முள்ளுள்ள இடங்கள்

மத்தேயு 13வது அதிகாரத்தில் விதை நிலங்களின் உவமையை நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம். ஆண்டவர் முதலில் அந்த உவமையைச் சொல்லி விட்டு பின்பு அதற்கான விளக்கத்தைக் கொடுக்கின்றார்.

மத்தேயு 13:3-9

அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

ஆண்டவர் இந்த உவமைக்கான விளக்கத்தைப் பதினெட்டாவது (மத்தேயு 13:18) வசனத்திலிருந்து கொடுக்கிறார்.

மத்தேயு 13:18-23

ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.

இந்த உவமையில் தரப்பட்டிருக்கின்ற உதாரணங்களில் இரண்டு உதாரணங்களை நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். முதலாவதாக கொடுக்கப்பட்ட உதாரணம் வழியருகே என்ற பகுதி. விவசாயி அந்த காலத்திலே விதையெல்லாம் பயிரிடுகிறபொழுது அந்த நிலத்தை உழுது பண்படுத்தி அதற்குப் பிறகுதான் பயிரிடுவான். அப்படி அவன் பயிரிடப் போகிறபொழுது தன் தோளில் கூடையில் இருந்த விதையை அவன் தூவிக் கொண்டு போகிற பொழுது சில விதைகள் வழியருகே விழுந்து விடுகின்றன. அப்படி வழியருகே நிலத்தில் விழுகின்ற விதை பலன் கொடுக்காது என்று ஆண்டவர் சொல்லுகிறார். அந்நிலம் பண்படுத்தப்படாத ஒரு வெறும் பாதையாக கடினமாக இருப்பதனாலே அதில் விதை முளைத்து வேரிட வழியில்லாமல் இருக்கிறது. ஆகவே அதைப் பறவைகள் வந்து பட்சித்து விடுகின்றன. அதை ஆண்டவர் யாருக்கு உதாரணமாகக் காட்டுகிறார் என்றால் வேத வசனத்தைக் கேட்பதில் மிகவும் அசட்டையாக இருக்கிற ஒரு மனிதனுக்கு ஒப்பிடுகிறார். அவன் இருதயம் பாவத்தினால் கடினப்பட்டு போய், வேத வார்த்தைகளில் எந்தவிதமான ஆர்வமும் இல்லாமல் இருக்கிறான். அப்படி இருதயத்தில் ஆர்வம் இல்லாதவன் அதை காது கொடுத்துக் கேட்க மாட்டான், உதாசீனப்படுத்தி விடுவான். அவன் அப்படி செய்வதனால் என்ன நடக்கிறது? சாத்தான் வந்து கொடுக்கப்பட்ட வசனத்தை எடுத்துக் கொள்கிறான். அதனால் அவனுக்கு எந்தவிதமான பயனும் இல்லை.

இரண்டாவது நிலம் கற்பாறை நிலங்கள். அதைப் பற்றியும் விளக்கமாகச் சொன்னேன். அந்த நிலம் ஒரு அளவுக்கு விதை முளைக்க கூடிய அளவுக்கு ஒன்று அல்லது மூன்று அங்குலம் வரை மண் இருக்கிறது. ஆனால் அந்த மண்ணுக்கு கீழே கற்கள் காணப்படுவதனாலே அது வேரூன்றுவதற்கு வழியில்லை. ஆகவே மத்தியான வேளையிலே வெயில் வருகின்ற பொழுது சூரியக்கதிர்கள் மேலே இருந்து தாக்குவதனாலே அந்த மண் ஆழமாய் இல்லாததனால் அந்த விதை அதிக காலம் உயிர் வாழ முடியாது. மேலும் அந்த சூரிய வெப்பத்தினால் கற்களும் அதிக சூடு பிடிப்பதனால் மேலிருந்தும் கீழிருந்தும் வெப்பம் தாக்குகிறது, அதனால் வெப்பம் தாங்க முடியாமல் அந்த விதை பலன் கொடுக்காமல் போய்விடுகிறது. இதையும் ஒருவிதமான இருதயத்தை கொண்டிருக்கிற மனிதனுக்கு உதாரணமாக ஆண்டவர் காட்டுகிறார். இந்த மனிதனுக்கு பிரச்சனை என்ன? ஏற்கெனவே நாம் பார்த்தபடி இவன் காது கொடுத்து வசனத்தைக் கேட்கிறான். ஆரம்பத்தில் கொஞ்சம் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளுகிறான். விதை வளருகிறது ஆனால் வேர் விட முடியாமல் இருக்கிறது. அப்படி அது வளருகிற பொழுது வேதத்தில் கொஞ்ச காலத்திற்கு அந்த ஆர்வத்தைக் காட்டுகிறான். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையில் இடையூறுகளும் பிரச்சனைகளும் ஏற்படுகிற பொழுது, அதாவது வசனத்தினிமித்தம் துன்புறுத்தல்களும் கேலிப் பேச்சுகளும் பிரச்சனைகளும் ஏற்படுகிறபோது, ஏன் அநாவசியமாக இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டி என் வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லி, அவன் மறுபடியும் உலகத்துக்கே போய்விடுகிறான். அத்தகைய மனிதனைத்தான் இந்தக் கற்பாறை நிலம் நமக்கு விளக்குகிறது. ஆண்டவருடைய வசனத்தைக் கேட்டு இரட்சிப்பை அடையாமல் ஒரு வருஷம் கூட அதில் ஈடுபாடு காட்டி, சபைக்கு போவதும், சபை மக்களோடு ஐக்கியத்தில் வருவதும், ஜெப கூட்டத்தில் ஜெபம் பண்ணவும் கூட முடியும். யூதாஸ் அதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆண்டவரோடேயே இருந்து, அவருடைய சீடர்கள் ஒருவனைப் போல அப்போஸ்தலனாக வந்து, அவருடைய பணத்தைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்கிற ஒரு பதவியிலும் இருந்து, கடைசியில் அவரைக் காட்டிக்கொடுத்து இருக்கிறான் என்றால், நாம் எவ்வளவு தூரம் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

இந்த ஆக்கத்தில் நாம் மூன்றாவது நிலத்தைக் குறித்து பார்ப்போம். இந்த மூன்றாவது நிலத்தை நாம் பார்க்கின்ற பொழுது இதுவரைக்கும் பார்த்தது போல, முதலில் ஆண்டவர் கொடுத்திருக்கிற உதாரணத்தைப் பார்ப்போம். அதற்குப் பிறகு அந்த உதாரணத்திற்கான விளக்கத்தைப் பார்ப்போம். மூன்றாவதாக அதிலிருந்து ஆண்டவர் நமக்கு என்ன பாடங்களை கற்றுக் கொடுக்க விரும்புகிறார் என்பதைப் பார்ப்போம்.

ஆண்டவர் கொடுத்திருக்கிற உதாரணம்:

மத்தேயு 13:7

சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.

இதே விதமாகத்தான் லூக்கா எட்டாவது அதிகாரத்திலும், மாற்கு நான்காம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். இப்போது இந்த நிலத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். மற்ற நிலங்களைவிட இந்த நிலத்தில் இருக்கும் பிரச்சனை என்ன? இந்த நிலத்தில் விவசாயி எப்போதுமே நிலத்தை உழுது அதைப் பண்படுத்துகிறபோது முட்புதர்களை அகற்றி இருப்பான். அவன் அவ்வாறு அகற்றிவிட்ட பொழுதும் மண்ணின் ஆழத்தில் அவற்றின் வேர் இருந்திருக்கிறது. அதை அவன் கவனிக்காமல் விட்டிருக்கிறான். அப்போது என்ன நடக்கிறது? நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி, உரம் போட்டு, விதை விதைப்பதற்காகத் தயார் செய்து, அதில் விதைகளையும் தூவிய பிறகு, அந்த நிலத்தில் விதை மட்டும் வளரவில்லை, அதோடு சேர்ந்து அந்த ஆழத்தில் இருக்கின்ற முட்செடிகளின் வேர்களும் வளர ஆரம்பித்தன. அதுதான் இந்த நிலத்தில் காணப்படும் பிரச்சனையாக இருக்கிறது. இது ஓரளவுக்கு நல்ல நிலம்தான், விதைகள் வளரும்படியாகத்தான் இருந்தது. ஆனால் அந்த நிலத்தின் அடியில் காணப்படும் முட்புதர்களின் வேர்தான் பிரச்சனை. அதுவும் வேர்விட்டு வளர ஆரம்பித்து, கொஞ்ச காலம் போன பிறகு, அங்கே மூன்று முட்புதர்கள் சேர்ந்து வளர்ந்துள்ளன. ஏன் மூன்று முட்புதர்கள் என்று பின்னால் விளக்குகிறேன். இங்கு விவசாயி போட்ட விதை செடியாக வளர்ந்து இருக்கிறது. ஆனால் அதோடு இந்த மூன்று முட்புதர்களும் அழகாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவை அவன் விதைத்த செடியை நெருக்கி அதற்கு மேல் வளர விடாமல் அதை இல்லாமல் ஆக்கி விடுகின்றன. இந்தக் காட்சியைத்தான் படமாக இந்த உதாரணத்தின் மூலமாக ஆண்டவர் நமக்குக் காட்ட விரும்புகிறார். இதுபோல முட்புதர்கள் நிலத்தில் இருந்தால் எந்த ஒரு நல்ல செடியும் வளர முடியாது. மேலும் நல்ல செடியைத் தொடர்ந்து வளர முடியாதபடிச் செய்து அந்தச் செடியை அழித்துவிடும்.

இந்த உதாரணம் எதை விளக்குகிறது?

ஆண்டவர் இதற்கான விளக்கத்தை 22 வது வசனத்தில் கொடுக்கிறார்.

மத்தேயு 13:22

முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான்.

இந்த வசனத்தில் ஆண்டவர் இரண்டு முட்புதர்களை விளக்குகிறார். அதில் முதலாவது முட்செடி உலகக்கவலை, இரண்டாவது முட்செடி ஐசுவரியத்தின் மயக்கம் ஆகிய இவ்விரண்டும் வசனத்தை நெருக்கிப் போடுகின்றன. இதேயே மாற்குவும் சொல்லுகிறார், ஆனால் மாற்கு அதில் ஒன்றைக் கூட்டிச் சொல்லுகிறார்.

மாற்கு 4:18

வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்.

மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகள்தான் மூன்றாவது முட்செடி. இதனை லூக்கா ‘சிற்றின்பங்களினாலும்’ என்று விளக்குகிறார்.

லூக்கா 8:14

முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.

இவைகள்தான் இந்தச் செடிக்கு வந்திருக்கும் மூன்று ஆபத்துக்கள் ஆகும். இந்த மூன்றாவது உதாரணத்தில் சொல்லப்படுகின்ற இந்த முட்புதர் உள்ள நிலத்தில் வளருகிற செடிகளைப் போல் மனிதர்கள் சபைக்கு வருவது இயற்கைதான். அவர்கள் வந்து வசனத்தைக் கேட்கிறார்கள். அந்த வசனத்தைக் கேட்டு, அதில் ஈடுபாடு காட்டி, இயேசுவின் மேல் ஆர்வத்தைக் காட்டி, சபைக்கு தொடர்ந்து வருவதெல்லாம் கொஞ்சக்காலம் அவர்களில் காணப்படும். அதுமட்டுமல்லாமல், வசனத்தின் மூலமாக குற்றங்கள் உணர்த்தப்பட்டு, இந்த மாதிரியான குற்றங்களை நாம் செய்யக்கூடாது என்று சொல்லி, ஒழுக்க ரீதியில் கூடத் தங்களை மாற்றிக் கொள்வதற்கான முயற்சியிலும் அவர்கள் ஈடுபடுவார்கள். அப்பொழுது சபையார் அவர்களைப் பார்க்கிற பொழுது, அவர்கள் கிறிஸ்தவராக மாறிவிட்டது போலவும், வாழ்க்கையானது ஒழுங்காக இருப்பது போலவும், வசனத்தில் ஆர்வம் காட்டுவது போலவும் வெளிப்புறமாக அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இப்படியெல்லாம் இருந்தும் கூட அங்கு பிரச்சனை இருக்கிறது. அவர்களுக்கு பழைய வாழ்க்கையிலிருந்த மோகம் அவர்கள் இன்னும் விட்டபாடில்லை.

இந்த முட்புதர்களில் முதலாவது, உலகக் கவலைகள்.

உலகக் கவலைகள் என்பது என்ன? நான் இந்த உலகத்தில் தொடர்ந்து ஒழுங்கான ஒரு வேலையோடு வாழ்ந்துவிடுவேனா? வேலைக்கேற்ற ஒரு நல்ல வருமானம் எனக்குக் கிடைக்குமா? எனக்குச் சொந்தமானதாக இருக்கும்படியாக ஒரு வீடு வேண்டுமே. என் பிள்ளைகளுக்கு நான் என்ன சேர்த்து வைக்க முடியும்? இப்படியான உலகக் கவலைகள் அவனைப் பற்றிக்கொள்ளுகின்றன. இந்தக் கவலைகளை எல்லாம் எப்படிச் சமாளிப்பது என்று அவன் தெரியாமல் இருக்கிறான். அவன் ஆண்டவர் மேலும், சபை மேலும், வசனத்தின் மேலும் ஈடுபாடு காட்டுகிறான். ஆனால் இந்த உலகத்துக் கவலைகளை அவனால் விட்டுவிட முடியாமல் இருக்கிறது. கவலைப்படாதீர்கள் என்று கிறிஸ்தவர்களுக்கு ஆண்டவர் சொல்லியிருக்கிறார். ஒரு கிறிஸ்தவனாக இருந்தால் ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஏன் கவலைப்படாதே என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்? கவலைப்பட்டு உங்களால் ஆகப்போவது ஒன்றுமேயில்லை. கவலைப்பட்டால் சரீர ரீதியில் பிரச்சனைகள் வரும். இந்தக் கவலைகள் எல்லாம் அதிகரிக்கிற பொழுது அது நம்மை அரிக்க ஆரம்பித்துவிடும். வயிற்றில் அல்சர் வருவது இந்தக் கவலைகளால்தான். கவலைகளைத் தீர்த்துகொள்ள முடியாமல் குடியில் தஞ்சம் அடைவோர் அதிகம். ஆகவே இந்தக் கவலைகளால் நமக்கு ஒரு நன்மையும் இல்லை. ஆண்டவர் கிறிஸ்தவர்களுக்கு என்ன சொல்கிறார்? நீங்கள் கவலைப்படாதீர்கள், அதனால் உங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. ஆகவே உங்கள் துன்பங்கள் பிரச்சனைகளை எல்லாம் என்மேல் வைத்துவிட்டு அமைதியாக சமாதானத்தோடு இருங்கள் என்கிறார். பொதுவாக கவலைகள் எல்லோருக்கும் வரும், ஆனால் கிறிஸ்தவர்களுக்கு நன்றாகத் தெரியும் தன் தலையில் இருக்கிற ஒரு முடியைக் கூட ஒன்றும் பண்ண முடியாத நிலையில் இருக்கிறோம் என்று. நாம் கவலைப்பட்டுச் சாதிக்கப்போவது என்ன? ஒன்றுமேயில்லை. ஒரு கிறிஸ்தவன் என்பவன் கவலைகளை ஜெபத்தில் ஆண்டவர் மீது வைத்துவிட்டு, தைரியத்தோடும், பெலத்தோடும், ஜெபம் கேட்கிற தேவன் இதற்கு ஒரு வழி பண்ணுவார் என்கிற நம்பிக்கையோடு பொறுமையாகக் காத்திருப்பான். யோபுவை நாம் பழைய ஏற்பாட்டில் பார்க்கிறோம். அவனுக்கு வந்த பிரச்சனையை விட நம்மில் யாருக்காவது பெரிய பிரச்சனை வந்திருக்கிறதா? அவனோடு நம்மால் போட்டி கூட போட முடியாது, அந்தளவுக்கு அவனுக்குப் பிரச்சனைகள் இருந்தன. தான் கொண்டிருந்த எல்லாவற்றையும் அவன் இழந்தான். தோட்டம் துறவு அத்தனையையும் இழந்து, தன்னுடைய குடும்பத்தையும் இழந்து, நோய்களால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்தான். அப்படி இருந்தாலும்கூட ஆண்டவர், அவன் தன் நாவினால் எந்தவிதமான பாவத்தையும் செய்யவில்லை என்று சொல்லுகிறார். யோபு அந்தளவுக்குத் தன்னுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறான். ஆண்டவர் யோபுவை உதாரணமாகக் கொடுத்திருப்பதற்குக் காரணம், விசுவாசிகள் அதைப் பார்த்துப் படித்துச் சிந்திப்பதற்காகத்தான். கவலைப்படுவதால் நாம் ஒரு நன்மையையும் அடைவதில்லை. கர்த்தர் நம்மோடு இருக்கிறபொழுது நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்மேல் அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு நாம் அமைதியாக இருக்க முடியும். ஒரு விசுவாசியாக இல்லாத ஒருவன் அதைச் செய்ய முடியாது. அவன் காட்டுகின்ற ஆத்மீக ஆர்வம் அனைத்தும் இருதயத்தின் ஆழத்தில் இருந்து எழாததால் அவனால் அந்தக் கவலைகளை நிறுத்திக் கொள்ள முடியாது. ஆனால் அந்தக் கவலைகள் அவன் வாழ்க்கையில் மேலோங்கி விடுகின்றன. அப்படியாக அவன் நெருக்கப்படுவதனால் ஆண்டவர்மேல் அவன் காட்டுகின்ற ஆரம்ப ஆர்வமெல்லாம் குறைய ஆரம்பிக்கும்.

இரண்டாவது முட்புதர் பணமோகம்.

இதுவும் அவனுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. கிறிஸ்தவர்களில் அநேகர் அதில் அகப்பட்டு விடுகின்றனர். ஆண்டவரிடம் வந்து ஆண்டவரோடு இருக்க ஆசை, ஆனால் வேலை வேலை என்று வாரம் முழுவதும் செலவிட்டு ஆண்டவருக்குக் கொடுக்க வேண்டியதில் குறை வைப்பவர்கள் அநேகர். நீங்களே உங்களைக் கேட்டுப்பாருங்கள். எவ்வளவு நேரம் ஜெபம் பண்ணுகிறீர்கள்? எவ்வளவு நேரம் வேதம் வாசிக்கிறீர்கள்? எவ்வளவு நேரம் வேதத்தை ஆராய்ந்து படிக்கிறீர்கள்? தேவனுடைய மக்களோடு ஐக்கியத்தில் வருகிறீர்களா? சபை வாழ்க்கைக்கு உங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறீர்களா? நன்றாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் இந்த உலகத்துக் காரியங்களுக்குக் கொடுக்கின்ற நேரம் அதிகமாக இருக்கிறது, ஆண்டவரில் அன்பு செலுத்துகிறேன் என்று சொல்லுகிறீர்கள். ஆனால் அவருக்கு கொடுக்கின்ற நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது. அது என்ன கிறிஸ்தவம்? நம்முடைய நன்மைக்காகதான் ஆண்டவர் ஜெபத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார், பிரசங்கம் கேட்பதை ஏற்படுத்தி வைத்திருக்கிறார், சபையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார், சபை ஐக்கியத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். ஆனால் இவைகளைக் காட்டிலும் நம்முடைய சொந்தத் தேவைகளுக்காக நாம் கொடுக்கின்ற நேரம் மிகவும் அதிகமாக இருக்கிறது. இது வாழ்க்கையில் ஒரு பயிற்சியாகத் தொடருமானால் நீங்கள் எங்கே போகப் போகிறீர்கள் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். இது உங்களைப் பற்றியதாக இருந்தால் நான் கேட்க வேண்டிய கேள்வி, இதற்குப் பெயர்தான் ஆண்டவர் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பா? என்று நீங்களே உங்களை கேட்டுப் பார்க்க வேண்டும். பண மோகம் மோசமானது என்று ஆண்டவர் எச்சரித்திருக்கிறார். அது நம்மை இல்லாமல் ஆக்கிவிடும்.

மூன்றாவது முட்புதர் மற்றவைகளைப் பற்றி நமக்குள் உண்டாகின்ற இச்சைகள்.

லூக்கா இதனைச் சிற்றின்பம் என்று சொல்லுகிறார். இந்த உலகத்து இன்பங்களுக்காக ஆசைப்படும் இந்த மனிதனால் அதை விடமுடியவில்லை. அவன் வாழ்க்கையில் உலக ஆசைகளும் இன்பங்களும் மேலோங்கிக் காணப்படுவதால் என்ன நிகழ்கிறது? ஆண்டவரிலும், அவருடைய வசனத்திலும், சபையிலும் இருக்கின்ற ஆர்வம் குறைந்து போகிறது. அவன் இந்த உலகத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து விடுகிறான். எங்கிருந்து வந்தானோ அதற்கே தன்னுடைய வாழ்க்கையைக் கொடுத்துவிடுகிறான். வாழ்க்கையில் பணத்தையே தேடி அலையாதீர்கள். வேதத்தில் ஒருவன் தன்னுடைய தோட்டத்தில் பயிர் விளைச்சல் அதிகரித்து அதையெல்லாம் சேர்த்து வைத்து, இனிமேல் நான் உழைக்க வேண்டிய அவசியமே இல்லை, வாழ்நாள் முழுவதும் தேவையான பணம் சேர்த்து வைத்திருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டான். ஆனால் ஆண்டவர் அவனைப் பார்த்து இன்றைக்கு நீ இறக்கப் போகிறாய், இதையெல்லாம் என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார். நம் வாழ்க்கையில் நாளைக்கு என்ன நடக்குமென்று நமக்குத் தெரியாது. அதை நம்மால் தீர்மானிக்க முடியாது. நாம் போடும் திட்டங்கள் எல்லாமே கர்த்தரால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவே பண மோகமும் உலக ஆசைகளும் நம்மை அழித்துவிடும்.

1 தீமோத்தேயு 6:9, 10

ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. ஏனென்றால் பணமிருந்தால் அதிகமாகப் பாவம் பண்ண முடியும். நினைத்த பாவத்தையெல்லாம் பணத்தை வைத்துச் செய்ய முடியும். அதனால்தான் அது அதிக தீமைகளுக்கு வேராயிருக்கிறது. ஆகவேதான் வேதம் “போதுமென்கிற மனதோடு இரு” என்று சொல்லுகிறது. அதிகப்பணம் அதிக பாவத்தை செய்வதில் கொண்டு போய் விட்டு விடும். ஏனென்றால் எல்லாருக்கும் பணத்தில் கட்டுப்பாடு இருக்காது. ஆகவே பணம் இருந்தால் அதோடு கட்டுப்பாட்டையும் சேர்த்து ஆண்டவரிடம் கேட்க வேண்டும். ஆகவேதான் பவுல், “சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.” என்று சொல்லுகிறார். பண ஆசை விசுவாசத்தை விட்டு விலகிப்போவதில் கொண்டுபோய் விட்டுவிடும். இதெல்லாம் அவன் வாழ்க்கையில் மேலோங்கி நிற்பதால், ஆத்மீகரீதியில் அவன் என்ன காரியங்களையெல்லாம் நேசித்தானோ அத்தனையையும் விட்டு விலகிப் போய்விடுவான். இதுதான் முட்புதர்கள் உள்ள நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்டிருந்தவனின் நிலைமை. ஆகவேதான் யோவான் சொல்லுகிறார்,

1 யோவான் 2:15, 16

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.

உண்மையான கிறிஸ்தவர்களாக இருந்தால் வாழ்க்கையில் உலகம் பெரிதாக இருக்கக் கூடாது. உலகத்துக் காரியங்களில் உங்களுக்கு அன்பு அதிகமாக இருந்தால் ஆண்டவரின்மேல் உங்களுக்கு அன்பு இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று யோவான் சொல்லுகிறார். இந்த உலகத்தின் காரியங்களை இச்சித்து அன்புகூர்ந்தால் நாம் உலக மனிதர்களைப் போல மாறிவிடுகிறோம். அது நாம் ஆத்மீக வாழ்க்கையிலிருந்து வழுவிப் போவதற்குத்தான் உதவுமே தவிர, ஆத்மீக வாழ்க்கையில் சிறப்பாக இருப்பதற்கு உதவாது. பணம் இருப்பவர்களைப் பார்த்து பவுல் சொல்லுகிறார்,

1 தீமோத்தேயு 6:17

இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்.

பணம், செல்வாக்கு எல்லாமே நிலையில்லாதது. நமக்குத் தேவையான அனைத்தையுமே தருகிற ஜீவனுள்ள தேவன்மேல் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். எனக்குத் தெரிந்த உண்மையான கிறிஸ்தவர்களில் சிலர் பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பண ஆசையே இல்லாமல் இருக்கத் தங்கள் இருதயத்தில் பயங்கர கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தேவைக்கு மேல் பணத்தைச் செலவழிப்பதில்லை, மிகுதியான பணத்தை கிறிஸ்தவப் பணிகளுக்குக் கொடுத்துவிடுவார்கள். அவர்களிடத்தில் பணமிருந்தால் கூட பணமோகம் இல்லாதபடி தங்கள் இருதயத்தைப் பாதுகாத்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் அதை எல்லாராலும் செய்ய முடியாது, பண ஆசை நம் இருதயத்தை ஒழுங்காக இருக்க விடாது. பண ஆசை நம்மை இல்லாமல் ஆக்கிவிடும். இது நம்மினத்தில் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பண ஆசை காரணமாக விசுவாசத்தை விட்டு விலகி, அநேகர் குடும்பத்தையும் ஒழுங்காகப் பார்த்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள். கணவன் ஒரு நாட்டிலும், மனைவி ஒரு நாட்டிலும், பிள்ளைகள் இன்னொரு நாட்டிலும் வாழ்கிறார்கள். ஆனால் இப்படி இருப்பவர்களும் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளுவார்கள். வேதத்தில் இப்படியாக வாழும்படி ஆண்டவர் கற்றுக்கொடுத்து இருக்கிறாரா? மனைவியையும் பிள்ளைகளையும் நல்ல வழியில் நடத்தி, குடும்பமாக ஆலயத்துக்கு போய் ஆண்டவரை ஆராதித்து, அவருடைய வழியிலே எல்லோரும் ஒருமுகமாகப் போவதற்காகதான் குடும்பம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது குடும்பத்தைப் பிரிந்து, ஒவ்வொருவரும் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் செய்யாமல், இந்த உலக மக்களைப் போல வாழுகிற பொழுது எப்படித் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ள முடியும்? நிச்சயமாக அத்தகையோர் வாழ்க்கையில் கிறிஸ்து இருக்கிறாரா? என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறது.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்:

முட்புதர் நிலத்தில் வளருகின்ற விதையைப் போன்று இருதயத்தை கொண்டிருக்கிறவர்களைப் பற்றி மூன்று பாடங்களைப் படிக்கலாம்.

முதலாவதாக, நான்கு நிலங்களில் முதல் மூன்று நிலங்களில் எதுவுமே பலன் கொடுக்கவில்லை. வழியருகே நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்டிருக்கிறவர்கள், கற்பாறை நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்டிருக்கிறவர்கள், இந்த முட்புதர் நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்டிருக்கிறவர்கள் என மூன்று வகையான நிலங்களிலும், அவர்களுடைய வாழ்க்கையில் சுவிசேஷம் ஆழமாகப் பதிந்து அதுபோய் முடிய வேண்டிய கட்டத்தை அடையவில்லை. மூன்று பேருக்குமே இரட்சிப்பு கிடைக்கவில்லை, ஆனால் வெளிப்புறமாக சுவிசேஷத்தின் மூலமாகக் கிடைக்கின்ற சில பொதுவான நன்மைகள் சில காலத்திற்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருந்திருக்கின்றன. ஆனால் அவை அவர்களில் நிலைத்து நிற்கவில்லை என்று ஆண்டவர் சொல்லுகிறார். அவர்கள் காது கொடுத்து சுவிசேஷத்தைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அதை அவர்களால் உணர முடியவில்லை. அதை உணர்ந்து ஏற்று அதைப் பின்பற்றிக் காப்பாற்றிக்கொள்ள அவர்களால் முடியவில்லை. யூதாசைப் போல உலக இச்சையும் பண ஆசையும் அவர்கள் வாழ்வில் அழிவில்தான் போய் முடிந்திருக்கிறது. வெறும் முப்பது வெள்ளிக்காசுக்காக ஆண்டவரை யூதாசு காட்டிக் கொடுத்தான். தேமா உலக இன்பங்களை நேசித்து என்னைவிட்டு விலகிப் போய்விட்டான் என்று பவுல் எல்லாருக்கும் தெரியும்படியாக எழுதி வைத்திருக்கிறார்.

இரண்டாவதாக, ஒருவன் சுவிசேஷத்தைக் கேட்டு ஆவிக்குரிய வாழ்க்கையின் வெளிப்புற அடையாளங்களைக் கொண்டிருந்தும் மெய்யான மனந்திரும்புதல் இல்லாமல் இருந்து விட முடியும். இந்த மூன்று நிலங்களில் கற்பாறை நிலத்தைப் போன்றவர்களும், முட்புதர் நிலத்தைப் போன்றவர்களும் சுவிசேஷத்தைக் காது கொடுத்துக் கேட்டு, வெளிப்புறமாக ஒரு ஆர்வத்தைக் காட்டி, அது சொல்லுகிறபடி ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை எல்லாம் செய்திருந்தபோதும் மெய்யான மனந்திரும்புதல் அவர்களில் இருக்கவில்லை. கடந்த வாரம் என் சபையில் பிரசங்கித்த போது ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டேன். அதில், பாவத்தைப் பற்றி சரியாக உணராமல், அந்தப் பாவத்தை ஆண்டவருக்கு முன்பாக செய்திருக்கிறேன் என்ற வலி நெஞ்சில் ஏற்படாமல், அந்த பாவத்தில் இருந்து விலக வேண்டும், அதற்கு ஒரே வழி இயேசு கிறிஸ்து மட்டுமே, அவர் மட்டுமே பாவமன்னிப்பை கொடுக்கக் கூடியவராக இருக்கிறார், இவ்வளவு மோசமாக பாவத்தில் இருக்கிறேனே என்று நினைத்து வருந்தி, அதிலிருந்து விடுபடுவதற்காக ஆண்டவரிடத்தில் அதிகமாக ஜெபிக்காத ஒரு மனிதன் ஒருநாளும் இரட்சிப்பை அடைய முடியாது என்று சொன்னேன். பாவத்திலிருந்து ஆரம்பிக்காத ஒரு இரட்சிப்பு இரட்சிப்பே அல்ல. ஆகவே உண்மையான மனந்திரும்புதல் இந்த இரண்டு வகையான இருதயத்தைக் கொண்டிருப்பவர்களிடமும் இருக்கவில்லை. உண்மையான மனந்திரும்புதல் இருந்தால் நிச்சயமாக அது இரட்சிப்பில் போய் முடியும். ஏனென்றால் விசுவாசமும் மனந்திரும்புதலும் சேர்ந்து வரும். உண்மையாக பாவத்திலிருந்து மனந்திரும்பியவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கு நன்றி சொல்லி, தான் செய்த பாவங்களை நினைத்து மிகவும் துக்கமடைவான். அவன் திரும்பிப்போக மாட்டான், நாய் சாப்பிட்டதை வாந்தி எடுத்து திரும்பத் தானே சாப்பிடுவது போல உண்மையான மனந்திரும்புதலை அடைந்தவன் நடக்க மாட்டான்.

கோவிட் காலத்தில் மனந்திரும்புதலைப் பற்றி அதிகமாக செய்திகளைக் கொடுத்தேன். அதையெல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறோம். அதை வாங்கி அதிகமாக வாசித்துப் பாருங்கள். அதில் எந்த அளவுக்கு உண்மையான மனந்திரும்புதல் அவசியம் என்பதை விளக்கியிருக்கிறேன். இயேசுவை விசுவாசிக்கிறேன் என்று சொல்லிவிட்டால் போதாது. அப்படி சொல்லி ஆயிரக்கணக்கான பேர் ஆண்டவரை விட்டு விலகிப்போய் இருக்கிறார்கள். உண்மையான மனந்திரும்புதல் இருக்க வேண்டும், உண்மையான மனந்திரும்புதல் இல்லாதவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கக்கூடாது. சில காலத்திற்கு உண்மையான மனந்திரும்புதல் ஏற்பட்டிருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். கெட்ட குமாரனுடைய கதையில் நாம் பார்க்கிறோம், உண்மையான மனந்திரும்புதல் அவனுக்கு ஏற்பட்டது. ஏனென்றால் அவனைப் பற்றி வேதம் என்ன சொல்லுகிறது? அவன் தன்னுடைய நிலையை உணர்ந்தான். அவனது மனந்திரும்புதல் எத்தகையது என்பதை அவனுடைய நடவடிக்கைகளிலும் வாழ்க்கையிலும் பார்க்கிறோம். அவன் பரலோகத்தில் இருக்கின்ற என்னுடைய பிதாவுக்கு எதிராகவும், என்னுடைய தகப்பனுக்கு எதிராகவும் நான் பாவம் செய்துவிட்டேன் என்று சொல்லுகிறான். அப்படி செய்து விட்ட பாவத்தை நினைத்து எந்த அளவுக்கு அவன் வருந்துகிறான் என்பதை அவனுடைய நடவடிக்கைகள் நமக்குக் காட்டுகிறது. அப்பாவினிடத்தில் போய் நான் பெரிதாக ஒன்றும் கேட்கப் போகிறதில்லை. அவர் என்னை ஒரு வேலைக்காரனை விட மோசமாக வைத்திருந்தாலும் பரவாயில்லை, ஏனென்றால் அவ்வளவு கொடுமையான பாவத்தை செய்த பாவி நான் என்று சொன்னான். மேலும் எனக்கு மன்னிப்பு வேண்டுமென்று கேட்டான். அதுதான் உண்மையான மனந்திரும்புதல். உண்மையாக மனந்திரும்புகிறவன் பாவத்தை வெறுத்து, அதை விட்டு விலகி ஓடி, அதோடு எந்தத் தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளமாட்டான். அதற்காகத் துக்கப்பட்டு ஆண்டவரிடத்தில் சமாதானத்தை அடைவான். ஆகவே கற்பாறை மற்றும் முட்புதர் நிலத்தைப் போன்று இருக்கிறவர்களுக்கு உண்மையான மனந்திரும்புதல் இருக்கவில்லை. அவர்களில் சுவிசேஷ வாழ்க்கைக்குரிய வெளிப்புறமான அடையாளங்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. அது மிகவும் ஆபத்தானது என்பதை ஆண்டவர் நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். ஆண்டவர் நம்முடைய இருதயத்தை ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்படி சொல்லுகிறார். நம்முடைய இருதயம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? உண்மையாக ஆண்டவரை விசுவாசிக்கிறோமா? அல்லது போலிகளாக இருந்து விசுவாசத்தை விட்டு விலகிப் போகின்ற நிலையில் இருக்கிறோமா?

மூன்றாவதாக, ஆபத்து இல்லாத விஷயங்களால் நாம் அழிந்து போய்விடக்கூடிய ஒரு ஆபத்தை ஆண்டவர் உணர்த்துகிறார். அப்படியென்றால் என்ன, என்று நீங்கள் கேட்கலாம். பணத்தை எடுத்துக்கொள்ளுவோம், பணத்தில் பிரச்சனை இல்லை. பணத்தை யாருமே பாவமாகப் பார்ப்பதில்லை. அந்தப் பணத்தைப் பயன்படுத்துகிற விதத்தில்தான் பாவம் வந்துவிடுகிறது. பணம் பாவத்தைச் செய்யாது, அந்தப் பணத்தை வைத்திருக்கிற மனிதர்களும், சேகரிக்கும் மனிதர்களும் அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் பாவம் வந்து விடுகிறது. பணம் எல்லாருக்கும் தேவை. நாம் வேலை செய்வதற்கு வருமானம் தேவை. வருமானம் இருக்கிற பொழுது தான் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும், உணவுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும், தண்ணீரை வாங்க முடியும், மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியும். ஆகவே பணம் நமக்கு அவசியம் தேவை. பணத்தால் வருவதல்ல நமக்கு வரும் பிரச்சனைகள், அந்தப் பணத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் பிரச்சனை. ஆகவே பணம் ஆபத்தில்லாத ஒன்று, ஆபத்தில்லாத ஒன்றாலே அழிந்து போகக் கூடிய ஒரு நிலை ஏற்பட்டு விடுகிறது. அதைதான் ஆண்டவர் இந்த முட்புதர் நிலத்தை போல வசனத்தைக் கேட்டவனைக் குறித்து நமக்கு சொல்லுகிறார். பண மோகத்தால் சத்திய விலகல் அவன் வாழ்க்கையில் ஏற்பட்டது. ஆபத்தில்லாத விஷயம் அழிந்து போய் விடக்கூடிய நிலைக்கு அவனைக் கொண்டுபோய் விட்டது.

இதேபோலத்தான் உலகத்துக் கவலைகளும் அவனுக்கு அழிவைக் கொண்டு வந்தது. இந்த உலகம் நமக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது, இந்த உலகத்தில் கிறிஸ்தவர்கள் நீதியாகவும் நியாயமாகவும் அனுபவிக்க வேண்டிய நன்மைகள் இருக்கின்றன. ஒரு கிறிஸ்தவன் காட்டில் வாழ்வதற்காக உலகம் படைக்கப்படவில்லை. சொந்தமாக ஒரு வீடு வைத்திருப்பது தவறா? தவறே இல்லை. சொந்தமாக ஒரு கார் வைத்திருப்பதில் ஏதாவது தவறு இருக்கிறதா? இல்லவே இல்லை. ஆனால் நம்முடைய மோகம் அவற்றின்மேல் இருந்து அவற்றிற்காகவே நாம் வாழ்ந்து கொண்டிருந்தால் ஆபத்து இல்லாத அந்த விஷயங்களும் நமக்கு அழிவைக் கொண்டு வந்துவிடும். சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்றுதான் முதலில் ஒருவன் ஆசைப்படுவான். வாங்கிய பிறகு இன்னொரு வீடு வாங்குவோம் என்று யோசித்து அதற்காகக் கடன்களை வாங்கி, வீட்டைக் கட்டி அதை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க நினைக்கிறான். பிறகு ஆசை அதிகரித்து மூன்று நான்கு என வீடுகளைக் கட்டத் திட்டமிடுகிறான். பிறகு அவனால் கடன்களை அடைக்க முடியாததால் வீடுகளை வங்கி பறித்துக்கொள்ளுகிறது. ஆபத்தில்லாத விஷயங்கள் நமக்கு அழிவைக் கொண்டு வந்துவிடுகிறது. இப்படியாக அழிந்து போனவர்கள் அதிகம்பேர் உள்ளனர்.

ஆண்டவர் இயேசு கொடுக்கிற இரட்சிப்பு விலைமதிப்பில்லாதது. அதற்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கலாம். அப்படிப்பட்ட ஆண்டவரையும் இரட்சிப்பையும் அடைந்திருக்கிறபோது உலக ஆசைகளில் நம்மை ஏன் பலி கொடுக்க வேண்டும்? அதனால் நாம் அடையப் போகிற பயன் என்ன? நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். ஆகவே நாம் சத்தியத்தில் வெளிப்படையாகவும், வெளிப்புறமாகவும் ஆர்வம் காட்டுவதில்லை எந்த பிரயோஜனமும் இல்லை. லூக்கா எழுதின சுவிசேஷத்தில் ஆண்டவர் சொல்லுகிறார்,

லூக்கா 9:57-60

அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.

இவர்கள் எல்லாம் என்ன சொல்லுகிறார்கள்? ஆண்டவரைப் பின்பற்ற வேண்டுமென்று பெரிதாகப் பேசுகிறார்கள், ஆனால் இந்த உலகத்து விஷயங்களிலிருந்து அவர்களுக்குத் தங்களுடைய மனதை அகற்றிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. ஆண்டவர் அவர்களைப் பார்த்து உலகம் அதைப் பார்த்துக் கொள்ளட்டும், நீங்கள் என் பின்னால் வாருங்கள் என்று சொல்லுகிறார், ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை.

ஒரு பணக்கார இளம் வாலிபனை நாம் சுவிசேஷ நூல்களில் வாசிக்கிறோம், அவனுக்கு நித்திய ஜீவன் தேவையாக இருந்தது. ஆண்டவர் அவனைப் பார்த்து, உனக்கு இருக்கிற சொத்தை எல்லாம் விற்று மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு வா என்று சொன்னார். ஆனால் அவனால் அதை செய்ய முடியவில்லை. ஏனென்றால் பண ஆசையும், உலகத்து ஆசையும் அவனிடத்தில் காணப்பட்டது. பத்துக் கட்டளைகளில் ஒன்று இச்சை இருக்கக்கூடாது என்கிறது. அது அவனுடைய இருதயத்தில் இருந்தது. அந்தப் பாவம் அவனில் இருந்தது என்பதை அவனால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அதை ஆண்டவர் சுட்டிக் காட்டின பொழுதும் அதை விட்டுவிட மனதில்லாமல் துக்கத்தோடு திரும்பிப் போனான். அதனால் அவன் நித்திய ஜீவனை அதாவது இரட்சிப்பை அடைய முடியாமல் போனான். இந்த உலகமும் ஆண்டவரும் ஒருவனுக்கு நண்பர்களாக இருக்க முடியாது என்று ஆண்டவரும் சொல்லுகிறார், பவுலும் சொல்லியிருக்கிறார். கிறிஸ்துவை விசுவாசிக்கிற பொழுது இந்த உலகத்தில் இருந்து தான் அந்த வாழ்க்கையை வாழ வேண்டும். ஆனால் உலகப்பற்று அதிகமாக இருந்து அந்த விசுவாசத்தை அழித்து போடுகிறபடி இருக்கக் கூடாது.

இந்த மூன்று பாடங்களையும் நீங்கள் யோசித்துப் பார்த்து உங்களையே நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். எப்படிப்பட்ட ஒரு நபராக நீங்கள் இருக்கிறீர்கள்? வழியருகே நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்ட மனிதனைப் போலவா? கற்பாறை நிலத்தில் வளர்ந்த செடியைப் போன்ற ஒரு இருதயத்தைக் கொண்டிருக்கிறோமா? அல்லது இந்த முட்புதர்கள் வளர்ந்த ஒரு நிலத்தில் வளர்ந்த ஒரு செடியைப் போல ஆண்டவருக்கு அக்கறை கொடுப்பது போல ஒரு அளவுக்கு காட்டிக்கொண்டிருந்தாலும், இந்த உலக ஆசைகளை விட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோமா? நம் விசுவாசம் எப்படிப்பட்டது என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு இந்த உவமை உதவுகிறது.

உண்மையான விசுவாசி இதற்கெல்லாம் தம்முடைய வாழ்க்கையிலேயே இடம் கொடுக்காமல் இறுதிவரையும் அவரில் நிலைத்திருக்கப் பார்ப்பான். இறுதி வரையும் அவரில் நிலைத்திருப்பதற்காக ஒரு விசுவாசியாக விடாமுயற்சியோடு செய்யவேண்டிய காரியங்களில் அவன் விடாப்பிடியாக இருப்பான். ஆகவேதான் வேதத்தின்படி சீர்திருத்த இறையியல் ஒரு போதனையை விளக்குகிறது. அதற்குப் பெயர் விசுவாசிகளின் விடாமுயற்சி. உண்மையான ஒரு விசுவாசி விடாமுயற்சியோடு விசுவாசத்தில் நிலைத்து நிற்பதற்கான காரியங்களையெல்லாம் தவறாது செய்வான். அப்படிப்பட்டவனைத்தான் ஆண்டவரும் பாதுகாக்கிறார். ஆண்டவர் உண்மையிலேயே நம்மைப் பாதுகாக்கிறாரா இல்லையா என்பதை எப்படித் தெரிந்துகொள்ள முடியுமென்றால், நாம் நம்முடைய ஆத்மீக விஷயங்களில் விடாப்பிடியாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். அப்படித் தொடர்ந்து விசுவாசத்தோடு ஆத்மீக காரியங்களைச் செய்து கொண்டிருந்தால் நிச்சயமாகக் கர்த்தர் நம்மைப் பாதுகாக்கிறார் என்கிற நம்பிக்கை நம் இருதயத்தில் கிடைக்கும். அப்படித் தொடராமல் இன்றைக்குக் கொஞ்சம், நாளைக்குக் கொஞ்சம், நிலைமை மாறின பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வாழ்ந்து கொண்டிருந்தால், நம் வாழ்க்கை ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது என்பதைத்தான் அது அடையாளம் காட்டுகிறது. ஆகவே நாம் எப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு இந்த உவமை நமக்கு உதவுகிறது. ஆண்டவர்தாமே உங்களோடு பேசட்டும். வேதத்தின் மூலமாக நம்மோடு பேசி நம்மைக் கண்டித்து நமது தவறை உணர்த்தினால் நாம் மனந்திரும்புவோம். தவறு இருக்கிறதென்று தெரிந்தால் மட்டும் போதாது, தவறைத் திருத்திக் கொள்ளுகிறவன்தான் உண்மையான விசுவாசி. அந்தத் தவறைத் தொடர்ந்து செய்யாமல் இருப்பதற்கான சகல முயற்சிகளையும் செய்யவேண்டும். ஆகவே ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்யட்டும். செய்த தவறை மீண்டும் செய்யாமல் திருந்தி வாழுகிற கிறிஸ்தவர்களாக இருப்போம். இந்த உவமை கற்றுத் தருகின்ற பாடங்களை அறிந்து கொண்டு ஆண்டவருக்கு விசுவாசமாக இருக்கப் பார்ப்போம்.

மறுமொழி தருக