ஜோன் பனியனின் மோட்சப் பிரயாணம் ஒரு பியூரிட்டன் இலக்கியம். அநேகருக்கு அதுபற்றிய புரிதல் இல்லை. காரணம், வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் அடையாளமே இல்லாததொரு கிறிஸ்தவம் நம்மினத்தில் இருந்து வருவதுதான். 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருச்சபை சீர்திருத்தத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவப் பெருமகன்களே பியூரிட்டன்கள் என்று கிறிஸ்தவ வரலாற்றில் அழைக்கப்படுகிறார்கள். ஜோன் பனியன் ஒரு பியூரிட்டன் பாப்திஸ்து. தற்கால மொழிநடையில் அவர் ஒரு சீர்திருத்த பாப்திஸ்து. சீர்திருத்தப் போதனைகளில் ஊறித்திளைத்திருந்தவர் ஜோன் பனியன். பியூரிட்டனான ஜோன் ஓவனைப்போலக் கல்வியில் தேர்ந்தவராக இராதிருந்துவிட்டாலும் ஜோன் ஓவனுக்குப் பரிச்சயமானவர்; வேதத்தில் ஊறித்திளைத்தவர். ஜோன் ஓவன், பனியனில் பெருமதிப்பு வைத்திருந்தார். பனியனின் பிரசங்க வரம் தனக்குக் கிடைக்குமானால், தன்னுடைய கல்வியனைத்தையும் தாரைவார்த்துப் பனியனுக்குத் தந்துவிடத் தயாராக இருக்கிறேன் என்று ஓவன், இங்கிலாந்தின் பாராளுமன்றத் தலைவராக இருந்த ஒலிவர் குரோம்வெல்லிடம் கூறியிருக்கிறார். இது பனியனுடைய பிரசங்கத்தைக் கேட்டபின் ஓவன் சொன்னது. மோட்சப் பிரயாணம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தபோது பனியனைப் பற்றிய விபரங்களையோ, அவருடைய இறையியல் பின்னணியையோ அறியாதவர்கள் அவற்றை விளக்கமுயலவில்லை. மோட்சப் பிரயாணத்தை வாசித்திருக்கிறவர்களும் ஜோன் பனியனின் இறையியல் பின்னணியை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.