சமீபத்தில் நவம்பர் மாதத்தில் தமிழகம் சென்றபோது சேலத்தில் கண்களில் பட்டது அங்கு நடந்துகொண்டிருந்த புத்தகக் கண்காட்சி. உடனே வாகன ஓட்டியை நிறுத்தும்படிச் சொல்லி அதற்குள் நுழைந்தேன். அன்றைய தினம் பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் கண்காட்சிக்கு வந்திருந்தனர். பள்ளி ஆசிரியர்கள் அதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் போல் தெரிந்தது. மாணவர்களுக்கு இந்தவகையில் புத்தகங்களை அறிமுகம் செய்து வைப்பது மிகவும் நல்ல காரியம். நான் படித்த ஆரம்ப காலங்களில் என் ஆசிரியர்கள் புத்தகங்களில் நான் நாட்டம் காட்டுவதைக் கவனித்து என்னை ஊக்குவித்திருக்கிறார்கள். அன்று இத்தகைய புத்தகக் கண்காட்சி ஒன்றையும் நான் கண்டதும் இல்லை; உள்ளே நுழைந்ததும் இல்லை. இக்காலத்து மாணவர்களுக்கு வசதி அதிகம்தான். இருந்தும் அவர்கள் வாசிக்க வேண்டுமே!