இளமையான 25 வயது!

எளிமையான முறையில் 1995ம் வருடம் எளிய முயற்சியாக திருமறைத்தீபம் உருவானது. நண்பர்கள் சிலரின் ஊக்குவிப்பினால் பெரும் பணச்செலவில்லாமல் ஆரம்பமான இதழ் பணி இன்றும் சுயநலநோக்கமெதுவுமின்றி வளர்ந்து, விரிந்து, பரந்து உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழ் கிறிஸ்தவர்கள் வாசித்துப் பயனடையும் ஆவிக்குரிய இதழாக இருந்துவருகிறது. இந்த இருபத்தி ஐந்து வருடங்களும் எத்தனை வேகமாக ஓடிவிட்டன. இதழ் பணியில் ஈடுபட்டு வருகின்ற எவருமே இத்தனை வருடங்களுக்கு இதழ் பணி செய்யப்போகிறோம் என்று நினைத்தும் பார்த்ததில்லை.

எதையும் மறந்துவிடுவது என்பது மனித சுபாவம். எதிர்காலத்தை நோக்கி அதிகளவு சிந்திக்கும் மனிதன் ஒருநாளும் கடந்தகாலத்தை எண்ணிப்பார்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை. அது மனிதனைப் பிடித்திருக்கும் வியாதிகளில் ஒன்று. ஆவிக்குரிய மனிதன் நிச்சயம் கடந்தகாலத்தை நினைத்துப் பார்க்கிறவன். வேதத்தில் தீர்க்கதரிசிகள் முதல் இயேசுவும், அவருடைய அப்போஸ்தலர்களும் வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்கவேண்டியதன் அவசியத்தை அடிக்கடி வற்புறுத்தியிருக்கிறார்கள். ஏன், அப்படித் திரும்பிப்பார்ப்பது அவசியம் என்று கேட்கிறீர்களா? திரும்பிப் பார்க்கிறபோதுதான் நாம் செய்திருக்கும், செய்து வரும் தவறுகளைத் திருத்திக்கொள்ள முடியும்; திரும்பிப் பார்க்கிறபோதுதான் நாம் அடைந்திருக்கும் இரட்சிப்பின் மகத்துவத்தை நாம் நினைத்துப் பார்க்க முடியும்; திரும்பிப்பார்க்கிறபோதுதான் பரிசுத்தவாழ்க்கையில் நாம் போகவேண்டிய பாதையின் தொலைவு நமக்குப் புரியும். திரும்பிப்பார்ப்பது அந்தளவுக்கு ஆவிக்குரிய மனிதனுக்கு அவசியம். திரும்பிப்பார்க்க மறுக்கின்ற மனிதன் திருந்துவதுமில்லை; உயர்வதுமில்லை.

வருடங்கள் உருண்டோடிப் போய்விட்டாலும், 25 வருட இதழ் பணி நிறைவுற்றுவிட்டாலும் பின்நோக்கிப் பார்க்கின்றபோது நாம் எடுத்துவைத்திருக்கும் பாதையின் ஆரம்ப இலக்கிலிருந்து இன்றுவரை தவறாது போய்க்கொண்டிருக்க கர்த்தர் நம்மை வழிகாட்டியிருப்பதற்காக அவருக்கு முதலில் நன்றிகூறவேண்டும். அந்த ஆரம்ப இலக்கு என்ன தெரியுமா? வேதபோதனைகளை அதில் எந்தவித சமரசப்போக்கிற்கும், முரண்பாட்டிற்கும் இடங்கொடுக்காமல் உள்ளது உள்ளபடியே எழுதி வாசகர்களை வழிநடத்த வேண்டும் என்பதுதான். எல்லாத் திருச்சபைப்பிரிவுகளுக்கும் ஏற்றவிதத்தில் அவர்களுடைய நம்பிக்கைகளுக்கும் போக்கிற்கும் எதிரானவிதத்தில் எதையும் எழுதிவிடாமல் அவர்களோடு ஒத்துப்போகும் விதத்தில் மட்டும் எழுதிவரும், வேதத்தை வைத்து விபச்சாரம் பண்ணும் வேலையை ஒருபோதும் செய்யக்கூடாது என்பதே அந்த இலக்கு. இதைப் பவுல் 2 கொரிந்தியர் 4:2ல் சொல்லியிருக்கிறார்.

வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.

இந்த வசனத்தின் உட்கருத்து தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிப்பட்ட போதும் அது உள்ளது உள்ளபடியே கிரேக்கத்தில் இருப்பதுபோல் மொழிபெயர்க்கப்படவில்லை. இந்த வசனத்தை ESV பின்வருமாறு மொழிபெயர்த்திருக்கிறது.

But we have renounced disgraceful, underhanded ways. We refuse to practice cunning or to tamper with God’s word, but by the open statement of the truth we would commend ourselves to everyone’s conscience in the sight of God.

வடிவம் மாற்றப்பட்ட திருமறைத்தீபத்தின் முதல் இதழ்
ஜனவரி 2002

இந்த வசனத்தில் இரண்டு வார்த்தைப்பிரயோகங்களைக் கவனிப்பது அவசியமாகிறது. முதலாவது to tamper with God’s word. இதையே வேதத்தை வைத்து விபச்சாரம் செய்வது என்று சொன்னேன். அந்தவிதத்திலேயே KJV, NKJV, NASB போன்ற ஆங்கில மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்த்திருக்கின்றன. அவை இதை adultrating the word of God என்று மொழிபெயர்த்திருக்கின்றன. இதன் கிரேக்க மூலம் அந்த அர்த்தத்தையே கொண்டிருக்கிறது. அதாவது, மெய்யான வசனத்தைத் திரித்துப் பொய்யானதாக மாற்றுவது என்று அதற்கு அர்த்தம். ஒரு விபச்சாரி தன்னுடைய செயற்கையான போலி அழகால் கறைபட்ட சரீரத்தோடு ஒருவனை மயக்குகிறபோது அவள் மாயமானைப் போல நடந்துகொள்கிறாள். ஒரு பிரசங்கி வேதவசனத்தை அதில் உள்ளதை மறைத்து, அதைத் திரித்து தன் வார்த்தை ஜாலத்தால் அதில் காணப்படாத பொய்யை உண்மையைப்போல் தெரியும்படி ஆத்துமாக்களுக்கு முன் பிரசங்கிக்கும்போது அவன் வேதத்தை வைத்து விபச்சாரம் செய்கிறான். இதைத் தானோ தன்னைச் சார்ந்து நிற்கும் அப்போஸ்தலர்களோ ஒருபோதும் செய்யவில்லை என்கிறார் பவுல்.

அத்தோடு இந்த வசனத்தின் இன்னுமொரு வார்த்தைப்பிரயோகத்தை நாம் கவனிக்கவேண்டும். தான் எதைச் செய்வதை இலக்காகக் கொண்டிருக்கவில்லை என்பதை மட்டும் பவுல் விளக்காமல் கர்த்தருக்கு விசுவாசமாக இருந்து ஒரு பிரசங்கியாகத் தான் எதைச் செய்துவருகிறேன் என்றும் பவுல் சொல்லுகிறார். இதை ESV, ‘by the open statement of the truth’ என்று மொழிபெயர்த்திருக்கிறது. அதாவது சத்தியத்தை உள்ளது உள்ளபடியே மனிதர்களுக்கு முன் வெளிப்படுத்துவதாகப் பவுல் கூறுகிறார். எந்தவிதத்திலும் வேத வசனங்களை வைத்து வியாபாரம் செய்வதை அடியோடு தவிர்த்து கர்த்தர் தன் வசனத்தில் சொல்லியிருப்பதை மட்டும், அதிலிருப்பதைப்போலவே மனிதர்களுக்கு பிரசங்கம் செய்துவருவதைப் பவுல் தன் ஆத்மீக இலக்காகக் கொண்டிருந்தார்.

திருமறைத்தீபத்தின் 10வது ஆண்டு நிறைவு விழா இதழ்
ஜூலை 2005

திருமறைத்தீபத்தின் மூலம் பவுல் சொல்லியிருப்பதை இதழை வெளியிட்டுவரும் நாங்கள் செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆரம்பத்திலிருந்தே இதழ் மூலம் நாம் விசுவாசிக்கும் சத்தியத்தை நாம் வெளிப்படுத்தாமலிருக்கவில்லை. சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றும் சபைப்பிரிவைச் சார்ந்தவர்கள் நாங்கள். அதை மறைத்து எங்களை வேறுவிதத்தில் காட்ட நாம் ஒருபோதும் துணியவில்லை. அந்த சத்தியங்களே வேதத்தில் நாம் காணும் வரலாற்றுபூர்வமான, அப்போஸ்தலர் காலத்திலிருந்து வருகின்ற வேதஉண்மைகள் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தி வருகிறோம். நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் அது அருகிக் காணப்படுகிறது என்பதற்காகப் பரவலாக உண்மையைப் போலத் தோற்றமளித்து வரும் பொய்க்கு நாம் ஒருபோதும் அடிபணிந்து வக்காலத்து வாங்கத் துணியவில்லை. இந்த இருபத்தி ஐந்து வருடகாலத்தில் எத்தனையோ புதுப்புதுப் போதனைகள் வந்துபோயிருக்கின்றன. அவற்றின் மாயத்தோற்றத்தில் மயங்கி விழுந்துபோன சபைகள் அநேகம். கிறிஸ்தவத்தில் சைக்கோலஜியை நுழைத்து அதன் அடிப்படையில் ஆத்மீகப் பிரச்சனைகளுக்கு ஆலோசனை கொடுக்கும் புதிய முறை இக்காலகட்டத்தில் உருவானது. அதற்கு அடிமையான சபைகள் அநேகம். பின்னால் இது மடிந்துபோனது.

அதற்குப் பிறகு வந்தது புதிய உடன்படிக்கை இறையியல். இது பழைய அன்டிநோமியனிச பாதைக்குப் புதுப்பெயர். இது பத்துக்கட்டளைகளின் பயன்பாட்டையும், ஓய்வு நாளை ஆண்டவருடைய நாளாக அனுசரிப்பதையும் எதிர்த்தது. அதற்குப் பிறகு இமேர்ஜன்ட் இயக்கம் என்று ஒன்று உருவாகி திருச்சபைகளைக் குழப்பின. அதுவும் செயலிழந்தது. அப்போஸ்தலர் 28 சபைகள் இதற்குப் பிறகு உருவாக ஆரம்பித்தன. அதற்குப் பிறகு வந்ததே புதிய கல்வினிசம். நாம் எப்போதுமே புதிதாக உருவாவதையெல்லாம் கர்த்தரின் கிரியையாகப் பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. எது புதிதாக உருவெடுத்தாலும் அதைக் கொஞ்சக்காலம் பொறுத்திருந்து ஆராய்ந்து பார்க்கும்போது அதன் மெய்தன்மை புலப்படும் என்ற நிதானத்தோடு செயல்பட்டு வந்திருக்கிறோம்.

மேலைநாடுகளில் இன்று ‘நியூ கல்வினிசம்’ என்ற பெயரில் சீர்திருத்த போதனைகளையும் கெரிஸ்மெட்டிக் போதனைகளையும் இணைத்து ‘சீர்திருத்த கெரிஸ்மெட்டிக்’ எனும் புதுப் பெயரைச் சூட்டி சீர்திருத்தவாதம் கெரிஸ்மெட்டிக் போதனைகளுக்கு எதிரானதல்ல என்று காட்டும் ஒரு புதுப்போக்கு புறப்பட்டபோதும் அந்த மாயமானுக்குப் பின்னால் போய் ஏமாந்த சீதையாக நாமிருந்துவிடவில்லை. கிறிஸ்தவ வரலாற்றில் காலத்துக்குக் காலம் மாயமான்கள் எழுந்து நடமாடியிருந்திருப்பது நமக்குத் தெரியாததல்ல. சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியவர்களும் ஆணித்தரமாக சத்தியத்தை மட்டும் போதிக்கவில்லை; அதேவிதத்தில் பொய்யை இனங்கண்டு எதிர்த்தும் வந்திருக்கிறார்கள். அதைத் திருமறைத்தீபம் தொடர்ந்து செய்துவர முயற்சிக்கும். சத்தியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சுயநலத்துக்காக ஊழியம் செய்து வருவதையும், இதழூழியத்தை சுயவிளம்பரத்துக்காகப் பயன்படுத்தாமல் சத்தியப்பரப்புதலுக்காக மட்டும் பயன்படுத்தவும் தொடர்ந்து துணைபுரிந்து வரும் சர்வவல்லவராகிய கர்த்தருக்கு நன்றி கூறுகிறோம்.

திருமறைத்தீபத்தின் 75வது இதழ்
அக்டோபர் 2014

இருபதாவது வருட முடிவில் ஒரு ஆக்கத்தில் இத்தனைக் காலமாக இதழ் மூலம் கர்த்தர் செய்திருக்கும், செய்து வரும் பணிகளைக் குறிப்பிட்டு விளக்கியிருந்தேன். அரைத்த மாவையே மீண்டும் அரைக்க விரும்பவில்லை. இருந்தாலும் கர்த்தர் தொடர்ந்து செய்துவருகின்ற அற்புதமான செயல்களை நினைத்துப் பார்த்து அவருக்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியவில்லை. நாம் வாழ்ந்து வரும் பின்நவீனத்துவ காலம் எதையும் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே வெற்றியாகக் கருதி வருகிறது. அந்தப் பார்வையே கிறிஸ்தவ உலகையும் ஆண்டுவருகிறது. ஆயிரக்கணக்கில் கூடிவரும் சத்தியப் புரட்டல்காரர்களான பெனிஹின்னின் கூட்டத்திலும், பால் தினகரனின் கூட்டத்திலும் கர்த்தர் இருந்துவிட்டால் கர்த்தருக்குத்தான் எத்தனை அவமானம், அவமரியாதை! கூட்டம் இருக்குமிடத்திலெல்லாம் கர்த்தர் இல்லை என்பதற்கு பாகால் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 400 போலித்தீர்க்கதரிசிகள் உதாரணம் இல்லையா? ஆனால், தனித்து நின்றிருந்த எலியாவோடும் எலிசாவோடும் கர்த்தர் இருந்தார். வேதம் போதிக்கும் மீட்பின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தாலும் அவருடைய மக்களை மீதமானவர்களாகவே (Remnant) அது விளக்குகிறது. பெருந்தொகையான இஸ்ரவேலர் மத்தியில் தேவனுடைய மக்கள் மீதமானவர்களாகவே இருந்திருக்கின்றனர். விசேஷம் என்னவென்றால் குறைந்த எண்ணிக்கையுள்ளவர்களைக் கொண்டே கர்த்தர் எப்போதும் பெருங்காரியங்களைச் சாதித்திருக்கிறார். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், இந்த இதழுக்குப் பின் ஆரவாரிக்கும் பெருங்கூட்டமில்லை; ஆனால் விசுவாசமுள்ள செயல்வீரர்கள் இருக்கிறார்கள். முகத்தாட்சண்யம் காட்டி சுயலாபத்துக்காக எங்களுக்கு சோப்புப்போடுகிறவர்கள் இல்லை; தீவிரமாக ஜெபித்து சுயத்தை இழந்து உழைக்கிறவர்கள் இருக்கிறார்கள். வெறும் வார்த்தைகளைக் கொட்டிப் போலிப்பாராட்டுதல்களை அள்ளித்தெறித்து ஏதும் கிடைக்காதா என்று பார்த்துக்கொண்டிருக்கும் கூட்டம் இல்லை; தங்களால் முடிந்ததையெல்லாம் கர்த்தருக்காக செய்யவேண்டும் என்ற தீவிர வாஞ்சையும், வைராக்கியமுமுள்ளவர்கள் இருக்கிறார்கள். இது உலகம் பாராட்டும் பெருங்கூட்டம் இல்லை; உண்மையும், அன்பும் குடிகொண்டிருக்கும் மீதமானவர்கள் மட்டுமே.

திருமறைத்தீபத்தின் 20வது ஆண்டு நிறைவு விழா இதழ்
ஜனவரி 2015

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து திருமறைத்தீபத்தை அச்சிடும் பணி இந்தியாவுக்கு மாற்றப்பட்டது. இந்திய வாசகர்களே அதிகமானவர்களாக இருப்பதால் அவர்களை இலகுவாக சென்றடையவும், இதழ்குழுவோடு அவர்கள் இலகுவாகத் தொடர்புகொள்ளவும் இந்த மாற்றத்தைச் செய்ய ஒப்புக்கொண்டோம். இந்தியாவில் நம்மோடு இணைந்துழைக்கும் அருமை நண்பர்களுக்கு எமது நன்றிகள்! ஸ்ரீ லங்காவில் இதழை அச்சிட்டு விநியோகித்து வருகிறவர்களுக்கும் எங்கள் நன்றிகள்! திருமறைத்தீபத்தை வந்துபோய்க்கொண்டிருக்கிற எல்லா இதழ்களையும்போல் பார்க்காமல் அதன் தனித்துவத்தை உணர்ந்து வாசித்துப் பயன்பெற்று வரும் வாசகர்களுக்கு இதழ்குழு தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறது. பெரியவர்களில் இருந்து 21ம் நூற்றாண்டு வாலிபர்கள்வரை வாசகர்களை எட்டியிருக்கிறது இதழ். இதழ் மீது அதீத காதல்கொண்டு வாசித்து வருகிறவர்களையும் நானறிவேன். உங்களுக்கெல்லாம் தொடர்ந்தும் சத்தியத்தை சத்தியமாக எழுதி வெளியிட்டு கர்த்தரின் பாதையைக் காட்டும் இந்தப்பணியில் தளர்வடையாமல் நாங்கள் தொடர எங்களுக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s