவேண்டும் என்பதை சிந்திக்கவேண்டும். அதுவும் கிறிஸ்துவின்பலி அரைகுறையானதும், இக்காலத்துக்கு மட்டுமுரியதும், தற்காலிகமானதும், இன்னொன்றிற்கு ஒருவரைத் தயாரிப்பதும், ஓரிடத்திற்கு மட்டுமே பொருந்துவதுமானதல்ல; அது பூரணமானதும், நித்தியமானதும், உண்மையானதும், முடிவானதுமாகும். லேவியராகம பலிகளைப் போலல்லாமல் அதன் ஒப்பீட்டுச் சாயல் நடைமுறையில் நிதர்சனமாகப் பயன் தருவது. எபிரெயர் 9:14ல் இந்தக் கருத்தே முன்வைக்கப்படுகிறது.
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
கிறிஸ்துவின் பலியின் அடிப்படையிலேயே லேவியராகம பலிகளுக்கு நாம் விளக்கங் கொடுக்கவேண்டும், ஏனெனில் அவை கிறிஸ்துவின் பலியின் அடிப்படையிலேயே அதற்குச் சாயலாக தரப்பட்டிருக்கின்றன. லேவியராகம பலிகள் வெறும் சாயலாக மட்டும் இருப்பதனால் கிறிஸ்துவின் பூரணமான பலியோடு ஒப்பிடும்போது அவற்றின் குறைபாட்டை நாம் உணரவேண்டும். லேவியராகம பலிகள் வெறும் சாயலாக அடிப்படையில் அவற்றின் பயனைப் பொறுத்தளவில் குறைபாடுடையதாக இருப்பதால்தான் கிறிஸ்துவின் பூரணப்பலியில் லேவியராகம பலிகளில் காணப்படும் அத்தனை அம்சங்களும் ஒட்டுமொத்தமாக நிறைவேற்றப்படவில்லை என்பதையும், அவ்வாறு நிறைவேறுவது அவசியமில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். பழைய ஏற்பாட்டில் பலிகொடுக்கிறவனுக்கும் பலிக்கும் இடையிலும், பலிகொடுக்கிறவனின் பொறுப்புக்கும், பலியின் இரத்தஞ் சிந்துதலின் இடையில் காணப்படும் ஒப்பீட்டுக் குறைபாடுகளே கிறிஸ்துவின் பலியில் அத்தகைய எந்தவிதக் குறைபாடுகளும் இல்லாமல் இருப்பதை நிலைநிறுத்த அவசியமாயிற்று. இந்த இடத்தில் ஒப்பீடுகள் எப்போதுமே வெறும் ஒப்பீடுகளாக மட்டுமே இருக்கமுடியும் என்பதையும், நிதர்சனமானதன் நேரடிப்பயனை ஒப்பீட்டால் தரமுடியாது என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்து பாவத்துக்கு பலியாகத் தன்னை ஒப்புக்கொடுத்த செயல் விளக்கும் ஒரு முக்கிய உண்மை இன்று அதிகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. கிறிஸ்து தன்னை பலியாகக் கொடுத்தபோது ஆசாரியனாக இருந்து பலியாகத் தந்தார் என்பதுதான் அந்த உண்மை. வேறு எவராலும் பலியாக ஒப்புக்கொடுக்கப்படாமல் தானே தன்னை பலியாக அவர் ஒப்புக்கொடுத்தார். இந்த உண்மையை லேவியராகம பலிகளில் சாயலாக விளக்கியிருக்க முடியாது. பழைய ஏற்பாட்டில் ஆசாரியனோ அல்லது பலிகளோ தங்களைத் தாங்களே ஒப்புக்கொடுக்கவில்லை. ஆனால், கிறிஸ்துவில் இந்த இரண்டையும் நாம் அவதானிக்கிறோம். இந்தவிதத்தில் கிறிஸ்துவின் பலியில் இவை இரண்டுமே தனித்துவமான முறையில் காணப்படுவதோடு, அவருடைய ஆசாரியத்துவப் பணியின் எல்லைகடந்த பூரணத்துவத்தையும் கவனிக்கிறோம். இந்த ஆசாரியத்துவப் பணியின் அடிப்படையிலேயே அவர் பாவங்களுக்குத் தன்னை பலியாகத் தந்திருக்கிறார். உண்மையாகவே அவர் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிதான், அதேவேளை உலகத்தின் பாவத்தை நீக்குவதற்காகத் தன்னை அடிக்கப்படுவதற்காக ஒப்புக்கொடுத்த ஆசாரியராகவும் இருக்கிறார். இந்த இரண்டும் அற்புதமாக இணைவதிலிருந்தே அவருடைய சிறப்பான பலியின் தன்மையை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. ‘எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் அவர் தன்னை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார்’ என்று நாம் அடிக்கடி சொல்லுகிற வார்த்தைப்பிரயோகத்தில் இந்த உண்மை அப்பட்டமாக அடங்கியிருந்தபோதும் அதை நாம் ஆழமாக உணர்ந்து போற்றுவதில்லை. இந்த வார்த்தைப்பிரயோகத்தின் முழு அர்த்தத்தையும், எவரும் எண்ண முடியாத எண்ணில் அடங்காத பெருந்தொகையினர் மேல் இறங்கியிருந்த தெய்வீக கோபத்தை கிறிஸ்து தன்னுடைய இறுதி சிலுவைபலியின் மூலம் பூரணமாக நிறைவேற்றியிருப்பதில் முடிவாகக் காண்கிறோம்.
இறுதியாக, கிறிஸ்துவின் ஆசாரியத்துவப் பணியின் தன்மையை உணர்கிறபோதுதான், நாம் அவருடைய ஒரே பலி அவர் மீட்பராக இருந்து எப்போதும் தொடர்கின்ற அவருடைய ஆசாரியத்துவப் பணியோடு இணைந்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. மெல்கிசெதேக்குவைப்போல அவர் என்றும் ஆசாரியராக இருக்கிறார். பலிகொடுப்பதற்காக வரும் ஆசாரியராக அல்லாமல், ஒரே தடவை செலுத்தப்பட்ட பலியின் அத்தனை அம்சங்களையும் ஆசாரியராக இருந்து நிறைவேற்றிய தொடர்ந்திருக்கும் ஆசாரியராக கிறிஸ்து இன்று இருக்கிறார். இந்தவகையில் அவர் தன்னுடைய மக்களுக்காக இடைவிடாமல் ஜெபிக்கும் ஆசாரியராக இருக்கிறார். இடைவிடாமல் தொடர்ந்து என்றும் பயனளித்து வரும் அவருடைய ஜெபங்கள், ஒரே தடவை செலுத்தப்பட்ட அவருடைய பலியோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தவகையில் மாபெரும் ஆசாரியராக இருந்தே நாம் விசுவாசிக்கும் கிறிஸ்து தன் பலியை நிறைவேற்றியதோடு தன் தொடரும் ஆசாரியத்துவப் பணியையும் செய்துவருகிறார்.
Sir, I don’t know how you managing time to do all these work,God bless you.Vivek.S
LikeLike