நல்ல நிலம்

மத்தேயு 13 அதிகாரத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விளக்கியிருக்கும் விதை நிலங்களின் உவமையை ஆராய்ந்து வருகிறோம்.

மத்தேயு 13:3-9

அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

ஒரு சகோதரர் என்னிடத்தில் இந்த உவமைகளைப் புரிந்து கொள்ளுவது கடினமான காரியமா? என்று கேட்டார். ஆண்டவர் உவமைகளாகப் பேசியதற்குக் காரணம் இருதயம் கடினப்பட்டு போயிருக்கிற யூதர்களுக்கு அவை புரியக் கூடாது என்பதற்காகதான் என்று அவரே சொன்னார். ஆனால் இந்த உவமைகளை நிச்சயமாக அவருடைய சீடர்கள் புரிந்துகொண்டிருந்திருக்கிறார்கள். உவமைகள் இலக்கியத்தில் வருகின்ற ஒருவிதமான அணி வகையாகும். எந்த மொழியாக இருந்தாலும் அதில் உரைநடை இருக்கிறது. உரைநடை என்பது எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் தெளிவாக வாசித்து விளங்கிக்கொள்ளக் கூடிய நடையாகும். உரைநடையை விளங்கிக் கொள்வதற்குக் கூட வார்த்தைகளுக்கான அர்த்தம் நமக்குத் தெரியவேண்டும். வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாவிட்டால் ஒரு வசனத்தைப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் உவமை வித்தியாசமானது. உவமை என்பது ஒரு கதையை அல்லது ஒரு எடுத்துக்காட்டை அல்லது ஒரு உதாரணத்தைச் சொல்லி அந்த உதாரணத்தின் மூலமாக ஒரு விஷயத்தை விளக்குவதாகும்.

ஆகவே உவமையை எப்படி விளங்கிக்கொள்ள வேண்டும், உரைநடையை எப்படி விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்கு எல்லா மொழிகளிலுமே சில விதிகள் இருக்கின்றன. வேதத்தில் உரைநடையையும் சரி அல்லது உவமைகளையும் சரி அவற்றை விளங்கிக் கொள்வதற்கு வேத விளக்க விதிகளை நாம் பயன்படுத்த வேண்டும். பிரசங்கம் செய்கிறவர்களுக்கு அவைகளெல்லாம் தெரிந்திருக்க வேண்டியது மிக மிக அவசியம். வேத விளக்க விதிகள் தெரியாமல் உவமைகளை விளக்க முடியாது. முக்கியமாக உவமை என்று வருகிற பொழுது அந்த உவமை எப்பொழுதுமே ஒரு முக்கியமான போதனையை மட்டும் கொடுக்கும். அந்த முக்கியமான போதனையைப் பெற்றுக்கொள்ளுவது தான் நம்முடைய வேலை. அந்த முக்கியமான போதனையை விட்டுவிட்டு அந்த உவமையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற பலவிதமான உதாரணங்கள் ஒவ்வொன்றிற்கும் நாம் விளக்கங்கள் கொடுக்கப் போகக்கூடாது. ஆகவே எந்த முக்கியமான போதனையைத் தருகிறது என்பதை அந்த உவமையே விளக்கும். இங்கும் கூட ஆண்டவர் ஒரு உவமையைச் சொல்லிவிட்டு அதற்கான பொருளை அவரே கொடுத்துவிட்டார். ஆகவே அதற்கு வேறு வித்தியாசமான பொருளை நாம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த உவமையில் முதல் மூன்று நிலங்களை நாம் இதுவரை ஆராய்ந்திருக்கிறோம்.

நான் முந்திய ஆக்கங்களில் சொன்னபடி விதைக்கிறவனின் உவமை என்றே பொதுவாக இதைச் சொன்னாலும் விதை நிலங்களின் உவமை என்று இதை அழைப்பதே சரியாக இருக்கும். ஏனென்றால் இந்த உவமை விதை நிலங்களைத்தான் நமக்கு அதிகமாக விளக்குகின்றது. இந்த உவமையில் முதலாவது உதாரணமாக வழியருகே விழுந்த விதை என்று நாம் பார்க்கிறோம். வழியருகே நிலத்தைப் போல இருதயத்தைக் கடினப்படுத்தி வார்த்தையை அலட்சியம் செய்கிறவர்களுக்கு அந்த வார்த்தைகளினாலே எந்தவிதப் பயனும் கிடைக்காது என்று ஆண்டவர் சொன்னார். கற்கள் நிறைந்த நிலத்தைப் பார்த்தால் மண்ணுக்கு அடியில் மண் ஆழமாக இருந்ததால் அந்த கற்களும் சூரிய வெப்பத்தினால் மிகவும் வெப்பமடைந்து, அதில் முளைக்கின்ற விதை மேலிருந்து வருகிற சூரியக் கதிர்களினாலும் பாதிக்கப்பட்டுத் தொடர்ந்து நிலைக்க முடியாமல் அழிந்து விடுகிறது. இது சிலர் வசனத்தைக் கேட்டவுடனே சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டாலும், வசனத்தின் காரணமாக சில காலங்களுக்குப் பிறகு வாழ்க்கையில் ஏற்படுகின்ற துன்பங்களைத் தாங்க முடியாமல் சத்தியத்தை விட்டு விலகிப் போய்விடுவார்கள் என்பதைக் காட்டுகிறது. முட்புதர்கள் நிறைந்த நிலத்தில் அந்த முட்புதர்களை விவசாயி அகற்றியிருந்தாலும் ஆழத்திலே காணப்படுகின்ற வேர்கள் அகற்றப்படாததனால் அவையும் இந்த விதையோடு சேர்ந்து வளர்கின்றன. சில காலம் போன உடன் வளர்ந்து வருகின்ற முட்புதர்கள் இந்த விதையின் மூலமாக வளர்கின்ற செடியை வளர முடியாமல் செய்து அதை இல்லாமல் ஆக்கி விடுகின்றன. இது உலகப் பொருள்களின் மேல் ஏற்படுகின்ற ஆசையினாலும் பண ஆசையினாலும், உலகத்தின் இன்பங்களினாலும் இருதயம் பாதிக்கப்பட்டு, ஆண்டவருக்கும் வசனத்துக்கும் எந்த இடமும் கொடுக்காமல் சில காலம் ஒரு கிறிஸ்தவனைப் போலத் தோற்றமளித்து வாழ்ந்து விட்டு அதன் பிறகு சத்தியத்தை விட்டு விலகிப் போய்விடுவார்கள் என்பதைக் காட்டுகிறது. ஆகவே இந்த மூன்று விதை நிலங்களைப் போல இருக்கக் கூடாது என்பதுதான் இதிலிருந்து ஆண்டவர் நமக்குக் கற்றுத்தருகிற பாடமாகும்.

இந்த ஆக்கத்தில் நான்காவது நிலத்தைக் குறித்து சிந்திப்போம்.

மத்தேயு 13:8

சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.

இருபத்தி மூன்றாவது வசனத்தில் ஆண்டவர் அதற்கான விளக்கம் கொடுக்கிறார்.

மத்தேயு 13:23

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.

இதுவரையும் நாம் பார்த்த விதமாக முதலாவதாக நிலத்தையும் அதன் தன்மையையும் ஆராய்வோம். இரண்டாவதாக அது யாரை குறிப்பதாக இருக்கின்றது என்பதை ஆராய்வோம். கடைசியாக இதன் மூலம் அடையும் பயன்பாடுகளைக் கவனிப்போம்.

முதலாவதாக, நல்ல நிலம் எது?

இது ‘நல்ல நிலம்’ என்று மத்தேயு 13:8ல் ஆண்டவரே சொல்லுகிறார். இதையே மாற்கு 4:8வது வசனத்திலும், லூக்கா 8:8வது வசனத்திலும் சொல்லப்படுகிறது. ஆகவே இது புரிந்து கொள்வதற்குக் கஷ்டமானதல்ல. இது நல்ல நிலம். வழியருகே நிலத்தைப் போலக் கடினமானதாக இல்லாமல், கற்கள் நிறைந்த நிலத்தைப் போல மண்ணின் அடியில் கற்கள் நிறைந்ததாக இல்லாமல், முட்செடிகள் உள்ள நிலத்தைப் போலில்லாமல் காணப்படும் நல்ல நிலம் என்று இந்த வசனத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு விவசாயி கண்ணில் படுகிற இடத்தில் எல்லாம் விதையைத் தூவி விடமாட்டான். அனுபவமுள்ள எந்த விவசாயியும் அதைச் செய்யமாட்டான். அவன் முதலில் செய்கிற காரியம் அந்த நிலத்தைப் பண்படுத்துவதுதான். ஏனென்றால் அந்த நிலத்தில் விதை விதைக்கப்பட்டு, அது வளர்ந்து செழித்துப் பலன் கொடுப்பதற்கு அதை உழுது பண்படுத்த வேண்டியது அவசியம். அதன் காரணமாக அந்த நிலம் விதைப்பதற்குத் தயாராக இருக்கும் நல்ல நிலமாக இருக்கிறது. முதல் மூன்று நிலங்களிலும் காணப்பட்ட பிரச்சனைகள் இந்த நிலத்தில் இல்லை. இதை அவ்வாறு பார்ப்பது தான் சரியானது. ஆண்டவர் இதை நல்ல நிலம் என்றே அழைத்திருக்கிறார். இந்த நிலம் மற்ற மூன்று நிலங்களோடு ஒப்பிடப்படுகிறது. அப்படி ஒப்பிட்டுப் பார்க்கிறபொழுது வழியருகே போன்ற நிலமாக இல்லாமல், கற்கள் நிறைந்த நிலமாக இல்லாமல், முட்புதர்கள் காணப்பட்ட நிலமாக இல்லாமல், அங்கு விதைக்கப்படுகிற விதை வளர்ந்து செழித்து பலன் கொடுப்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லாத நல்ல நிலமாக இது இருக்கிறது.

எந்தவொரு விவசாயியும் இப்படிப்பட்ட நல்ல நிலத்தில் விதைக்கிறபோதும் அவன் காலா காலம் செய்ய வேண்டிய பணிகள் இருக்கின்றன. நல்ல நிலமாக இருப்பதனால் விதை சாதாரணமாக வளர்ந்து பலன் கொடுக்கும் என்று நாம் நினைக்கக் கூடாது. அதில் குறிப்பிட்ட காலத்தில் களைகளைப் பிடுங்க வேண்டும், சரியாகத் தண்ணீர் பாய்ச்சவேண்டும், உரம் போடவேண்டும். நல்ல நிலத்திலும் பயிர் செழித்து வளர இதெல்லாம் அவசியம். ஆனால் முதல் மூன்று நிலங்களிலும் ஒரு விதை வளரமுடியாது முடியாமல் போவதற்கு என்னென்ன தடைகள் இருந்தனவோ அந்தத் தடைகள் இந்த நிலத்தில் காணப்படவில்லை. அதனால்தான் இது நல்ல நிலம் என்று ஆண்டவர் சொல்லுகிறார். இப்படியான நிலங்கள்தான் உண்மையிலேயே நாம் எந்த விதையை விதைத்தாலும் அது அருமையாகப் பயனளிக்கும். அதில் சிலது முப்பதாகவும், அறுபதாகவும், நூறாகவும் பலன் கொடுக்கும் என்று வாசிக்கிறோம்.

மாற்கு 4:8

சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.

ஆகவே அங்கு விதைக்கப்பட்ட விதை ஓங்கி நன்றாக வளர்கின்ற பயிராகி, பலன் அதிகமாகத் தந்தது என்று நாம் கவனிக்கிறோம்.

இரண்டாவதாக இந்த நிலம் யாரைக் குறிக்கிறது?

ஆண்டவர் மத்தேயு 13:28ல் சொல்லுகிறார்,

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான்.

ஆகவே இந்த நிலம் ஒரு மனிதனுக்கு ஒப்பிடப்படுகிறது. நான் கடந்த ஆக்கங்களில் சொன்னது போல, இந்த நிலம் ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறபோது எத்தகைய இருதயமுள்ளவனாக அதைக் கேட்கிறான் என்பதற்கு ஒப்பிடப்படுகிறது. இதையே ஆண்டவர் மாற்கு எழுதின சுவிசேஷத்தில் “வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு” (மாற்கு 4:20) என்று சொல்லுகிறார். லூக்கா எழுதின சுவிசேஷத்தில் “வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.” (லூக்கா 8:15) என்று சொல்லுகிறார். இந்த மூன்று சுவிசேஷ எழுத்தாளர்களும் வித்தியாசமாக இந்த நிலத்தைப் போன்ற இருதயத்தை கொண்டிருக்கிறவனுடைய தன்மைகளை நமக்கு விளக்குகிறார்கள். அது நாம் வசனத்தை சரியாக விளங்கிக் கொள்ளுவதற்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.

வழியருகே நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்டவர்களும், கற்பாறை நிலத்தைப் போன்றவர்களும், முட்புதர் நிறைந்த நிலத்தைப் போன்றவர்களும் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருந்தார்கள். அப்படி அவர்கள் கேட்பதோடு நின்றுவிட்டார்களே தவிர அதற்கு மேல் பெரிதாக ஒன்றும் அவர்களில் நிகழவில்லை. வசனத்தைக் கேட்ட பின் அது எங்கு போய் முடிய வேண்டுமோ அதில் போய் முடியவில்லை. ஆனால் இங்கு இந்நிலத்தில் அது வித்தியாசமாகக் காணப்படுகிறது. இவன் வசனத்தைக் கேட்கிறான், அதை உணருகிறான். வசனத்தைக் கேட்டு அதோடு நிறுத்தி விடுவதால் எந்தப் பயனுமில்லை. வசனத்தைக் கேட்கின்ற பொழுது முழுக் கவனத்தையும் அதில் செலுத்தி, கேட்ட வசனத்திலிருந்து சிந்திக்கிற ஒரு பக்குவமுள்ளவனாக மனிதன் காணப்பட வேண்டும். கேட்டுச் சிந்திக்காமல் இருக்கிறவன் ஒருநாளும் கேட்கிற எதன் மூலமும் பயனடைய முடியாது. வசனத்தைக் கேட்பதோடு மட்டும் இருந்துவிடாமல் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்த வசனத்தின் மூலமாக என்ன சொல்லப்படுகிறது? சொல்லப்படுகிற காரியத்திற்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஆண்டவர் என்னிடத்திலிருந்து எதை எதிர்பார்க்கிறார்? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

ஆகவே உண்மையாக வசனத்தைக் கேட்பதென்றால் அதை உணருகிறபோதுதான் அதனால் பலன் இருக்கிறது. இவன் கேட்பதோடு மட்டுமல்லாமல் அதை உணருகிறவனாகவும் இருக்கிறான். இவன் எப்படிப்பட்டவன் என்று உணர்த்த மாற்கு மேலதிகமாக, “வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு” (மாற்கு 4:20) என்று விளக்குகிறார். அவன் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறான். வெறும் உணர்ச்சி வசப்பட்டு ஏற்றுக்கொள்ளுகிறவனாக இல்லாமல் அதைக்கேட்டுச் சிந்தித்து ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளுகிறவனாக இருக்கிறான். லூக்கா இதை, “வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்” (லூக்கா 8:15) என்று விளக்கமளிக்கிறார்.

ஏனைய மூன்று நிலத்தை போன்ற மனிதர்களைப் போலில்லாமல் இந்த மனிதர்களின் இருதயம் உண்மையும் நன்மையுமான விசேஷமான தன்மையுமுடையதாக இருக்கிறது. மற்ற மூன்றுபேரிலும் அத்தகைய இருதயம் அவர்களுக்கு இருக்கவில்லை. உண்மையும் நன்மையுமான இருதயம் இருப்பதனால்தான் வசனத்தைக் கேட்டு, அந்த வசனத்தை உணர்ந்து, எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இருதயபூர்வமாக அந்த வசனத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் இருதயத்திலே அதைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்று லூக்கா சொல்லுகிறார். அநேகர் வசனத்தைக் கேட்பார்கள், உணருவார்கள், ஆனால் இருதயத்திலே அவர்கள் காத்துக் கொள்ளுவதில்லை. வசனத்தைக் கேட்டுக் காத்துக்கொள்ளுவது என்பது அந்த வசனத்தின்படி அவர்கள் நடக்கிறவர்கள் என்பதைக் குறிக்கிறது. வசனத்தைக் கேட்டும் அதை உணர்ந்தும் அதன்படி நடக்காத மனிதன் எப்படி கிறிஸ்தவனாக இருக்க முடியும்? வசனத்தின்படி நடக்கிறவனே கிறிஸ்தவன். என்மேல் அன்புகூருவாயானால் என் கற்பனைகளைப் பின்பற்று என்று இயேசு சொன்னார். உண்மையும் நன்மையும் உள்ள இருதயமாக இருக்கிறவர்கள் வசனத்தை கேட்டு உணர்ந்து அதை ஏற்றுக்கொண்டு அதை காத்துக் கொள்வது மட்டுமல்ல, பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாக இருப்பார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதை கொஞ்ச காலத்திற்கு பொறுமையோடு நன்றாக வளர்ந்து இறுதியில் பலனையும் கொடுக்கும்.

நல்ல நிலத்தில் வளரும் விதைக்கும், அதன் மூலம் வளருகிற செடிக்கும் கூட சில பிரச்சனைகள் வரும், இருந்தபொழுதும் எந்த பிரச்சனைகளினாலும் அந்தச் செடி விழுந்து விடாது. ஏனெனில் நிலம் நல்லதாக இருப்பதனால் அது எந்தவிதமான பிரச்சனைகளையும் தாங்கிப் பொறுமையோடு தொடர்ந்து வளர்ந்து கனிகளைக் கொடுக்கும். அப்படிப்பட்ட இருதயம் உள்ளவர்கள்தான் இவ்விதமான மனிதர்கள். மேலும் அவ்விதமானவர்கள் நல்ல இருதயத்தைக் கொண்டிருந்து, நல்ல சிந்தனைகளைக் கொண்டிருந்து, உண்மையுள்ளவர்களாக இருந்து, வசனத்தைக் கேட்டு, அந்த வசனத்தை உணர்ந்து, அதை ஏற்றுக் கொண்டு, தங்களுடைய இருதயத்திலே அதைப் பொறுமையோடு காப்பதால், நீடிய பலன் அவர்களுடைய வாழ்க்கையிலேஅந்த வசனத்தினால் ஏற்படுகின்றது என்று ஆண்டவர் சொல்லுகிறார். ஆகவே இந்த நிலம் மற்ற மூன்று நிலங்களையும் விட அருமையான நிலமாக இருக்கிறது. அப்படிப்பட்ட மனிதர்கள்தான் உண்மையிலேயே மெய்யான கிறிஸ்தவர்களாக விசுவாசிகளாக இருக்கிறார்கள்.

ஆகவே இந்த நல்ல நிலத்தைப் போன்றவர்கள் உண்மையிலேயே தேவனுடைய வசனத்தை ஏற்று, அந்த வசனத்தின் மூலமாக ஆண்டவரிடமிருந்து கிருபையின் மூலமாக இரட்சிப்பை அடைந்து, அந்த இரட்சிப்புக்குரிய வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்ந்து, தங்கள் வாழ்க்கையிலே பல கனிகளைக் கொடுக்கிறவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் விசுவாசத்தின் நடவடிக்கைகளைப் பார்க்க முடியும். அவர்கள் நிலைத்து நிற்பார்கள். இதுதான் இந்த உவமை நமக்கு விளக்குகின்ற காரியம்.

மூன்றாவதாக இந்த உதாரணத்தின் மூலம் கற்றுக்கொள்ளுகிற பாடங்கள்

இதிலிருந்து அருமையான இறையியல் போதனைகளை நாம் கற்றுக்கொள்ளலாம்.

முதலாவதாக, இந்த நல்ல நிலம் என்று ஆண்டவர் சொல்லுகிறபோது அல்லது அந்த நிலத்தைப் போன்ற மனிதர்களைக் குறிக்கின்றபோது அந்த நிலம் அல்லது அந்த நிலத்தைப் போன்ற மனிதர்கள் ஆரம்பத்திலிருந்தே நல்லவர்களாக இருந்திருக்கவில்லை.

நான் ஏற்கனவே சொன்னது போல எந்த விவசாயியும் ஒரு நிலத்தை உழுது பண்படுத்தாமல் விதைக்கமாட்டான். இயற்கையாகவே எந்த நிலமும் நல்ல நிலமாக இருந்து விடுவதில்லை. ஆவிக்குரியவிதத்தில் ஆண்டவர் அந்த எடுத்துக்காட்டை பயன்படுத்துகிற பொழுது, மனிதனுடைய இருதயமும் பிறப்பிலிருந்தே நல்லதாக இருந்துவிடவில்லை என்பதை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறார். அது இங்கு வெளிப்படையாக சொல்லப்படாவிட்டாலும் இறையியல்பூர்வமாக அந்த உண்மை இந்த உவமையில் அடங்கியிருக்கிறது. எப்படி ஒரு நிலம் உழுது பண்படுத்தப்பட வேண்டுமோ, அப்படியே மனிதனுடைய இருதயமும் பண்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. மனிதனுடைய இருதயத்தில் என்ன பிரச்சனை உள்ளது? அது பிறப்பிலிருந்தே பாவத்தில் இருக்கிறது. பவுல் ரோமர் 3:23ல் சொல்லுகிறார், எல்லோருமே பாவம் செய்து தேவனுடைய மகிமையை இழந்து நிற்கிறார்கள். யூதன், யூதன் அல்லாதவன் என்று எல்லோருமே எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் கர்த்தருக்கு முன்பாக பாவம் செய்து, தேவனுடைய மகிமையை இழந்து நிற்கிறார்கள். அதுதான் மனிதனுடைய உண்மையான நிலை. இன்னுமாக பவுல் ரோமர் 6:23ல் “பாவத்தின் சம்பளம் மரணம்;” என்று சொல்லுகிறார். அதாவது பாவத்தினாலே சரீர மரணம் மட்டுமல்ல, ஆவிக்குரிய மரணமும் ஏற்பட்டது.

ரோமர் 3:10-12

அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. இந்த உலகத்தை ஆண்டவர் பார்க்கிறபோது மனிதர்களில் எவருமே இயற்கையாக நீதிமான்களாக, நல்ல இருதயம் கொண்டவர்களாக இல்லை. மாறாக எல்லோருமே பாவிகளாக இருக்கிறார்கள். உணர்வுள்ளவன் இல்லை. ஆண்டவரை உணரக்கூடிய, சத்தியத்தை உணரக்கூடிய இருதயமுள்ளவன் ஒருவனும் இல்லை. தேவனைத் தேடுகிறவன் இல்லை. இயற்கையாக பாவத்தில் இருக்கிற, தேவ மகிமையை இழந்து நிற்கிற மனிதன் சுயமாக ஒரு நாளும் ஆண்டவரைத் தேடமாட்டான். எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள். ஆண்டவருடைய நியாயப்பிரமாணத்தை ஆண்டவருடைய கற்பனைகளை பின்பற்ற முடியாத இருதயத்தையும் வாழ்க்கையையும் கொண்டிருந்து, வழி விலகி, நியாயப்பிரமாணம் சொல்லுகின்ற சத்தியங்களுக்கு எதிரான விதமாக நடந்து எல்லோருமே கெட்டுப் போனார்கள். நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் ஒருவரும் ஒருநாளும் நன்மை செய்வே முடியாது. இதுதான் மனிதனுடைய இருதயம். இப்படிப்பட்ட மனிதர்களுடைய இருதயத்தில் எப்படி ஆவிக்குரிய விதை வளரும்? சிந்தித்துப் பாருங்கள். ஆகவேதான் மனிதன் சுயமாகவே சத்தியத்தைக் கேட்டு, அதை விரும்பி ஏற்றுக்கொள்ளுகிற இருதயம் கொண்டவனாக இருக்க மாட்டான். அவனுடைய இருதயம் மாற்றம் அடையாத வரையில், அவனுடைய பாவத்திற்கு எதுவும் நிகழாத வரையில் அவனால் கிறிஸ்துவை விசுவாசிக்கவே முடியாது. இயற்கையிலேயே மனிதன் தேவனுக்கு விரோதியாகவும், தேவனை விட்டு விலகி ஒடுகிறவனாகவும் இருக்கிறான். மனிதர்கள் எப்போதுமே தேவனுடைய கோபத்திற்கு உரியவர்களாகவும், அதன் பிள்ளைகளாகவும் இருக்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் Children of wrath என்றும், தமிழில் தேவ கோபாக்கினையின் பிள்ளைகள் என்றும் சொல்லுவார்கள்.

மேலும் அவர்கள் இருதயம் இருண்டு முட்டாள்களாக மாறிப் போனார்கள் என்று பவுல் சொல்லுகிறார்.

ரோமர் 1:21

அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

எபேசியர் இரண்டாவது அதிகாரத்தில் பவுல் சொல்லுகிறார்,

எபேசியர் 2:2-3

அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

பாவத்தில் இருப்பவன் கீழ்ப்படியாமையின் பிள்ளையாக இருக்கிறான். இங்கு கிரியைசெய்கிற ஆகாயத்துப் பிரபு என்று சொல்லுவது சாத்தானைக் குறிக்கிறது. அவனுக்கு ஏற்றபடி மனிதன் நடந்து கொள்ளுகிறான். பாவத்தின் காரணமாக மனிதனுடைய சரீரம் மட்டுமல்ல, அவனுடைய தன்மையும் கூட மாம்ச இச்சையாக இருக்கிறது. பிசாசுக்கு ஏற்ற வழியில் நடப்பதால், நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தில் மற்றவர்களைப் போல கோபாக்கினையின் பிள்ளைகளாய் இருந்தோம். ஆண்டவர் வேதத்தில் உலகத்தில் இருக்கிற அவிசுவாசிகளான மனிதர்களை அருமையாக நமக்குப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இதுதான் மனிதனுடைய நிலை.

சமூகவியலாளர்கள், உளவியலாளர்கள் போன்றவர்களிடத்தில் போய் பேசிப் பார்த்தால் மனிதன் சாதாரணமாகவே நல்லவன் என்று சொல்லுவார்கள். அந்தளவுக்கு ஒன்றும் அவன் கெட்டவன் இல்லை என்றும், சரியான வழிகளைச் சொல்லிக் கொடுத்தால் அவன் திருந்தி வாழக்கூடியவனாக இருக்கிறான் என்றும் சொல்லுவார்கள். அவர்களுக்கு ஊக்கம் தேவையாக இருக்கிறது, அவனுக்கு உதவி தேவையாக இருக்கிறது, ஒரு நல்ல கல்வியைக் கொடுத்து, சரியான ஒரு வளர்ப்பு முறையைக் கொடுத்தால் அவன் சரியாகிவிடுவான் என்று அவர்கள் சொல்லுவார்கள். இதை நூற்றாண்டுகளாகச் செய்து கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் இன்றைக்கும் நாம் வாகனம் ஓட்டிச் செல்லும்போது அருகில் போய்க் கொண்டிருக்கும் வாகனத்தை தெரியாத்தனமாக இடித்துவிட்டால் அதிலிருப்பவர்களுக்குக் கோபம் வந்துவிடுகிறது. அப்படியானால் கல்வியோ, சமுதாய வளர்ச்சியோ அவர்களை ஒழுக்கத்திற்குள் கொண்டுவரவில்லை. ஆதாம் காலத்திலிருந்தே மனுஷன் அப்படித்தான் இருக்கிறான். எதைச் செய்து பார்த்தும் மனுஷனுடைய நிலை மாறவில்லை.

மனிதன் பிறப்பிலேயே கோபாக்கினையின் பிள்ளையாக, கீழ்ப்படியாமையின் பிள்ளையாக, பாவியாக, எந்தவிதமான நன்மையும் தன்னுடைய இருதயத்தில் கொண்டிராதவனாக இருக்கிறான். மனிதனைப் பற்றிய இவ்விதமான நம்பிக்கை நமக்கு இல்லையென்றால் கிறிஸ்தவ வேதத்தைக் கேட்பதனாலும் படிப்பதனாலும் எவ்வித பிரயோசனமும் இல்லை. இன்றைக்கும் அநேக பிரசங்கிகள், மனிதனில் ஏதோ கொஞ்சம் நன்மை இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் சபைக்குக் கொஞ்ச காலத்திற்கு முன்பு வந்த வயதான இந்தியர் ஒருவர் என் பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு, ஏன் பாஸ்டர் மனிதனில் சொட்டு நன்மை கூடவா இல்லை? என்று கேட்டார். அப்பொழுது நான்: அப்படி ஏதாவது ஒரு சொட்டு நன்மையாவது அவனில் இருந்திருந்தால் இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வருவதற்கான அவசியமே ஏற்பட்டிருக்காது என்று சொன்னேன். மனிதன் முழுப் பாவியாகவும், ஆவிக்குரிய எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்தினால்தான் பிதா தன்னுடைய குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். ஆகவே இயற்கையிலேயே மனிதன் பாவியாக இருக்கிறான். அவனால் நேரான வழியில் போக முடியாது; போகத் தெரியாது. வழிதப்பி எல்லோரும் ஒட்டுமொத்தமாக கோபாக்கினையின் பிள்ளைகளாக இருந்து, தங்களுடைய மாம்ச இச்சையின்படியும், பாவத்தின் காரணமாக இயற்கையாகவே அவர்களில் எழுகின்ற சிந்தனைகளின்படியும் வாழுகிறவர்களாகவே இருப்பார்கள்.

பெற்றோர்களாக நீங்கள் இருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு பல விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்திருப்பீர்கள். அதில் பேட்டரி மூலம் இயங்கும் விளையாட்டுப் பொருட்களை நீங்கள் கவனித்துப் பார்த்தால், ரயில் போன்ற ஒரு விளையாட்டு பொருளில் அதன் ஸ்விட்ச்சை போட்டவுடன் அது ஒரே திசையில் சுற்றிச் சுற்றிப் போய்க் கொண்டிருக்கும். அதை வேறு திசையில் போக வைக்க முயற்சி செய்தால் அது போகுமா? இல்லை. ஏனென்றால் அது அவ்வாறு சுற்றும்படியாகத் தான் அதை வடிவமைத்திருக்கிறார்கள். அதை மீறி அதால் எதுவுமே செய்ய முடியாது. இது போலதான் மனிதனும் இருக்கிறான். அவன் பாவத்தில் பிறந்து அந்த பாவத்தின் வழிகளில் செல்லுவதைதான் இயற்கையாகவே கொண்டிருப்பான். திருக்குறளை ஆயிரம் முறை படித்தாலும் அவனால் திருந்த முடியாது. எந்தவிதமான நல்லொழுக்கங்களையும் கற்றுக் கொடுத்தாலும் அவன் திருந்தமாட்டான். கற்றுக் கொடுப்பதனால் பயன் இருக்கிறது. அவன் செய்கிற பாவத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்தலாம்; மிகவும் மோசமான நிலைக்கு போய் விடாதபடிக்கு ஒரு வரைமுறையை ஏற்படுத்தலாம். அதற்கு மேல் எதுவுமே செய்யமுடியாது.

என்னுடைய அப்பா எனக்கு ஒரு பெரிய நன்மை செய்தார். அவர் ஒரு ஜாதி இந்து, ஆனால் என்னை ஒரு வசதியான ஆங்கிலக் கத்தோலிக்க பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார். கல்லூரி அதிபர் பிரான்ஸ் (France) தேசத்தைச் சேர்ந்தவர். கல்லூரிக்குப் போவதற்கு முன்பு ஐந்து வருடம் அங்குதான் படித்தேன். அது ஒரு உறைவிடப் பள்ளி (Boarding school) ஆகும். விடுமுறை நாட்களைத் தவிர வீட்டுக்கு வர முடியாது. அதுபோன்ற ஒரு கண்டிப்பான பள்ளியை (Strict school) நான் பார்த்ததில்லை. அங்கு ஒரு இராணுவம் மாதிரி குறித்த நேரத்திற்கு எழ வேண்டும், குறித்த நேரத்திற்குப் படிக்க வேண்டும், குறித்த நேரத்திற்கு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். அங்கு ஒரு நொடியும் தப்பிக்க முடியாது. எதையும் மீறினால் அதற்கான தண்டனையை வழங்குவார்கள். எனக்குத் தண்டனைகள் பிடிக்காது, அதுவும் எல்லோருக்கும் முன்பாக தண்டனை பெறுவது பிடிக்கவே பிடிக்காது. அந்நாட்களில் மதிப்பெண் தரவரிசை அட்டைகளை வழங்குவார்கள். அதில் மிகக் குறைவாக மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் எல்லோருக்கும் முன்பாகக் கையிலோ பின்புறத்திலோ நீண்ட மூங்கில் கம்பினால் அடிப்பார்கள். அது ஒரு காலம். ஆகவே நன்றாகப் படித்து தொண்ணூறு மதிப்பெண்களுக்கு மேல் ஒவ்வொரு முறையும் எடுத்துவிடுவேன். அது பயத்தில் படித்து வாங்கினதுதானே தவிர ஆசையில் படித்து வாங்கின மதிப்பெண் அல்ல. அந்நாட்களில் எனக்குக் கொடுக்கப்பட்ட ஒழுக்கப் பயிற்சி இன்றைக்கும் எனக்கு உதவுகிறது. இன்றைக்கும் நான் எல்லாவற்றையும் குறித்த நேரத்திற்கு செய்கிற பழக்கம் அங்கிருந்துதான் வந்தது. ஆனால் அந்த ஐந்து வருட பள்ளிப் பருவத்திற்குப் பின்பு கல்லூரிக்குப் போனபொழுது எந்தவித மேற்பார்வையும் இல்லாததனால் நான் இஷ்டப்பட்டு விரும்பியதை எல்லாம் என்னால் செய்ய முடிந்தது. என் இருதயம் பாவம் நிறைந்ததாக இருந்ததனால் பாவத்தைச் செய்வதற்கு வசதிகள் அதிகரித்துவிட்டது. மனிதனுடைய இருதயத்தில் பாவம் இருக்கிறவரை அவனை எங்கு கொண்டுபோய் விட்டாலும் பாவம் செய்வான். மனிதர்களே இல்லாத ஒரு காட்டில் கொண்டுபோய் விட்டாலும் அங்கேயும் பாவத்தைச் செய்வதற்கு அவன் வழிகளைத் தேடிக் கொண்டிருப்பான். அதைத்தான் ரோமர் முதலாம் அதிகாரம் நமக்குச் சொல்லுகிறது. ஆகவே மனிதன் இயற்கையிலேயே பாவி, அவன் மாற்றப்பட வேண்டிய, பண்படுத்தப்பட்ட வேண்டிய ஒரு இருதயத்தைக் கொண்டிருக்கிறான் என்பதை ஆண்டவர் இங்கு நமக்கு விளக்குகிறார். நல்ல நிலம் என்ற பதத்திற்குள் அது அடங்கியிருக்கிறது.

இரண்டாவதாக, வசனத்தைக் கேட்டு, ஏற்று, அதைக் காத்துக் கொண்டவர்கள் அதைச் செய்வதற்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்டவர்கள் அல்லது பண்படுத்தப்பட்டவர்கள் ஆவர்.

ஒரு நிலம் நல்ல நிலமாக மாறுவதற்குப் பண்படுத்தப்படுவது போல, இந்த மனிதனும் கூட அந்த வசனத்தைக் கேட்டு, அதற்கு இணங்கி, வசனத்தை எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையில் கைக்கொண்டு காத்துப் பலன் கொடுப்பதற்கான செயல்களைச் செய்வதற்கு அவன் தயாரிக்கப்பட்டிருக்கிறான். அது எப்படி என்று நான் விளக்குகிறேன், கவனமாக வாசியுங்கள். எபேசியர் இரண்டாவது அதிகாரத்தில் ஒரு மனிதன் கிறிஸ்தவனாக வருவதற்கு முன் எப்படி இருந்தான் என்பதை அவ்வதிகாரத்தின் ஆரம்ப வசனங்கள் விளக்குகின்றன. மனிதர்கள் அவ்வளவு மோசமான நிலையில் கோபாக்கினையின் பிள்ளைகளாக இருந்தார்கள். ஆனால் ‘தேவனோ’ என்று நான்காவது வசனம் சொல்லுகிறது. ஆங்கிலத்தில் But God என்று சொல்லப்பட்டிருக்கிறது. மனிதன் அவ்வாறு இருந்தபொழுதும் கூட தேவன் தனது இரக்கத்தின் ஐசுவரியத்தினாலே அவனை உயிர்ப்பித்தார்.

எபேசியர் 2:4-5

தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.

அதாவது கர்த்தரால் உயிர்ப்பிக்கப்படாமல் பாவத்திலிருக்கிற எந்தவொரு மனிதனும் இயேசுவை விசுவாசிக்க முடியாது. இந்த உயிர்ப்பிக்கும் செயலைக் கர்த்தர் பரிசுத்த ஆவியின் மூலமாக ஒருவனில் செய்கிறார். அதற்குப் பெயர்தான் மறுபிறப்பு. அந்த இறையியல் உண்மை இந்த உவமையில் உள்ளடக்கமாக விளக்கப்பட்டிருக்கிறது.

ஆண்டவர் தன்னிடத்தில் வந்த நிகொதேமுவைப் பார்த்து என்ன சொன்னார்? அவன் ஒரு யூதன், ஒரு பரிசேயன், பழைய ஏற்பாட்டை எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தவன். இருந்தபொழுதும் யோவான் 3 ஆவது அதிகாரத்தில் அவனைப் பார்த்து ஆண்டவர்: நிக்கொதேமுவே நீ மறுபடியும் பிறக்க வேண்டும் என்று சொன்னார். மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதைக் கட்டளையாக அவர் சொல்லவில்லை. நீ மறுபடியும் பிறக்க வேண்டிய ஒரு அவசியம் இருக்கிறது என்று சொல்லுகிறார். மறுபடியும் பிறக்க வேண்டும் என்ற ஒரு வார்த்தையில் என்ன அடங்கியிருக்கிறது தெரியுமா? ஆவிக்குரியவிதத்தில் உன்னால் ஒன்றுமே செய்யமுடியாது, உனக்கு வெளியிலிருந்து (பரலோகத்திலிருந்து) அந்தச் செயல் உன்னில் நிகழவேண்டும் என்பதுதான் அதற்கு அர்த்தம். நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய், ஆனால் ஆவிக்குரியவிதத்தில் நீ பிறப்பதற்கு உனக்கு வெளியிலிருந்து ஒருவர் அதைச் செய்ய வேண்டும் என்று ஆண்டவர் சொல்லுகிறார். யார் அதைச் செய்கிறார்? வேதம் சொல்லுகிறது, உன்னதத்திலே இந்த உலகத்தோற்றங்களுக்கு முன்பாகத் திரித்துவ தேவர்களாகிய பிதாவும் குமாரனும் ஒரு பெரிய முடிவை எடுத்தார்கள். அந்த முடிவின்படி தாங்கள் படைக்கப் போகின்ற இந்த உலகத்திலே சிருஷ்டிகளாகிய மனிதர்களிலிருந்து ஒரு குறிப்பிட்டவர்களைத் தங்களுடைய மகிமைக்காகத் தெரிந்துகொள்ளுகின்ற ஒரு திட்டத்தை வகுத்தார்கள். அந்தத் திட்டம் மனிதன் பிறப்பதற்கு முன்பே வகுக்கப்பட்டதாக எபேசியர் முதலாவது அதிகாரம் நமக்குச் சொல்லுகிறது. அத்திட்டத்தின்படி தெரிந்துகொள்ளப்பட்ட அந்த மக்களுக்காக, அவர்களுக்கு இரட்சிப்பைக் கொடுப்பதற்காக, அவர்களுடைய பாவத்திலிருந்து அவர்களுக்கு விடுதலை கொடுத்து பரலோகத்துக்குப் போய்ச் சேரும்படி செய்வதற்காக இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்டார். அவர்கள் ஏற்கனவே தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அப்படித் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள், அவர்கள் சுவிசேஷத்தைக் கேட்கிற பொழுது ஆண்டவர் அவர்களை நல்ல நிலத்தில் விதை பலன் கொடுப்பதுபோல் ஆவிக்குரிய பலனடையக்கூடியவிதத்தில் தயாரிக்கிறார்.

பரிசுத்த ஆவியானவர் வருகிற பொழுது அவர் என்ன செய்வார்? வேதம் சொல்லுகிறது,

யோவான் 16:8

அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.

சுவிசேஷம் சொல்லப்படுகிற பொழுது, தெளிவாக வேதபூர்வமாக பிரசங்கிக்கிற பொழுது, அந்த சுவிசேஷமாகிய வார்த்தையை வைத்து மனிதனுடைய இருதயத்திலே அவனுக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்தி, நீதியைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து, அவன் தன்னுடைய பாவத்தை உணரும்படியாகச் செய்கின்ற செயலைப் பரிசுத்த ஆவியானவர் செய்கிறார். எத்தனையோ பேர் அந்த மூன்று நிலங்களைப் போல நடந்து பலன்கொடாமல் போய் விடுகிறபொழுதும், ஆண்டவரால் ஏற்கனவே தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள், அந்த சுவிசேஷப் பிரசங்கத்தின் கீழாக வருகிறபொழுது, சுவிசேஷப் பிரசங்கம் அவர்களில் பலன் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. அது எப்படி நடக்கிறது? பரிசுத்த ஆவியானவருடைய கிரியையினால் அது நிகழ்கிறது. ஏனென்றால் ஆவியானவர் ஒருவனைத் தொட்டு, சத்தியத்தின் மூலமாக அவனுடைய பாவத்தை உணர்த்தி, அவன் தன்னுடைய பாவ நிலையை உணர்ந்து, கிறிஸ்து எனக்குத் தேவை என்று சொல்லும் விதமாக, ஆண்டவரை நாடி வரும்படியாகச் செய்கிறவர் பரிசுத்த ஆவியானவர். ஆகவே அந்த நல்ல நிலம் பண்படுத்தப்படுகிறது. பண்படுத்தப்பட்ட இருதயமே கனி கொடுக்கும்.

“என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” (யோவான் 6:44) என்று ஆண்டவர் சொல்லுகிறார். இந்த இழுத்துக்கொள்ளுகிற காரியத்தை திட்ப உறுதியான அழைப்பு என்று சீர்திருத்த இறையியல் அருமையாகப் போதிக்கிறது. ஆங்கிலத்தில் இதனை Effectual calling என்று அழைப்பார்கள். சுவிசேஷ அழைப்பு போகிற பொழுது அதில் இரண்டு வகையான அழைப்பு காணப்படுகிறது. ஒன்று பொதுவான அழைப்பு, அது எல்லாருக்கும் கொடுக்கப்படுகிறது, ஆனால் எல்லோரும் அதைக் கேட்பதில்லை; அதனால் பயனடைவதில்லை. ஏனென்றால் எல்லோரும் தெரிந்து கொள்ளப்படவில்லை. இரண்டாவதாக சிறப்பான அழைப்பு, அப்படிக் கேட்பவர்களில் சிலர் அதற்குக் காது கொடுத்து, அதைக் கேட்டு, அதை உணர்ந்து, அதற்கு இடம் கொடுத்து, இயேசுவை விசுவாசித்து திட்ப உறுதியாக ஆண்டவராலே இழுத்துக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அழைக்கப்பட்டவர்களுக்குத்தான் பரிசுத்த ஆவியானவர் மறுபிறப்பைக் கொடுக்கிறார், அவர்களுடைய இருதயத்தை மாற்றுகிறார். அவர்களுடைய இருதயத்தில் ஆண்டவரை நேசிக்கும்படியாகச் செய்கிறார். அந்த இருதயத்திலே பாவ உணர்வுகள் ஏற்பட்டு, அவன் கர்த்தருக்கு முன்பாகத் தான் கொடும்பாவியாக நிற்கிறேன் என்பதை உணர வைத்து, அவன் இயேசு கிறிஸ்துவில் அன்பு செலுத்தும்படியாக அந்த இருதயத்தை முழுமையாக மாற்றுகிறார். ஆவியானவர் ஒரு மனிதனில் கிரியை செய்து அவனுடைய இருதயத்தை ஆண்டவரை நோக்கிப் போகும்படியாக மாற்றப்படுகின்ற அந்த மறுபிறப்பு நிகழாமல் எவருமே கிறிஸ்துவை விசுவாசிக்க முடியாது.

இன்றைக்கு நாம் ஒருவரிடத்தில் நீங்கள் எப்படி விசுவாசியாக மாறினீர்கள்? என்று கேட்டால், கிறிஸ்துவை நான் விசுவாசித்த போது விசுவாசி ஆனேன் என்றும், மறுபிறப்பு அடைந்தேன் என்றும் சொல்லுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இரட்சிப்பு என்பது அவர்கள் ஆண்டவரை விசுவாசித்தபோது நிகழ்ந்ததாக எண்ணி வருகிறார்கள். ஆனால் அது மிகவும் தவறு. வேதம் அவ்வாறு போதிக்கவில்லை. ஒருவன் இயேசுவை விசுவாசிப்பதற்கு முன்பு அவனில் நிகழ்வதுதான் மறுபிறப்பு என்று வேதம் சொல்லுகிறது. மறுபிறப்பு என்பது பரிசுத்த ஆவியானவர் இரகசியமாக நம்முடைய இருதயத்தில் நாம் உணராமல் இருக்கும்பொழுது நம்மில் செய்கிறார். அதன் காரணமாக நம்முடைய இருதயம் முழுமையாக மாற்றப்படுகிறது, அவ்வாறு மாற்றப்பட்ட பிறகு தான் அதை நாம் உணர ஆரம்பிக்கிறோம், ஆண்டவரை நோக்கிப் போக ஆரம்பிக்கிறோம். மறுபிறப்பு நிகழும் போதுதான் ஆண்டவர் நமக்கு விசுவாசத்தை ஈவாகக் கொடுக்கிறார், அதனால் இயேசு கிறிஸ்துவை நம்மால் விசுவாசிக்க முடிகிறது, இருதயத்திலே பாவத்தை உணர்ந்து மனந்திரும்ப முடிகிறது. ஆகவே மனந்திரும்புதலும் விசுவாசமும் மறுபிறப்பின் காரணமாக நமக்குக் கிடைக்கின்ற ஆசீர்வாதங்களாகும். மறுபிறப்பு நிகழாமல் மனந்திரும்புதலும் விசுவாசமும் நிகழாது. பரிசுத்த ஆவியானவர் நம்மில் நிகழ்த்துகின்ற மறுபிறப்பின் விதைகள்தான் விசுவாசமும் மனந்திரும்புதலும். ஆகவேதான் மனுஷன் இயற்கையாகவே பாவ நிலையில் கிறிஸ்துவை விசுவாசிக்க மாட்டான். அவனால் விசுவாசிக்கக்கூடிய எந்த ஆவிக்குரிய விஷயமும் அவனிடம் காணப்படவில்லை.

ஆவியானவர் மனிதனுக்கு மறுபிறப்பைப் கொடுக்கிறார், அதனால் அவன் இயேசுவை விசுவாசித்து அவரிடத்தில் சரணடைந்து விடுகிறான். அப்பொழுது ஆண்டவர் அவனுடைய பாவங்களை மன்னிக்கின்றார், இரட்சிப்பை அவனுக்கு வழங்குகின்றார். மேலும் மறுபிறப்போடு கூட வரக்கூடிய சகலவிதமான கிருபையின் ஆசீர்வாதங்களையும் அவனுக்கு அளிக்கிறார். திட்ப உறுதியான அழைப்பு மறுபிறப்பில் கொண்டு போய்விடுகிறது. மறுபிறப்பு மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் கொடுக்கின்றது. அதற்கு பிறகு அவன் நீதிமானாகிறான். ஆண்டவருக்கு முன்பாக அவன் நீதிமானாக எண்ணப்படுகிறான், பரிசுத்தமானது அவனில் நிகழ ஆரம்பிக்கிறது. அவன் மகிமையை நிச்சயமாக அடைவான். இதையெல்லாம் இரட்சிப்பின் ஆசீர்வாதங்களாக ஆண்டவர் அவனுக்குக் கொடுக்கிறார்.

யோவான் 6:37-40

பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

OS-3dஇந்த வேதப்பகுதியில் இயேசு அநேக முறை ‘என்னை அனுப்பினவர்’ என்று சொல்லுகிறார். ஒருவனும் சுயமாக ஆண்டவரிடத்தில் வரவில்லை, பிதா அவனைக் குமாரனிடத்தில் கொடுத்ததனால்தான் அவன் இயேசுவினிடம் வருகிறான். இயேசு கிறிஸ்துவிடம் வருகிறவன் பிதாவினாலே இழுக்கப்படுகிறான், ஆவியினாலே மறுபிறப்பை அடைகிறான், அதனால் அவன் இயேசுவை விசுவாசிக்கிறான், கடைசி நாளில் அவன் எழுப்பப்படுகிறவனாக இருக்கிறான். இதையெல்லாம் இன்னும் ஆழமாக விளங்கிக்கொள்ள வேண்டுமானால், நான் வெளியிட்டிருக்கும் “இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு” என்ற புத்தகத்தை வாங்கி வாசித்துப் பயனடையுங்கள்.

கடைசியாக, இப்படி ஒரு நல்ல இருதயத்தை கொண்டிருக்கிறவர்கள், அதாவது பண்படுத்தப்பட்ட தயாரிக்கப்பட்ட இருதயத்தைக் கொண்டிருக்கிறவர்கள்தான் தங்களுடைய இரட்சிப்புக்குரிய வாழ்க்கையில் நிலைத்திருந்து அதிக கனிகளைக் கொடுப்பார்கள்.

லூக்கா 8:15

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

ஒரு பயிர் வளர்ந்து, செடியாகி, கனி கொடுப்பதற்கு சில காலம் எடுக்கும். விவசாயி அதுவரை பொறுமையாக அதைக் கவனித்து வருவான். அதுபோலத்தான் இந்தவிதமாக இரட்சிப்பை அடைந்தவர்கள், ஆண்டவரால் பண்படுத்தப்பட்ட இருதயத்தைக் கொண்டிருந்து, மறுபிறப்பு அடைந்து, கிறிஸ்துவை விசுவாசித்து, அவர்கள் அந்த விசுவாசத்தில் இறுதிவரையும் நிலைத்திருந்து, விசுவாசத்தில் நல்லபடியாக வளர்ந்து கனி கொடுப்பார்கள். முப்பது, அறுபது, நூறு என்று மூன்று சுவிசேஷ நூல்களும் அதை ஒரே முறையில் சொல்லவில்லை. இரண்டு நூல்கள் முப்பது, அறுபது, நூறு, என்றும், ஒரு நூல் நூறு, அறுபது, முப்பது, என்றும் விளக்குகின்றது. அதனால் நமக்கு ஒன்றும் பிரச்சனையில்லை, அதுபற்றி விசேஷமாக அர்த்தம் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. சுவிசேஷ நூல்களை எழுதினவர்கள் தங்களுடைய பார்வைக்கு ஏற்ற முறையில் எழுதியிருக்கிறார்கள். அதன் அர்த்தம் என்ன? நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதை கனி கொடுக்கும், அது கனி கொடுக்காமல் போகாது. அவ்வாறு கனி கொடுப்பதும் கூட சில பேரிடத்தில் முப்பதும், சில பேரிடத்தில் அறுபதும், சில பேரிடத்தில் நூறாகவும் இருக்கும். ஆனால் அந்த நிலத்தில் விதைக்கப்படுகிற எதுவுமே கனி கொடுக்காமல் இருக்காது.

கனி கொடுக்காமல் இருக்கின்ற கிறிஸ்தவன் என்று வேதத்தில் எங்காவது வாசித்திருக்கிறீர்களா? வாசித்திருக்கவே மாட்டீர்கள். மெய்யான கிறிஸ்தவன் கனி கொடுக்கின்றவனாக இருப்பான், அப்படி கனி கொடுக்கும் விதமாகத்தான் ஆண்டவர் அவனை மாற்றியிருக்கிறார். கிறிஸ்தவர்கள் என்று நினைத்துக் கொண்டு எந்தவிதமான கனியும் கொடுக்காமல், தளர்ந்துபோய் பிரச்சனைகளுக்குள்ளாக வாழ்ந்து தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? உண்மையாகவே அவர்களுடைய வாழ்க்கையில் இரட்சிப்பு நிகழ்ந்திருக்கிறதா என்று கேட்டுப் பார்க்க வேண்டும். வண்டியில் பெட்ரோல் ஊற்றினால்தான் அது ஓடும். பெட்ரோல் இல்லாமல் வண்டி ஓடாது. உண்மையாகவே இரட்சிப்பு நிகழாவிட்டால், மறுபிறப்பு நடக்கவில்லையென்றால், சிலர் நான் கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு, அந்த கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு இருப்பார்களே தவிர, இரட்சிப்பில் இருக்க வேண்டிய அம்சங்களை அவர்களில் காணமுடியாது. இப்படி எவ்வளவோ பேரை நாம் பார்க்கிறோம். யூதாஸைப் பார்க்கிறபோது, அவன் பிரசங்கமும் செய்திருக்கிறான், அற்புதமும் செய்திருக்கிறான். ஆனால் அவன் ஆண்டவருடைய பிள்ளையுமல்ல, விசுவாசியுமல்ல. இதேவிதமாக இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலையும் சொல்லலாம். இன்று நம்மினத்தில் காணப்படும் போலிச் சபைகள் இத்தகையோரால் நிரம்பி வழிகின்றன.

உண்மையான கிறிஸ்தவன் வளருவான், நிலைத்திருப்பான், கனி கொடுப்பான். இரண்டு வேத பகுதிகளை மட்டும் நான் மேற்கோள் காட்டுகிறேன்.

முதலாவதாக பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில் சொல்லுகிறார்,

பிலிப்பியர் 1:4-6

நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி, உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

இந்த பிலிப்பியர் சபை மக்களைக் குறித்து பவுலின் நம்பிக்கையைப் பாருங்கள். அவர்களை அழைத்து, மறுபிறப்பைக் கொடுத்து, விசுவாசத்தையும் மனந்திரும்புதலையும் அவர்களில் நிகழுமாறு பார்த்துக் கொண்டிருந்த அந்த தேவன், அவர்களில் நற்கிரியை ஆரம்பித்து வைத்தவர் என்றும், அதை இயேசு கிறிஸ்துவின் நாள் வருமட்டும் அதை நடத்தி வருவார் என்றும் நம்பி, ஆண்டவரிடத்தில் ஸ்தோத்திரம் செய்கிறேன் என்று சொல்லுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆண்டவர் நற்கிரியை ஆரம்பித்து வைத்திருப்பதனாலே அவர் அதைப் பாதுகாத்து நடத்துகிறவராக இருக்கிறார்.

இரண்டாவதாக, பவுல் சொல்லுகிறார்,

பிலிப்பியர் 2:12-13

ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.

பவுல் இந்நிருபத்தை எழுதுகிறபோது சிறையில் இருக்கிறார். இதில் பவுல் ஒரு அருமையான போதனையை நமக்கு அளிக்கிறார். ஒரு நிலத்தைப் பண்படுத்துவது போல ஒரு இருதயத்தைப் பயன்படுத்தி விசுவாசத்தை அடையும்படிச் செய்கிறவர் கர்த்தரே. அது இறுதிவரை நிலைத்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுவதும் அவரே. அவ்வாறு அவர்கள் இரட்சிப்பை அடைந்தபோதும், பயத்தோடும் நடுக்கத்தோடும் தங்கள் இரட்சிப்பு நிறைவேற செய்யவேண்டிய ஆவிக்குரிய அனைத்தையும் செய்து அதில் பாடுபடுவார்கள். ஆகவே நம்முடைய விசுவாசத்தில் இந்த இரு பக்கமும் அடங்கியிருக்கிறது. ஒன்று ஆண்டவர் நம்மைப் பாதுகாப்பது, மற்றொன்று நாம் விசுவாசத்தோடு இரட்சிப்பிற்குரிய காரியங்களைக் கடைசிவரை செய்து நிலைத்திருப்பதாகும். இதில் ஒன்றில்லாமல் மற்றொன்று நடக்காது.

ஆண்டவர் நம்மைத் தொடர்ந்து பாதுகாக்காமல் விசுவாசத்தில் நாம் தொடர முடியாது. நாம் நல்ல விசுவாசத்தில் நடந்து போகின்ற பொழுது இது நம்முடைய சொந்த செய்கையாக இருக்குமோ என்று நினைக்கக் கூடாது. ஏனெனில், ஆவியானவரின் உதவியோடுதான் நாம் அதைச் செய்கிறோம். ஆண்டவர் நம்மைப் பாதுகாக்கிறார் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும்? நாம் விசுவாசத்திற்குரிய காரியங்களை பயத்தோடும் நடுக்கத்தோடும் பாவத்துக்கு விலகி இருந்து செய்துகொண்டு போகின்ற பொழுது நமக்கு இரட்சிப்பின் ஆனந்தம் ஏற்படுகிறது, அது நமக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது. இதையெல்லாம் நாம் செய்வதற்கும், சரியான பாதையில் போய்க் கொண்டிருப்பதற்கும் காரணம் ஆண்டவர் நம்மைத் தொடர்ந்து பாதுகாத்து நம்மில் கிரியை செய்வதால் தான். நாம் தளர்ந்து போய், பின்வாங்கிப் போய், சத்தியத்தைக் கேட்பதற்கு சபைக்குத் தொடர்ச்சியாகப் போகாமல், வேலை மற்றும் அது, இது, என்று சாக்குப்போக்குச் சொல்லி மற்ற விஷயங்களில் கவனத்தைச் செலுத்துகிறவர்களாக இருந்தால் ஆண்டவருடைய செய்கை நம்மில் குறைவாக இருக்கிறது என்பதுதான் அதற்கு அர்த்தம். அது தொடர்ந்திருந்தால் உண்மையிலேயே அவருடைய செய்கை நம்மில் இருக்கிறதா என்ற ஒரு பெரிய கேள்வியில் அது கொண்டுபோய்விடும். ஒரு நல்ல செடி நன்றாக வளர்ந்து கனி கொடுப்பதாகத்தான் இருக்கும், அதுதான் அதற்கு அடையாளம், அதனால்தான் அதற்கு அந்தப் பெயர் கிடைக்கிறது. அதுபோல ஒரு நல்ல கிறிஸ்தவன் கனி கொடுக்கிறவனாக முன்னோக்கிப் போய்க்கொண்டிருப்பான். சபைக்குப் போவதை நிறுத்தமாட்டான், அங்கத்துவப் பொறுப்புகளில் அலட்சியம் காட்ட மாட்டான், உலகத்திலேயே கண்ணை வைத்திருந்து அதற்காகவே எதையும் செய்யமாட்டான், எந்த நேரமும் பாவத்தில் விழுந்து எழுந்து கொண்டிருக்கமாட்டான், அது அவன் வாழ்க்கையில் தொடர்ச்சியாக இருக்காது. அவன் நல்ல விசுவாசியாக இருந்து, தனது மனைவி பிள்ளைகளையும் அந்த வழியில் வழிநடத்திக் கொண்டு முன்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறவனாக இருப்பான். ஆண்டவருக்கு எப்படியெல்லாம் என்னென்ன செய்யலாம் என்று யோசிக்கிறவனாக இருப்பான். அப்படி இருக்கிறவனைப் பார்த்து நாம் ஆண்டவர் அவனைப் பாதுகாக்கிறார் என்று உறுதியாகச் சொல்லமுடியும். அவனில் நற்கிரியை ஆரம்பித்து வைத்தவர் அவனில் தொடர்ந்திருந்து அவன் ஆவிக்குரிய பயணத்தை நல்லபடி நடத்தச் செய்வார். ஆகவே நல்ல விசுவாசத்திற்குரிய செய்கைகள் நம்மில் காணப்படாவிட்டால் அவர் நம்மோடு இருக்கிறாரென்று நாம் சொல்ல முடியாது.

நான் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன், நீங்கள் எப்படிப்பட்டவராக இருக்கிறீர்கள்? உங்கள் விசுவாச வாழ்க்கையில் எந்த நிலையில் இருக்கிறீர்கள்? உண்மையாகவே நீங்கள் மறுபிறப்பு அடைந்திருக்கிறீர்களா? விசுவாசமும் உண்மையான மனந்திரும்புதலும் உங்களில் ஏற்பட்டிருக்கிறதா? அதற்கு அடையாளமாக உங்கள் வாழ்க்கையில் இயேசு சொன்னவிதமாக முழுமனதோடு அவருக்குக் கீழ்ப்படிந்து, ஆண்டவருடைய வார்த்தையைப் பெரிதாகக் கருதி நடக்கிறீர்களா? இதற்கு நீங்கள் தான் பதில் சொல்லவேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் விசுவாசத்திற்குரிய கிரியைகளையெல்லாம் படிமுறையாகத் தொடர்ச்சியாக செய்யாமல் இருக்கிற பொழுது அங்கு பெரிய கேள்விக்குறி எழுந்துவிடும். நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்கிற பொழுது, ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்னைப் பாதுகாக்கிறார் என்று சொல்லும்விதமாக, நடுக்கத்தோடும் பயத்தோடும் அவருக்குரிய காரியங்களை விசுவாசத்தோடும் செய்கிறவர்களாக இருப்போமாக. அப்படிச் செய்யும்படியாக ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்யட்டும்.

விசுவாசம் என்பதும், இரட்சிப்பிற்குரிய வாழ்க்கை என்பதும் சாதாரண மனித செயல் அல்ல. நம்மை அழைத்த தேவனுடைய கிருபை நம்மை அப்படி மாற்றியிருக்கிறது, நம்மை அவ்வாறு வாழ வைக்கிறது. ஆகவே உங்களுடைய விசுவாச வாழ்க்கையைச் சாதாரணமாக நினைத்து விடாமல் இருதயத்தில் பயத்தோடும் நடுக்கத்தோடும், என்னென்ன குறைபாடுகளை ஆண்டவருடைய விஷயங்களில் வைத்து இருக்கிறீர்களோ அந்தக் குறைபாடுகளை எல்லாம் நீக்கி அவருக்கு மேலதிகமாக விசுவாசமாய் இருக்கப் பாருங்கள். எந்த அளவுக்கு அவருக்கு நீங்கள் விசுவாசமாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருந்து பரலோகம் போகும்படியாக அவர் பார்த்துக் கொள்ளுவார். அப்படித்தான் ஆபிரகாம் வாழ்ந்தார், தாவீது வாழ்ந்தார், இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் வாழ்ந்தார்கள், பவுல் அப்போஸ்தலன் வாழ்ந்தார். பவுல் இறப்பதற்கு முன்பு தன் வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்து, ஆண்டவருடைய கிருபையினால் என் விசுவாசத்தை வெற்றிகரமாக நான் நடத்தி முடித்துவிட்டேன் என்று சொன்னார். அது அவருடைய இரட்சிப்பின் நிச்சயத்துவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. தான் தடுக்கி விழுந்து பாவத்தை செய்து வீணாகப் போய் ஆண்டவரை மிகவும் அசிங்கப்படுத்திவிட்டேன் என்று அவர் சொல்லவில்லை. மாறாக என் விசுவாச வாழ்க்கையை நன்றாக நடத்தி முடித்துவிட்டேன், பரலோகம் போவேன் என்ற பெரிய நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஏனென்றால் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிற பொழுது எப்படி வாழ்ந்திருக்கிறேன் என்பது அவருக்கு அந்த தைரியத்தைக் கொடுக்கிறது. பவுல் அப்படிச் செய்ய முடிந்ததற்குக் காரணம், அவரில் அதை ஆரம்பித்து வைத்தவர் அவர் அதைச் செய்யும்படியாக அவரோடிருந்திருக்கிறார். அவர் பயத்தோடும் நடுக்கத்தோடும் தனது இரட்சிப்பிற்குரிய செயல்களை இறுதிவரை செய்திருக்கிறார். கிறிஸ்தவம் என்பது அதுதான். அது ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஆண்டவரை மகிமைப்படுத்துகிற ஒரு வாழ்க்கை முறையாகும். அவரில்லாமல் நாம் இல்லை. அதைத்தான் இந்த நல்ல நிலத்தைப் பற்றிய உவமை நமக்கு விளக்குகிறது.

மறுமொழி தருக