கற்பாறை நிலம்

மத்தேயு 13 ஆம் அதிகாரத்தில் ஒரு உவமையை ஆராய ஆரம்பித்தோம். அந்த அதிகாரத்தில் பல உவமைகள் காணப்படுகின்றன. அவற்றில் முதலாவது உவமையான விதைக்கிறவனின் உவமையைக் கடந்த இதழில் கவனித்தோம். அதில் முதலாவதாக விளக்கப்பட்டிருக்கும் வழியருகே விழுந்த விதையைக் கடந்த இதழில் விளக்கியிருக்கிறேன். இந்த ஆக்கத்தில் நாம் அதற்கு அடுத்து விளக்கப்பட்டிருக்கும் கற்பாறை நிலத்தில் விழுந்த விதையை ஆராயப் போகிறோம்.

மத்தேயு 13:5, 6

சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.

இதற்கான விளக்கத்தை கீழ்வரும் வசனங்களில் இயேசு கொடுக்கிறார்.

மத்தேயு 13:20, 21

கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.

ஆண்டவராகிய இயேசு விளக்கிய இந்த உவமைகள் பொதுவாகவே கிறிஸ்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் உவமை. வேதம் வாசிக்கிற கிறிஸ்தவர்களுக்கு, நல்ல பிரசங்கியின் கீழ் இருந்து வருகிற ஆத்துமாக்களுக்கு, விளக்கப்பட்டிருக்கும் அனைத்து உவமைகளிலுமே நன்றாகப் பரிச்சயமான உவமைதான் இந்த விதைக்கிறவனின் உவமை. இருந்தபொழுதும் ஆர். சி. ஸ்பிரவுல் என்ற சீர்திருத்த பிரசங்கி சொல்லுகிறார்,

“இயேசு கிறிஸ்துவின் போதனைகள் எல்லாவற்றிலுமே மிகவும் கடினமான போதனை இந்த உவமையில்தான் அடங்கியிருக்கிறது.”

நம் பார்வைக்கு அவை சாதாரணமான போதனையாகத் தெரியலாம், ஆனால் ஸ்பிரவுல் அப்படி சொல்லுவதற்குக் காரணமிருக்கிறது. முதலாவது காரணம், என்னைப் பொறுத்தவரை, இந்த உவமையைச் சரியாக புரிந்து கொள்ளாமல் அநேக பிரசங்கிகள் தேவையில்லாமல் அநேக காரியங்களை உட்புகுத்திப் பேசியிருக்கிறார்கள். மேலும் அவர்கள் இந்த உவமை என்னதான் சொல்லுகிறது என்பது தெரியாமல் தங்கள் மனம் போனபடி இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர். கடந்த ஆக்கத்தில் நான் விளக்கியபடி, எந்தவொரு உவமையும் ஒரு முக்கியமான போதனையைக் கொண்டிருக்கும். அந்தப் போதனையைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, உவமையின் அத்தனை பகுதிகளுக்கும் நாம் விளக்கம் கொடுக்க முற்படக் கூடாது. அதில் காணப்படும் முக்கியமான போதனை மட்டுந்தான் நமக்கு அவசியமானது.

வேதவசனத்திற்கு எப்போதுமே பொருள் ஒன்றுதான், அதில் பல அர்த்தங்கள் இருக்காது. அந்த முக்கியமான பொருளைக் கண்டுபிடிப்பதுதான் பிரசங்கியின் வேலை. உவமையை ஆழமாகக் கருத்தோடு நுணுக்கமாகப் படித்து அதன் பொருளைக் கண்டுபிடித்து உவமையை விளக்க வேண்டும். உவமைகளில் பல பயன்பாடுகள் காணப்படும்; அதற்கு அர்த்தம் ஒன்றுதான். எந்தவொரு வசனத்திலோ அல்லது வசனப் பகுதிகளிலோ ஒருபோதும் பல அர்த்தங்கள் காணப்படாது.

இரண்டாவதாக, இந்த உவமையின் தலைப்பை விதைக்கிறவனின் உவமை என்றுதான் நாமெல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறோம். வேதமும் அவ்வாறுதான் சொல்லுகிறது. ஆனால் இந்த உவமையை நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்கிறபோது அது விதைக்கிறவனைப் பற்றியல்ல, விதை நிலங்களைப் பற்றிதான் அதிகமாக விளக்குகிறது என்பதை அறியலாம். அதைப் பற்றிதான் நாம் சிந்திக்க வேண்டுமென்று இந்த உவமை எதிர்பார்க்கிறது. ஆகவே, இதை விதை நிலங்களின் உவமை என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும்.

நாம் உவமை விளக்குகின்ற ஒவ்வொரு நிலமாக ஆராய்ந்து வருகிறோம். கடந்த முறை நாம் வழியருகே என்ற நிலத்தைக் குறித்துக் கவனித்தோம். இப்போது கற்கள் நிறைந்த பகுதியை ஆராயப் போகிறோம். ஆண்டவர் சொல்லுகிறார்,

மத்தேயு 13:5

சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது.

பிறகு அதற்கான விளக்கத்தைக் கொடுக்கிறார். இந்த நிலம் மனிதனுடைய இருதயத்தோடு ஒப்பிடப்படுகிறது. அதாவது எந்தவொரு மனிதனும் தேவனுடைய வார்த்தையைக் கேட்க வருகிறபோது அவன் எந்தவிதமாக தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறான், அவனுடைய இருதயம் எந்த நிலையிலிருந்து தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறது என்பதைத் தான் ஆண்டவர் ஒப்பிட்டு இதில் விளக்குகிறார். நாம் ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்கிறபோது மிகவும் கவனத்தோடு கேட்க வேண்டும். இந்த உவமை வசனத்தைக் கேட்பதைக் குறித்துதான் விளக்குகிறது. ஆகவே இருதயம் எப்படி, எந்த நிலையிலிருந்து வசனத்தைக் கேட்கிறது என்பதை இந்த நிலங்கள் ஒப்பிட்டு விளக்குகின்றன.

இந்த ஆக்கத்தை எழுதுகிறபோது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஆண்டவர் இந்தளவுக்கு விதை நிலங்களைப் பிரித்து விளக்கியிருப்பதற்குக் காரணமென்ன? நான்கு நிலங்களில் மூன்று நிலங்களில் விதைக்கப்பட்ட விதை பயன்கொடுக்கவில்லை, ஒன்று மட்டுமே பயனளித்தது. அந்த நான்கு நிலங்களும் நான்கு வகையான இருதயங்களோடு ஒப்பிடப்பட்டிருக்கின்றன. ஆண்டவர் அவற்றை நல்ல நிலம், மோசமான நிலம் என இரண்டாகப் பிரித்துக் கூறியிருக்கலாம். அவற்றை ஒப்பிடுகின்றபோது நல்ல இருதயம், மோசமான இருதயம் எனப் பிரித்து விளக்கியிருக்கலாம். ஏன் அவர் நான்கு நிலங்களைப் பயன்படுத்தி நான்கு இருதயங்களை நம்முன் வைப்பதற்குக் காரணம் என்ன? அதை நான் அதிகமாக சிந்தித்துப் பார்த்தபொழுது நான் அறிந்துகொண்ட உண்மை, ஆண்டவர் எந்தளவுக்கு மனித இருதயத்தில் அக்கறை கொண்டிருக்கிறார் என்பதுதான். இரண்டு நிலங்களை மட்டும் காட்டி இரண்டு வகையான இருதயங்களோடு அவற்றை விளக்கியிருக்க முடியுமானாலும் அதற்கு மேலாய்ப்போய் இன்னும் இரு வகையான நிலங்களை அவர் நமக்கு விளக்கி, அந்த நிலங்கள் எத்தகைய இருதயங்களை நமக்குச் சுட்டிக்காட்டுக்கின்றன என்று நமக்கு விளக்குவதன் மூலமாக ஆண்டவர் நம் இருதயத்தில் எத்தனை அக்கறை கொண்டிருக்கிறார் என்பதைப் பார்க்கிறோம். ஆண்டவர் நம் இருதயங்களைப் பார்க்கிறார், அவருக்குத் தெரியாதது ஒன்றுமேயில்லை. நம் இருதயத்தின் சிந்தனை, அதன் போக்கு என அனைத்தையும் அவர் அறிந்து வைத்திருக்கிறார். அவருக்கு முன்பாக நாம் நாடகமாடலாம். கிறிஸ்தவனைப் போல நடிக்கலாம், கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு தவறான வாழ்க்கை வாழலாம், தவறுகள் செய்து திருந்தாமல் இருக்கலாம். ஆனால் இவை எல்லாமே ஆண்டவருக்குத் தெரியாமலிருக்காது. அவர் முன்பாக நாம் எதையும் மறைக்க முடியாது. அப்படிப்பட்டவர்தான் நம் ஆண்டவர்.

பியூரிட்டன் பிரசங்கிகளுக்கு ‘ஆத்தும வைத்தியர்கள்’ எனும் ஒரு பெயர் இருக்கிறது. அதற்கு அர்த்தம் ஆத்துமாக்களை அந்தளவுக்கு ஆழமாகத் தெரிந்திருந்து, அந்த ஆத்துமாக்களின் பிரச்சனைகளை நன்றாக அணுகி ஆராய்ந்து அவர்களுக்கு ஏற்றவகையிலே வேதத்திலிருந்து தேவையான ஆலோசனைகளை நுணுக்கமாகக் கொடுப்பதில் அவர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். இன்றைக்கு நம்மினத்தில் அவ்விதமான ஆத்தும வைத்தியர்களைக் காண்பது அரிது. ஏனெனில், அந்தளவுக்கு வேதமறிந்தவர்களோ, ஆத்துமாக்களை அறிந்தவர்களோ நம் இனத்தில் இல்லை. வேதத்தைக் கற்றுத் தேர்ந்திராதவர்கள் பிரசங்கத்தில் உளறத்தான் முடியுமே தவிர பிரசங்கிக்க முடியாது. இன்று இதைத்தான் அநேக இடங்களில் நாம் பார்க்கமுடிகிறது. ஆனால் பியூரிட்டன் பெரியவர்கள் வேதத்தை ஆழமாகக் கற்றிருந்தவர்கள். அதனால்தான் ஆத்துமாக்களின் தேவைக்கு ஏற்றவிதத்தில் அவர்களால் மருந்தைக் கொடுக்க முடிந்தது. ஆனால் அந்தப் பியூரிட்டன் பெரியவர்களைவிட ஒரு மேலான வைத்தியராக நம்முடைய இறையாண்மையுள்ள ஆண்டவர் இருக்கிறார். அந்தப் பியூரிட்டன்கள் கூட ஆத்தும வைத்தியத்தைக் கற்றுக் கொண்டது நம்முடைய ஆண்டவரிடத்தில் இருந்துதான். ஏனெனில் அவர் இருதயத்தை ஆழமாக ஆராய்ந்து அறிந்திருக்கும் தேவன்.

இந்த உவமை தேவனுடைய வசனத்தை எந்தவிதத்தில் கேட்க வேண்டும் என்பதைக் குறித்து விளக்குகிறது. ஒரு ஆத்துமா எந்த விதத்தில் வசனத்தை அணுகுகிறது, அதை எதிர்கொள்ளுகிறது என்பதைத்தான் ஆண்டவர் இங்கு விளக்குகிறார். ஆகவே அவருக்கு நம்முடைய இருதயத்தில் அக்கறை இருக்கிறது, எந்தவிதத்தில் அவருடைய வசனத்தைக் கேட்க வேண்டும் என்பதில் அக்கறை இருக்கிறது. இன்றைக்கு அநேகர் தங்களுடைய இருதயப் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளுவதற்கு சமுக விஞ்ஞானிகளிடமும், உளவியல் வல்லுநர்களிடமும் போகிறார்கள். அவை மிகவும் தவறான செயல்களாகும். ஒரு உளவியல் நிபுணனுக்கு ஆத்தும வைத்தியம் செய்யத் தெரியாது. ஆண்டவர் ஒருவரால் மட்டுமே அதைச் செய்ய முடியும்; அவருடைய மகனாக இருக்கின்ற ஒரு போதகனால் அதைச் செய்ய முடியும். இந்த ஆக்கத்தை வாசிக்கும்போது இந்த உவமையின் மூலம் நம் இருதயத்தை ஆண்டவர் ஆராய்கிறார் என்பதை மனதில் வைத்து வாசியுங்கள். உங்கள் இருதயம் எப்படி இருக்கிறது? அது எந்தவிதமான போக்கைக் கொண்டிருக்கிறது? தேவனைப் பற்றியும், அவருடைய வார்த்தையைப் பற்றியும், அவருடைய செயல்களைப் பற்றியும், அவருக்கும் உங்களுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றியும் அது எந்த விதமாகச் சிந்திக்கிறது? ஆண்டவர் இதிலெல்லாம் அதிக அக்கறை காட்டுகிறார் என்பதை இந்த உவமையில் நாம் கவனிக்கிறோம்.

இரண்டாவது நிலமான கற்பாறை நிலத்தை நாம் இப்போது ஆராய்வோம்.

மத்தேயு 13:5, 6

சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.

இப்படிப்பட்ட நிலமாகவே சில இருதயங்கள் காணப்படுகின்றன.

மத்தேயு 13:20, 21

கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.

இதே உவமையை மாற்கு நான்காம் அதிகாரத்திலும் லூக்கா எட்டாம் அதிகாரத்திலும் நாம் பார்க்கிறோம். இவை மூன்றையும் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என்பதைக் கவனிக்க முடிகிறது. எப்போதும் நாம் உவமைகளை ஏனைய பகுதிகளில் காணப்படும் அதேவித உவமைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது அந்த உவமைகளின் சகல அம்சங்களையும் நாம் விளங்கிக்கொள்ள முடியும். ஒரே ஒரு பகுதியை மட்டும் வைத்து அந்த உவமைக்கான பொருளை விளங்கிக்கொள்ள முயலக் கூடாது. அதோடு சம்பந்தப்பட்ட ஏனைய பகுதிகளையும் ஆராய்ந்து பார்த்து அதன் போதனையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு ஆண்டவர் நிலத்தின் தன்மையை மனிதனுடைய இருதயத்தின் தன்மையோடு ஒப்பிடுகிறார் என்பதை நாம் கவனிக்கிறோம்.

முதலாவதாக, இந்த நிலத்தைக் கவனிப்போம். அதன் பின் அந்த நிலம் யாருக்கு ஒப்பிடப்படுகிறதோ அவர்களைக் குறித்து சிந்திப்போம். இந்த நிலத்தைப் பற்றி சிந்திப்பது மிகவும் அவசியமானது. தமிழ் வேதத்தில் பார்க்கிறபோது அதிக மண்ணில்லாத கற்பாறை நிலம் என்று சொல்லப்படுகிறது. நம் பேச்சு வழக்கில் கற்பாறை என்றவுடன் நமக்கு எது மனதில் வரும்? ஒரு பெரிய பாறையைத் தான் நாம் நினைத்துப் பார்ப்போம். ஆனால் நிச்சயமாக அத்தனை பெரிய கற்பாறையை ஆண்டவர் இங்கு மனதில் கொள்ளவில்லை. இந்தப் பகுதியில் சொல்லப்படும் நிலம் சின்னஞ்சிறு கற்கள் நிறைந்த மண்தரையாக இருந்தது. இப்பகுதியில் பெரும் கற்கள் இருந்திருந்தால் நிச்சயமாக அந்த விவசாயி அங்கு பயிரிடத் துணிந்திருக்க மாட்டான் அல்லது அந்தப் பாறைகளை முதலில் அகற்றியிருப்பான். இச் சிறு கற்கள் கண்களுக்குத் தெரியாமல் நிலத்திற்கு அடியில் மறைந்திருந்தன. இந்நிலம் அதிகமாகவும், ஆழமாகவும் மண்ணில்லாமல் இருந்தது என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். நிலத்தில் விதை விதைக்கப்பட்ட பிறகு அந்த விதை ஆழமாக வேர்விட்டு வளர்வதற்கு அதிக மண் தேவை. ஆனால் இந்நிலத்தில் இரண்டு மூன்று அங்குல ஆழத்திற்குக் கீழ் மண் இல்லை. நிலத்தின் மேலே பார்க்கிறபோது அது மண் தரையாகத் தெரிந்தபோதும் அதில் மண் ஆழமாக இல்லை. விதை வளர வேண்டிய அளவுக்கு அந்த மண் ஆழமாக இருக்கவேண்டும். ஆனால் அந்தளவுக்கு மண் இந்த நிலத்தில் இல்லை. ஆகவேதான் வேதம் அதிக மண்ணில்லாத கற்கள் நிறைந்த பகுதியாக இருந்தது என்று விளக்குகிறது.

இந்த நிலத்தில் பிரச்சனைகள் உள்ளன. முதலாவது பிரச்சனை அதிகமாக மண் இல்லாதது. இரண்டு மூன்று அங்குலத்திற்குக் கீழாக அதில் நிறைய கற்கள் காணப்பட்டது. ஏன் இது பிரச்சனையானது? ஒரு விவசாயி விதையைத் தூவுகிறபோது அந்த விதையானது இப்படிப்பட்ட நிலத்தில் விழுந்தால் அந்த நிலத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். மண்ணில் ஈரப்பதம் இல்லாமல் இருந்தால் அந்த விதை வளர முடியாது. அப்படியே ஈரப்பதம் இருந்தாலும் அந்த விதை வேர்விட முடியாமல் அதற்குத் தடையாக அடியில் கற்கள் காணப்படுகின்றன. கற்கள் அதிகமாக இருப்பதினாலேயே அந்த வேர் அதற்குக் கீழாகப் போக முடியாமல் இருந்தது. அதனால் விதைவேர்விட்டு வளர முடியவில்லை. மேலும் அந்த வேர் கீழே செல்வதற்கு இடமில்லாததால் மேல் நோக்கி வர ஆரம்பிக்கும். ஏனென்றால் அந்தக் கற்களை உடைத்துக்கொண்டு போகும் அளவிற்கு அந்த விதைக்குப் பலமில்லை. ஆகவேதான் இது பிரச்சனை உள்ள நிலமாக இருக்கிறது. அதனால்தான் ஈரப்பதம் இல்லாததினால் விதை உலர்ந்து போயிற்று என்று இப்பகுதியில் வாசிக்கிறோம்.

இந்த நிலத்தில் இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. 6 வது வசனத்தில் ஆண்டவர் சொல்லுகிறார், “வெயில் ஏறினபோது” என்று. விதைகள் இந்நிலத்தில் விழுந்தன, மண்ணும் ஆழமாக இல்லை, ஈரத்தன்மையும் அதில் இல்லை, மத்தியான வேளைகளில் வெயில் அதிகரிக்கும். அவ்வாறு வெப்பம் அதிகரித்து மண்ணை நோக்கித் தாக்குகிறபோது, மண்ணும் சூடாகி அந்த விதைக்குப் பிரச்சனையை உண்டாக்குகிறது. மண் ஆழமாக இல்லாததினால் சூரியக் கதிர்கள் அந்தக் கற்களைத் தாக்கிக் கற்களும் அதிக வெப்பமடைந்து மேலேயும் கீழேயும் என இரண்டு பக்கமும் இந்த விதைக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. ஆகவே இந்த விதை “வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று” (மத்தேயு 13:6) என்று நாம் வாசிக்கிறோம். கற்கள் தடையாக இருப்பதனால் இங்கு வேரும் வளர முடியாது. மேலிருந்து வெப்பம் அதிகமாகி தாக்குகிறது, கீழிருந்தும் கற்கள் சூடாகி ஈரப்பதமும் இல்லாமல் இருப்பதனால் இது தீய்ந்து போகிறது. நான் இதை விளக்குகிறபோது ஒரு படம் போலப் புரிந்திருக்கும் என நம்புகிறேன். இதைத்தான் ஆண்டவர் இந்த உதாரணத்தைப் பயன்படுத்தி இங்கு விளக்குகிறார். அந்த விதைகள் வளருவதற்கு தேவையானவைகள் அந்த நிலத்தில் இருக்கவில்லை.

இரண்டாவதாக இந்த நிலம் யாரைக் குறிக்கிறது?

மத்தேயு 13:20

கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்.

மண் ஆழமாக இல்லாத கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்ட நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்டிருப்பவன் வசனத்தைக் கேட்கிறான். முதலாவது நிலமாகிய வழியருகே நிலத்தைப் போன்றவன் வசனத்தைக் கேட்கவே இல்லை. அவன் காதில் விழுந்த உடனேயே அதைத் தூக்கி எறிந்துவிடுகிறான், அதை அசட்டை செய்கிறான், அதை அவன் கவனிக்கவே இல்லை, அதில் அவனுக்கு அக்கறையே இல்லை, அதில் அவனுக்கு விருப்பமில்லாமல் போய்விடுகிறது, அதை இருதயத்தில் எடுத்துக் கொள்ளவுமில்லை, அதைப் பற்றி அவன் சிந்திக்கவுமில்லை. ஆனால் இங்கு கற்பாறை நிலத்தைப் போன்ற இருதயமுள்ளவன் வசனத்தைக் கேட்கிறான், அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளுகிறான், அதோடு அவன் ஒத்துப் போகிறான். முதலாவது இருதயத்தைக் கொண்டிருப்பவனை விட இரண்டாவது இருதயத்தைக் கொண்டிருப்பவன் பரவாயில்லை என்று சொல்லலாம். இவன் வசனத்தை அசட்டை செய்யவில்லை, அதைக் கேட்கிறவனாக இருக்கிறான். அவன் அதைக் கேட்டு அதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கிறான். அவன் சந்தோஷத்தோடு ஏற்றுக் கொள்ளுகிறான் என்பது வசனத்தில் ஆர்வம் காட்டுகிறான், அதை எதிர்த்து நிற்கவில்லை என்று அர்த்தம். அது நல்லதுதான், நான் கேட்பதில் உண்மையிருக்கிறது, எனக்குத் தேவையானதுதான் என்று வசனத்தில் அக்கறைகாட்டி அதை ஏற்றுக்கொள்ளுகிறான். வசனத்தைக் கேட்காமல் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது. கேட்டு அதில் விருப்பம் காட்டி எதிர்த்து நிற்காமல் அதற்கு உடன்படுகிறான் என்பதைதான் ஆண்டவர் சொல்லுகிறார். அப்படி இருந்தபொழுதும் இந்த இருதயத்தைக் கொண்டிருப்பவனில் பிரச்சனை இருக்கிறது. முதலாவது நிலத்தைப் போல அவன் வசனத்தை உதாசீனப்படுத்தாவிட்டாலும் அவனில் பிரச்சனை இருக்கிறது. அவன் கேட்கிறான் என்ற அம்சத்தை நாம் பாராட்ட வேண்டும். ஏனெனில், எத்தனையோ பேர் காது கொடுத்துக் கேட்பதில்லை. காது கொடுத்து வசனத்தைக் கேட்பது மிகவும் அவசியம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் பிரசங்கத்தை முடித்துப் பின்னால் கதவின் அருகே நின்று கொண்டிருந்தபோது ஒரு ஐந்து வயதுள்ள பையன் என்னிடம் வந்து ‘நீங்கள் இன்றைக்கு கொடுத்த பிரசங்கம் எனக்கு நன்றாகப் பிடித்திருந்தது, அதனால் உங்களுக்கு மிகவும் நன்றி’ என்று சொன்னான். அந்த ஐந்து வயது பையன் பிரசங்கத்தை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை நன்றாகக் கேட்டிருக்கிறான். அவன் அதற்கு எதிர்ப்புக் காட்டவில்லை, அவனுக்கு அது பிடித்திருந்தது. அவ்வாறு சொன்னதனால் அவன் விசுவாசி என்று நான் சொல்ல வரவில்லை, ஆனால் அவன் பிரசங்கத்தை உதாசீனப்படுத்தாமல் கவனத்தோடு கேட்டு அங்கீகரித்திருக்கிறான். அவன் சிறுவனாக இருந்தபோதும் அந்த வயதுக்கே உரியவிதத்தில் அதை அவன் கேட்டுப் பயனடைந்திருக்கிறான். இல்லையெனில் அவன் அவ்வாறு என் முன் நின்று சொல்லியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவன் வசனத்தில் அக்கறை காட்டுகிறான். அதைத்தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம்.

21 வது வசனத்தில் இந்த இருதயத்தின் பிரச்சனை என்ன என்பதை வேதம் நமக்குக் காட்டுகிறது. “ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.” இங்கு முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, அவன் கொஞ்சக்காலம் நிலைத்திருப்பான் என்ற வார்த்தைப் பிரயோகத்தை. வழியருகே போன்ற இருதயத்தில் வசனம் நிற்கவே இல்லை. அது உள்ளே போவதற்கே வழியில்லாமல் இருந்தது. மேலிருந்து சாத்தான் வந்து அதை எடுத்துக் கொண்டு போய்விட்டான். ஆனால் இங்கு கற்பாறை நிலத்தைப் போன்றவனில் வசனம் இருதயத்தில் கொஞ்சக்காலம் இருந்திருக்கிறது. இந்தக் கொஞ்சக்காலம் எவ்வளவு நாட்கள் என நாம் ஆராய்ச்சி செய்யக்கூடாது. ஏனெனில், கொஞ்சக்காலம் என்று ஆண்டவர் சொல்வதன் மூலம் அது நிரந்தரமாக அங்கு இருக்கவில்லை என்பதை விளக்குகிறார். அந்த விதை நிரந்தரமாக அங்கிருந்து தொடர்ந்து வளர்ந்து பலன் கொடுக்கிற அளவுக்குப் போகவில்லை. கொஞ்சக்காலம் என்பததற்குப் பொருள் வசனம் தற்காலிகமாக உள்ளே இருந்திருக்கிறது என்பதுதான். ஆனால் அது நிலைத்து நிற்கமுடியவில்லை, நிரந்தமான பயனைக் கொடுக்கிற அளவுக்கு அது கிரியை செய்யவில்லை. இதற்கெல்லாம் காரணமென்ன? வசனத்தினால் வந்த உபத்திரவம்தான் காரணம். வசனம், அதாவது அவன் கேட்டு ஆர்வம்கொண்டு சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டிருக்கிற அந்த வசனத்தினிமித்தம் உண்டான உபத்திரவங்கள், துன்பங்கள், தொல்லைகள், பிரச்சனைகள் காரணமாக அதற்கு பிறகு அந்த வசனத்தில் ஆர்வம் காட்டியதை அவன் நிறுத்திக் கொண்டான்.

இங்கிலாந்தில் மிகவும் பிரசித்தமான பிரசங்கிகளின் இளவரசன் என்று அழைக்கப்படும் ஸ்பர்ஜன் இருந்தார். கற்பாறை போன்ற இருதயத்தைக் கொண்ட மனிதனை தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவத்தை அவருடைய செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனிதன்தான் என் வாழ்க்கையில் அதிகமான துக்கத்தையும் கசப்பான கண்ணீரையும் வரும்படியாக செய்திருக்கிறான் என்று சொன்னார். ஏனெனில் ஸ்பர்ஜன் சொன்னார், “அந்த மனிதன் ஒருநாள் என் சபைக்கு வந்தான். அன்றைக்கு பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு அவன் அதிகமாகக் கண்ணீர்விட்டு அழுதான். முழு சபையும் கூட அதனால் மிகவும் ஆச்சரியப்பட்டது. அந்தப் பிரசங்கத்தைக் கேட்ட பிறகு முதல் நாளில் இருந்தே அவன் குடிப்பதை நிறுத்திவிட்டான். அவனுடைய ஊரில் அவனைப்பற்றி மக்கள் எல்லோரும் மோசமாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். ஏனெனில் அவன் நேரத்தை ஒவ்வொரு நாளும் மதுக்கடையில்தான் செலவிட்டான். ஆகவே அந்த ஊரில் யாருமே அவனை நல்ல மனிதனாகப் பார்க்கவில்லை. ஆனால் அவன் வசனத்தைக் கேட்டதிலிருந்து அவன் வாழ்க்கை மாறிவிட்டது. அவன் மதுக்கடைக்குப் போவதை முழுமையாக நிறுத்திவிட்டான். சபையின் எந்தக் கூட்டத்திலும் தவறாமல் கலந்து கொள்ளுவான். ஜெபக் கூட்டத்திலும் தவறாமல் கலந்துகொண்டு தனக்குத் தெரிந்தவரை ஜெபிக்கவும் ஆரம்பித்தான். இப்படிப்பட்டவனைத்தான் நான் இயேசு கிறிஸ்துவுக்கு பக்கத்தில் உட்கார வைப்பேன் என்று ஸ்பர்ஜன் சொன்னார்.” அவனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் ஸ்பர்ஜனுக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுத்தது. ஒரு இடத்தில் வேதப்பாடம் நடப்பதாக அவன் கேள்விப்பட்டால் அவன் ஏழு எட்டு மைல்கள் கூட நடந்துபோய் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுவதற்கு ஆர்வம் காட்டினான். சபை அங்கத்தினருக்குத் தேவையான காரியங்களில் உதவி செய்வதற்கு முன்னால் நிற்பவனாக இருந்தான். இதெல்லாம் அவன் வாழ்க்கையில் கொஞ்சக்காலம் தொடர்ந்தது. அவன் வாழ்க்கையில் இவ்விதமான மாற்றங்கள் 6 மாதம் முதல் 8 மாதம் வரை தொடர்ந்திருந்தது. ஆனால் அவனுடைய பழைய குடிகார நண்பர்கள் இவனைப் பார்த்து கேலிபண்ண ஆரம்பித்தார்கள். இவன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் இவனை அவர்கள் கேலி செய்யவும் திட்டவும் ஆரம்பித்தார்கள். அப்போது இவன் தான் அநாவசியமாக மாறிவிட்டேனோ, ரொம்பத் தீவிரமாக சமய விஷயத்தில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்துவிட்டேனோ என்று நினைக்கத் தொடங்கினான். அதனால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக சபை ஆராதனைக்கு வருவதை நிறுத்த ஆரம்பித்தான். அவனுடைய பழைய வழக்கங்கள் எல்லாம் திரும்ப வர ஆரம்பித்தன. சபையில் இருப்பவர்கள் சில பேர் அவன் வீதியில் குடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். அப்போது ஸ்பர்ஜன் இவனால் எனக்கு அதிக மனவருத்தம் ஏற்பட்டது என்று சொன்னார். அந்தச் செய்தியில் ஒரு வழியருகே விதைக்கப்பட்ட இருதயத்தைக் கொண்டவன் வசனத்தை உதாசீனப்படுத்துகிறவன். இந்தக் கற்பாறை நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்டிருப்பவனைப் பற்றி நான் பெரிதாக சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை என்று ஸ்பர்ஜன் சொன்னார். இந்த இரண்டு நிலங்களுமே மோசமானவை என்பதுதான் அவருடைய கருத்தாகும். அப்படியானால் இரட்சிப்பை அடையாமல் ஆண்டவருடைய வசனத்தைக் கேட்டு ஒரு வருடமளவுக்கு அதில் ஈடுபாடு காட்டி, சபைக்குப் போவதோடு, சபை மக்களோடு ஐக்கியத்தில் வந்து, ஜெபக் கூட்டத்தில் ஜெபம் செய்யவும் ஒருவனால் முடியும் என்பதைத்தான் இந்த உதாரணம் விளக்குகிறது.

என்னுடைய 37 வருட சபை ஊழியத்தில் இப்படிப்பட்ட சிலரை நான் சந்தித்திருக்கிறேன். இதை நான் எழுதுகிறபோது அவர்கள் என் கண்முன் வந்து போகிறார்கள். ஆத்துமாவில் கரிசனை காட்டுகிற எந்தப் போதகரும் அதை மறக்க மாட்டார்கள். வேறொரு நாட்டிலிருந்து எங்கள் நாட்டிற்கு வந்த ஒருவர் இருந்தார். அவர் தன் நாட்டில் இருந்தபோது தன்னை விசுவாசி என்று சொல்லி ஞானஸ்நானம் எடுத்துப் பிறகு வாழ்க்கையில் பின்வாங்கிப் போய் எத்தனையோ தவறுகளைச் செய்து எங்கள் சபைக்கு வந்து, என்னிடம் உண்மையை விளக்கிச் சொல்லி மன்னிப்பு கேட்டு ஆண்டவரிடத்தில் மறுபடியும் உறவுகொள்வதற்கு எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டார். நான் அதற்குத் தேவையான தகுந்த ஆத்மீக உதவிகளைச் செய்த பிறகு பல வருடங்கள் தொடர்ந்து சபையில் இருந்தார். அதற்கு பிறகு அவர் பழையபடி உலகத்தை இச்சித்து அதை நாடிப்போய்விட்டார். அவர் இன்னும் எங்கள் ஊரில்தான் எங்கோ இருக்கிறார், ஆனால் அவர் என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை. அநேகர் இந்தக் கதையைக் கேட்கிறபோது, இரட்சிப்பை ஒருதரம் அடைந்து பிறகு அந்த இரட்சிப்பை ஒருவன் இழந்துவிடலாம் என்ற போதனையைக் கொடுப்பார்கள். அப்படியானால் முதலாவது அவன் பின்வாங்கி இருந்த போது இரட்சிப்பை அடைந்திருந்தானா? இரண்டாவது முறை மன்னிப்புக் கேட்டுப் பல வருடங்கள் சபைக்கு வந்தபோது இழந்துபோன இரட்சிப்பை மறுபடியும் பெற்றுக் கொண்டானா? பிறகு எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பழையபடி உலகத்திற்குள் போனபொழுது இரண்டாவது முறை அடைந்த இரட்சிப்பை இழந்து போனானா? இதற்குப் பெயர்தான் போலிப்போதனை. ஏனென்றால் வேதம் அவ்வாறு எங்கேயும் போதிக்கவில்லை. இரட்சிப்பை ஒருமுறைதான் அடைய முடியும். உண்மையான விசுவாசி அடைந்த இரட்சிப்பைக் கடைசிவரை இழக்க மாட்டான். பின்வாங்கிப் போனான் என்பதைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. என்னைப் பொறுத்தவரை அவன் உண்மையாக ஆண்டவரை விசுவாசித்திருக்கவில்லை. கொஞ்சக்காலம் அந்த விதை வேலை செய்திருக்கிறது. உண்மையான விசுவாசி தான் கேட்ட அனைத்து சத்தியங்களையும் உதறி எறிந்துவிட்டு உலகத்தின் மீது முழு ஆசை வைத்துத் தேமாவைப்போலப் போய்விடமாட்டான். வேதத்தில் இல்லாத போதனைகளை நாம் உருவாக்கக் கூடாது. உண்மையான விசுவாசம் தொடர்ந்து நிலைக்கும். ஒருவேளை நான் அவனை மறுபடியும் சந்தித்தால் ஆத்தும வைத்தியராக அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன. அவனுடைய விசுவாசம் உண்மையாக இருந்திருந்தால் அவன் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையை வாழமாட்டான். ஏனென்றால் அவனுக்குக் குற்ற உணர்வு இல்லை, உலகத்தில் அவன் சந்தோஷமாக இருக்கிறான். ஆகவே இதையெல்லாம் உண்மையான விசுவாசமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

சபையில் எப்போதுமே பிரசங்கம் செய்த பிறகு ஒரு ஆணோ அல்லது பெண்ணோ வேதத்தைக் கேட்டு அக்கறை காட்டி நன்றாக இருக்கிறது என்று சொன்னால் சந்தோஷமாகத்தான் இருக்கும். யாருமே கர்த்தருடைய வார்த்தையில் காட்டுகிற சிறிதளவு அக்கறையும் கூடப் பாராட்டத்தக்கது, அதை நாம் ஊக்குவிக்க வேண்டும். ஆண்டவருக்கு நன்றி சொல்ல வேண்டும், அவர்களுக்காக ஜெபம் பண்ணவேண்டும். சில நேரம் அப்படி கேட்டவர்கள் தொடர்ந்து சபைக்கு வருவார்கள், பிரசங்கங்களைத் தொடர்ந்து கேட்பார்கள். கொஞ்சக் காலத்திற்கு அதைத் தொடருவார்கள். இதெல்லாம் நல்லதுதான். அதையெல்லாம் சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது. ஆனால் ஆர்வக் கோளாறினால் ரொம்பவும் சந்தோஷப்பட்டு அவர்களுக்கு உடனடியாக ஞானஸ்நானம் கொடுக்கக் கூடாது. நம் ஊரில் அவ்விதமாகச் செய்கிற போலிப் போதகர்கள் அநேகர் இருக்கிறார்கள், அது மிகவும் ஆபத்தானது. வசனத்தில் ஆர்வம் காட்டுகிறவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும், தொடர்ந்து வசனத்தைக் கேட்க வைக்க வேண்டும், ஆத்தும ஆலோசனைகளைக் கொடுக்க வேண்டும், அக்கறையோடு கவனிக்க வேண்டும். ஆனால் ஆண்டவராக அவனுக்கு இரட்சிப்பைக் கொடுத்து அவன் அதைப் பற்றிப் பேச வருகிறபோது அதையும் கேட்டு நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்காமல் ஞானஸ்நானம் கொடுக்கிறவன் போலிப் பிரசங்கியாக இருக்கிறான். அவனுக்குப் போதக ஊழியத்தைப் பற்றி எதுவும் தெரியாதவனாக இருக்கிறான். அதனால்தான் இதுபோல ‘கொஞ்சக்காலம்’ இருப்பவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து அவர்கள் சபையைவிட்டுப் போனபிறகு அவர்களுக்குப் ‘பின்வாங்கிப் போனவர்கள்’ என்று பெயரைக் கொடுத்துவிடுகிறார்கள். வேதம் அத்தகைய போதனையைக் கொடுக்கவில்லை. இது உண்மையான மனந்திரும்புதலும் அல்ல, உண்மையான விசுவாசமும் அல்ல.

ஒரு பெரியவர் இப்படியாகச் சொன்னார்: ‘அதிக உணர்ச்சி வசப்பட்டு சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ளுகிறவன், உண்மையாக மனந்திரும்பினவனாக இல்லாமலும் இருக்கலாம். அதே நேரம் உணர்ச்சிகளைக் காட்டாமல் விசுவாசிக்கிற ஒருவன் மனந்திரும்பவில்லை என்று சொல்லவும் முடியாது’ என்று. அது உண்மையான வார்த்தை. இந்த இரண்டுவிதமான மக்களையும் நாம் உதாசீனப்படுத்தக் கூடாது. உண்மையான மனந்திரும்புதல் என்று சொன்னால் அந்த மனந்திரும்புதலை காலம் நிரூபித்துக் காட்டும். ஒரு செடி கொஞ்சம் இலைகள் விட்டு வளர ஆரம்பிக்கும் போது நாம் சந்தோஷப்படுவோம், ஆனால் அதிக சந்தோஷப்பட மாட்டோம். அது கனி கொடுக்கிறபோது தான் அதிக சந்தோஷப்படுவோம். செடி கனி கொடுக்கிறவரை நாம் பொறுத்திராமல் இருந்தால் பிரச்சனை நம்மிடம்தான் இருக்கிறது. ஆகவே எப்போதும் வெறும் உணர்ச்சிவசப்படுகிறவர்களையும் வசனத்தில் ஆர்வம் காட்டுகிறவர்களையும் ஞானஸ்நானம் கொடுத்து அங்கத்தவர்களாக சபையில் இணைப்பது மிகப்பெரிய தவறு.

வேதம் இதுபோன்ற மனிதர்களைப் பல உதாரணங்கள் மூலம் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. அதனால்தான் ஆண்டவர் போதனையை மட்டும் கொடுக்காமல் உதாரணங்களையும் கொடுத்து நமக்கு உதவி செய்கிறார். ஏனெனில், நாம் மனிதர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்டவர் அதைச் செய்திருக்கிறார். ஆழமாக மண்ணில்லாத கற்பாறை நிலத்தைப் போன்ற இருதயமுள்ள மனிதர்களை வேதத்தில் நாம் பார்க்க முடியும். முதலாவதாக, யூதாஸ்காரியோத். அவன் கேட்காத பிரசங்கம் இல்லை. ஆண்டவருக்கு அருகிலேயே இருந்து அவருடைய போதனைகளைக் கேட்டு அக்கறை காட்டினான். மேலும் ஒரு பிரசங்கியாகவும் இருந்தான். ஆண்டவர் அவனைப் பிரசங்கம் செய்வதற்காக எழுபது பேரில் ஒருவனாக அனுப்பினார். மேலும் அற்புதங்களையும் செய்தவனாக இருந்தான். இந்தளவுக்கு வசனங்களில் அக்கறைகாட்டி ஆண்டவருக்குப் பக்கத்திலேயே இருந்து அவருடைய பணப் பெட்டிக்கும் பொறுப்புள்ளவனாக இருந்த ஒருவன், பணத்தாசையினாலே அவரைக் காட்டிக் கொடுத்த ஒருவனாக வரலாற்றில் மாறிப்போனான். கடைசியில் தற்கொலை செய்து இறந்து போனான் என்று வேதத்தில் நாம் வாசிக்கிறோம். இவனை நாம் ஆராய்ந்து பார்த்தால் இவன் ஒருக்காலும் விசுவாசிக்கவில்லை. கொஞ்சக்காலம் மட்டுமே அவன் வேதத்தில் காட்டிய அக்கறையும், கிறிஸ்தவத்தில் காட்டிய அக்கறையும், கிறிஸ்துவில் காட்டிய அக்கறையும், பிரசங்கம் செய்வதற்கு ஆசைப்பட்டதும், ஆண்டவருக்காக பணப்பெட்டியை வைத்திருந்ததும் காணப்பட்டது. அது நிரந்தரமாக அவனில் இருக்கவில்லை. அதனால்தான் பணத்தின் மீது ஆசை வைத்து ஆண்டவரையும் காட்டிக் கொடுத்து இறுதியில் தற்கொலையும் செய்துகொண்டான் என்று நாம் பார்க்கிறோம். அவனில் மனந்திரும்புதல் கடைசிவரையும் இருக்கவே இல்லை. அவன் கற்பாறை நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்டிருந்தான்.

இரண்டாவதாக, 2 தீமோத்தேயு 4:10ல் பவுல் வெளிப்படையாகவே எழுதியிருக்கிறார். “ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்.”

தேமா பவுலோடு கூட சேர்ந்து ஊழியம் செய்தான், ஜெபம் பண்ணினான், அநேக சம்பாஷணைகளைச் செய்தான், வார்த்தையில் அதிக அக்கறை காட்டினான். இவையெல்லாம் செய்தபொழுதும் ஒரு காலம் வந்தது, அவனால் அதற்கு மேலேயும் நடிக்க முடியவில்லை, உலகம் அந்தளவுக்கு அவனைப் பிடித்துக் கொண்டது. அதுமட்டுமல்லாமல் பவுலுக்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளையும், சத்தியத்தின் காரணமாக வந்த போராட்டங்களையும், பல துன்புறுத்தல்களையும் தேமாவால் தாங்க முடியாததாக இருந்திருக்கிறது. இந்தளவுக்கு நான் ஏன் கஷ்டப்பட வேண்டும், உலகத்திலேயே இருந்துவிட்டுப் போய்விடலாமென்று தேமா பவுலுக்குக் கூடச் சொல்லாமல் போய்விட்டான் என்று நாம் பார்க்கிறோம். ஆண்டவரை விட உலகம் அவனுக்குப் பெரிதாகப் போய்விட்டது. ஆண்டவருக்காகத் துன்பப்படுவதும், சுயத்தை இழந்து ஊழியம் செய்வதும் அவனுக்குப் பெரிதாகப்படவில்லை.

வேதம் இப்படியானவர்களை நமக்கு இனம் காட்டுகிறது. இவர்கள் தற்காலிகமாக வேதத்தில் ஆர்வம் காட்டுவார்கள், சபைக்கு போவார்கள், ஆனால் அவர்கள் எவ்வளவு காலம் அதில் நிலைத்திருப்பார்கள் என்பதை சொல்லமுடியாது. ஆனால் ஒருகாலத்தில் அவர்களுடைய உண்மையான நிலை வெளிப்படும், அவர்களே தங்கள் நடத்தையினால் அதை வெளிப்படுத்திவிடுவார்கள். அவர்களைப் பற்றி எபிரெயர் 6:4-6 வேதம் சொல்லுகிறது. “ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.” இங்கு நான்கு காரியங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவதாக, பிரகாசிப்பிக்கப்பட்டும், அதாவது சத்தியத்தைக் கேட்டு அந்த சத்தியத்தினாலே இருதயம் உணர்த்தப்பட்டு அறிவைப் பெற்றுக்கொள்ளுவதாகும். இரண்டாவதாக, பரம ஈவை ருசிபார்த்தும், சத்தியத்தை விசுவாசிப்பதினால் வரக்கூடிய ஆசீர்வாதங்களை மனதில் அறிந்து கொண்டு சந்தோஷப்படுவதாகும். மூன்றாவதாக, பரிசுத்த ஆவியைப் பெற்றும், இதை நாம் தவறாகப் புரிந்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறவில்லை. அவர்கள் ஒருவிதத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமைக்குள்ளாக வந்திருக்கிறார்கள். அதாவது பிரசங்கி பிரசங்கம் செய்கிறபோது ஆவியானவர் கிரியை செய்கிறார். அந்த ஆவியானவரின் பொதுவான கிரியையின் மூலமாக வசனத்தில் ஆர்வம் ஏற்படுகின்ற ஒரு வாய்ப்பை மட்டும் இத்தகையோர் கொண்டிருந்தார்கள். ஆனால் ஆவியானவர் ஒருபோதும் அவர்களுக்குள் நிரந்தரமாக இருக்கவில்லை. நான்காவதாக, தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும் என்பதற்கு அர்த்தம், அவர்கள் சுவிசேஷ சத்தியங்களைப் புரிந்து கொண்டிருந்தார்கள், கிறிஸ்தவத்தைப் பற்றிய அறிவு அவர்களுக்கு ஓரளவுக்கு இருந்தது, ஆண்டவரைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தது, பாவத்தைப் பற்றித் தெரிந்திருந்தது, வரப்போகிற நியாயத் தண்டனையைப் பற்றி தெரிந்திருந்தது. இவையெல்லாம் தெரிந்திருந்தும் கூட அவையெல்லாம் வெறும் அறிவாக மட்டுமே இருந்தது. இந்த நான்கு காரியங்களையும் சுவிசேஷத்தின் மூலம் அறிந்திருந்த போதும் அது உண்மையான விசுவாசத்திலோ, மனந்திரும்புதலிலோ போய் முடியவில்லை. இத்தனையையும் அவர்கள் தூக்கி எறிகிறபோது என்ன செய்கிறார்கள்? தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறார்கள். ஆகவே உண்மையான விசுவாசத்தை அடையாமல் சுவிசேஷத்தின் வெளிப்புறமான பலன்களை ருசிபார்க்க முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவேதான் போதகர்கள் ஆத்துமாவை இனம் கண்டுகொள்ளுவது இலேசான காரியமல்ல, அதற்காக அவர்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் அதிக பக்தி விருத்தி உள்ளவர்களாக, இருதயங்களை அறிந்தவர்களாக, நுணுக்கத்தோடு ஆராய்ந்து வேதத்தின் அடிப்படையில் ஆத்துமாக்களைக் கவனிக்கக் கூடியவர்களாக இருப்பது அவசியமானது. ஏனெனில் போலியான மக்களுக்கும் ஞானஸ்நானம் கொடுத்துவிடுகின்ற பெரிய ஆபத்து அதிலிருக்கிறது. ஆகவே இத்தனையையும் அடைந்தவர்கள் இயேசுவைத் தூக்கி எறிந்துவிட்டால், அவர்கள் மனந்திரும்பும்படியாக ஆண்டவர் அதற்கு மேல் செய்யும்படியாக எதுவுமே இல்லை.

உங்களுக்கு சுவிசேஷம் கேட்கிற பாக்கியம் கிடைத்திருந்தால் அதைக் கேட்டு மனந்திரும்பி ஆண்டவருக்குக் கீழ்படியுங்கள். பெற்றோர்களாக நீங்கள் இருந்தால் உங்கள் பிள்ளைகளை ஆண்டவருக்குள் நன்றாக வளர்க்கக் கூடிய பொறுப்பு உங்களுக்கு அதிகமாக இருக்கிறது. அவர்கள் சத்தியத்தைத் தொடர்ந்து கேட்கக் கூடிய வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பிள்ளைகள் இந்தக் காலத்தில் சந்திக்கிற ஆபத்து மிகவும் பயங்கரமாக இருக்கிறது. ஆகவே பிள்ளைகள் சத்தியத்தைக் கேட்டுத் தொடர்ந்து வளருகிறபோது ஒருக்காலத்தில் ஆண்டவர் அவர்களுக்கு உண்மையான இரட்சிப்பைக் கொடுப்பார். அநேக பெற்றோர்களுக்கு உலக ஆசை அதிகமாக உள்ளது. தங்கள் பிள்ளைகள் உலகத்தில் பெரிய ஆளாக வர வேண்டும், உயர்ந்த பதவி அடைய வேண்டும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணங்களை அதிகம் கொண்டுள்ளனர். ஆனால் தங்கள் பிள்ளைகள் சபைக்குப் போகவேண்டும், சத்தியத்தைக் கேட்க வேண்டும், சத்தியத்திற்காகப் பாடுபட வேண்டும், ஆண்டவரிடத்தில் விருப்பம் காட்ட வேண்டும் என்கிற சிந்தனைகளைக் கொண்ட பெற்றோர்களைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. சபைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உலகக் காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் ஆண்டவருடைய தண்டனை பெரிதாகத்தான் இருக்கும். ஆண்டவருக்காக இழக்கத் தயாராக இல்லையென்றால் கிறிஸ்து உங்களுக்கு எதற்காகத் தேவை? தன்னை இழந்து ஆண்டவருக்குக் கொடுக்க வேண்டியதை கொடுக்காவிடில் கிறிஸ்து உங்களுக்குத் தேவையே இல்லை.

உண்மையான கிறிஸ்தவன் யார் தெரியுமா? உண்மையான கிறிஸ்தவன் என்பவன் இயேசுவுக்கு அடிமை. ஒரு அடிமை எப்படி இருப்பான் என்பதை ஒரு அகராதியை வாங்கி வாசித்துப் பாருங்கள். ஒரு அடிமை என்பவன் தன் எஜமான் இட்ட கட்டளைக்கு எந்தவிதத்திலும் மறுப்புக் கூறாமல், அவருக்காகவே சேவை செய்கிறவன்தான் அடிமை. ஆகவே ஒரு உண்மையான கிறிஸ்தவன் இயேசுவுக்கு அடிமையாக இருந்து அவர் இட்ட கட்டளைகளில் அன்பு பாராட்டி அதை பின்பற்றுகிறவனாக இருப்பான். ஆகவே நம் இருதயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தக் கற்பாறை போன்ற இருதயம் கொண்டவன் வேதத்திலும், இயேசுவிலும் காட்டுகிற அக்கறை எல்லாமே வெளிப்புறமானது. இப்படிப்பட்டவர்கள் செய்கிறதெல்லாம் வெளிப்புறமாகத்தான் தோற்றமளிக்கும். அவர்கள் உண்மையாகப் பாவத்தை உணர்ந்து, அதற்காக வருந்தி, அதை விட்டு விலகிய அனுபவம் இல்லாதவர்கள். மேலும் அவர்கள் கிறிஸ்துவை உண்மையாகவே விசுவாசித்திருக்கமாட்டார்கள்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பயன்பாடுகள்

1. வேத வசனங்களைக் கேட்பதற்கு நாம் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். பலர் வசனத்தைக் கேட்டு மனந்திரும்பாமல் போனால் அது வசனத்தினுடைய தவறல்ல, மனித இருதயத்தின் தவறாகும். ஆகவே இரட்சிப்பு கிடைக்கிறவரையும், அந்த இரட்சிப்பு தொடருகிறவரையும், அதை அடைந்த பிறகும் வசனத்தில் அதிக ஆர்வம் காட்டுவதும், அதைப் படிப்பதும் சிந்திப்பதும் ஆராய்வதும் நமக்கு வாழ்க்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் வசனம் நமக்கு உணவு போன்றது. அந்த வசனத்தின் மூலமாகத்தான் ஆண்டவர் நம்மைப் போஷிக்கிறார். ஆகவே வேத வசனத்திற்கு நாம் எந்தளவுக்குக் குறைவாக இடம் கொடுக்கிறோமோ அந்தளவுக்கு அதனுடைய பாதிப்பு நம்முடைய சிந்தனையிலும் செயலிலும் இருக்கும். யார் வேத வசனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் ஆண்டவர் நிச்சயமாக பெரிய காரியங்களைச் செய்வார். நீங்கள் எந்தளவுக்கு வேத வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள்? பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் ஒரு கேள்வியைக் கேட்கிறார், “அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?” (ரோமர் 10:14). ஆகவே ஒருவரும் வசனத்தைக் கேட்காமல் ஆண்டவரை விசுவாசிக்க முடியாது. யூதாஸ்காரியோத் அவ்வளவு வசனங்களைக் கேட்டும் அதினால் இரட்சிப்பை அவன் அடையவில்லை என்றால் அது வசனத்தினுடைய தவறு அல்ல, அவன் இறுதிவரையும் மனந்திரும்பாமல் இருந்ததுதான் தவறு. யூதாஸ்காரியோத் மனந்திரும்பவில்லை என்பது ஆண்டவருக்கு நன்றாக தெரிந்திருந்தது, சுற்றி இருந்தவர்களுக்குத்தான் அது தெரியவில்லை. மற்ற சீடர்கள் மனந்திரும்பி இருந்தார்கள், ஆனால் அவன் மனந்திரும்பவில்லை. காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று ஆண்டவர் சொல்லி இருக்கிறார். ஆகவே வசனத்தைக் கேட்கக் கூடிய, அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய, அதினால் இரட்சிப்பை அடையக்கூடிய விதமாக நம் இருதயத்தைப் பக்குவப்படுத்த வேண்டிய வேலை நம்முடையது. வசனத்தை நாம் தொடர்ந்து கேட்க வேண்டும். ஏனென்றால் வசனத்தின் மூலமாகத்தான் பரிசுத்த ஆவியானவர் நம் இருதயத்தில் செயல்படுகிறார். ஆகவே வசனப் பஞ்சத்திற்கு உங்கள் வாழ்க்கையில் இடம் கொடுக்காதீர்கள். நல்ல சத்தியங்களையும், நல்ல பிரசங்கங்களையும் கேட்பதற்கு வாழ்க்கையில் இடம் கொடுக்க வேண்டும்.

2. உண்மையான மனந்திரும்புதலையும் கிறிஸ்துவில் வைக்கிற விசுவாசத்தையும் அடைவதற்கு எத்தனை முயற்சிகள் செய்தாலும் அது போதாது. ஒருவேளை நீங்கள் ஆண்டவரைத் தெரியாமல் இருந்தால் உண்மையான மனந்திரும்புதலையும் கிறிஸ்துவில் வைக்கிற விசுவாசத்தையும் அடைவதுதான் உங்களுடைய இறுதி நோக்கமாக இருக்க வேண்டும். ஒரு செடி வளர்ந்து கனி கொடுக்காதவரை அதனால் எந்தப் பயனுமில்லை. ஆகவே உண்மையான மனந்திரும்புதலை அடைய வேண்டும், கிறிஸ்துவில் உறுதியான விசுவாசத்தை வைக்க வேண்டும். ஒரு நிலையான ஜீவனுள்ள ஆத்மீக வாழ்க்கை கிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலமாக ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பிக்கிற வாழ்க்கைதான் அவருக்காக இழந்து தொடரும்படியாகச் செய்யும். அநேகர் அப்படியாக இருப்பதில்லை, இவ்வாறு நான் ஆண்டவருக்கு இழந்து கொடுத்தால் எப்படி மூன்று வேளை சாப்பிடுவது என்று கேட்பார்கள். அப்படியாகச் சிந்திப்பவர்கள் இருதயத்தில் பிரச்சனை இருக்கிறது, அவர்கள் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள், அவர்கள் குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் ஆபத்து வராமல் இருக்காது. அதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

3. வசனத்தின் மூலம் ஆண்டவரை விசுவாசித்திருப்பவர்கள் உங்கள் வாழ்க்கையில் ஆத்தும வாழ்க்கைக்கும் சபை வாழ்க்கைக்கும் இடம் கொடுங்கள். சபை இல்லாமல் ஆத்தும வாழ்க்கையில் வளர முடியாது. சபை வாழ்க்கை இல்லாமல் இருப்பவர்கள் பாலைவனத்தில் இருப்பது போலக் காணப்படுவார்கள். பாலைவனத்தில் இருந்தால் தண்ணீர் கிடைக்காது, சாப்பாட்டிற்கும் கஷ்டமாக இருக்கும். கிறிஸ்துவில் நம் ஆத்மீக வாழ்க்கை தொடருவதற்கு சபை வாழ்க்கை மிகவும் அவசியமாகும். ஒரு நல்ல சபையை எப்போதும் இழக்காமல் இருக்கும்படியாக பார்த்துக்கொள்ள வேண்டும். சில நேரம் நம்முடைய பிரச்சனைகள் சபையை தவறாகப் பார்க்க வைக்கும். நாம் நல்ல நிலையில் இல்லாமல் இருந்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்களைத் தவறாகப் பார்ப்போம். காமாலைக் கண்ணனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும் என்பது போலதான் அந்தப் பிரச்சனை இருக்கும். ஆகவே சபை நமக்கு உறவாக, நல்ல குடும்பமாக இருக்க வேண்டும், அதில் ஐக்கியத்தை வளர்க்க வேண்டும். அது ஒரு நல்ல சபையாகவும், நல்ல பிரசங்கங்களைக் கொடுக்கின்ற சபையாகவும், நல்ல வேத போதனைகளைக் கொடுக்கின்ற சபையாகவும் இருக்க வேண்டும், அது கோமாளி சபையாக இருந்துவிடக் கூடாது.

கடைசியாக உங்கள் ஆத்மீக வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்பதற்காக உங்கள் முன் சில கேள்விகளை வைக்கிறேன்.

  1. ஆண்டவரைத் தொடர்ந்து தேடுகிற இருதயத்தைக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் ஆண்டவரை அடைந்து அவரை விசுவாசித்தவர்களாக இருக்கலாம், இருந்தபோதும் பசியுள்ளவன் ஒரு உணவைத் தேடுகிறதுபோல கர்த்தர் தேவை, அவருடைய வசனம் தேவை என்கிற இருதயம் இருக்கிறதா?
  2. உங்கள் வாழ்க்கையில் வேதத்தின் அதிகாரமும் அதன் ஆளுகையும் எந்தளவுக்கு இருக்கிறது? இயேசு நம்மை ஆளுகிறபோது வேதத்தின் மூலம்தான் ஆளுகிறார். வேத வசனத்திற்கு இடம் கொடுக்காமல், அதைப்பற்றி அதிகமாகத் தெரிந்திருக்காமல் வசனத்தின் பஞ்சத்தில் நாம் இருந்தால், கிறிஸ்துவின் ஆளுகையும் நம் வாழ்க்கையில் குறைவாகத்தான் இருக்கும். வேதம் தெரியாமல் இருக்கும்போது எவ்வாறு ஆண்டவருடைய கட்டளைகளுக்கு அடிபணிவது? வேதம் படிக்கிறபோது நாம் ஆண்டவருடைய சித்தத்தையும், அவர் எவ்வாறு சிந்திக்கிறார், நம்மிடமிருந்து அவர் எதை எதிர்பார்க்கிறார் என்பதைத் தெரிந்துக்கொள்ளுவதற்கு வேதம் மட்டுமே உதவுகிறது. எந்தளவுக்கு வேதத்தில் உங்களுக்கு அக்கறை இருக்கிறது?
  3. இயேசுவை நீங்கள் விசுவாசித்திருந்தால் எந்தளவுக்கு இயேசுவையும் மற்றவர்களையும் நேசிக்கிறீர்கள்?
  4. நீங்கள் எந்தளவுக்கு ஆண்டவருடைய பிரசன்னத்திற்காக அலைகிறீர்கள்? அவர் பிரசன்னத்தை அறிந்து கொள்ளுவதற்காக ஜெபிக்கிறீர்களா? உங்கள் குடும்ப ஜெபத்தில் அவரின் பிரசன்னத்தை உணர முடிகிறதா? சபை ஆராதனையில் உணர முடிகிறதா?
  5. உங்கள் வாழ்க்கையில் எந்தளவுக்கு சபைக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?
  6. உங்கள் வாழ்க்கையில் எந்தளவுக்கு ஆத்மீக ஒழுங்கு நடவடிக்கைகளை வைத்திருக்கிறீர்கள்? தவறாமல் வேதம் வாசிப்பது, ஜெபிப்பது, ஆண்டவருடைய சத்தியங்களை அறிந்துகொள்ள உழைப்பது, அவருடைய சபைக்கு செய்ய வேண்டிய காரியங்களைத் தவறாமல் செய்வது போன்ற காரியங்களில் ஒரு ஒழுங்கைக் கொண்டுள்ளீர்களா?
  7. மற்றவர்களை மன்னிக்கிற இருதயம் உங்களுக்கு இருக்கிறதா? இயேசு எதிரிகளுக்காக ஜெபித்தார், பிதாவே தெரியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும் என்று. ஆகவே தவறு செய்தவர்களையும் பாவம் செய்தவர்களையும் இயேசுவைப் போல மன்னிக்கிற இருதயம் உங்களுக்கு இருக்கிறதா? அல்லது அவர்களை எப்படியாவது அழித்துவிட வேண்டுமென்கிற இருதயம் உங்களுக்கு இருக்கிறதா?
  8. எந்தளவுக்கு பரலோகத்திற்கு போக வேண்டும், இயேசுவோடு இருக்க வேண்டும் என்கிற ஆதங்கம் இருக்கிறது? இந்த உலகத்தில் இயேசுவோடு இருப்பவர்களுக்கு அவரோடு எப்போதும் இருக்க வேண்டும் என்கிற ஆதங்கம் இல்லாமல் இருக்காது.

இந்தக் கேள்விகளுக்கு நீங்கள்தான் பதிலளிக்க வேண்டும். ஏனென்றால் அந்த ஆழமாக மண்ணில்லாத கற்பாறை நிலமாக நாம் இருந்துவிடக் கூடாது. ஒரு மனிதன் இயேசுவின் பெயரில் போலியாக வாழ்ந்துவிடலாம் என்று தெரிந்துதான் ஆண்டவர் இந்த உவமையைக் கொடுத்திருக்கிறார். மற்ற மனிதர்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம், ஆனால் ஆண்டவருக்கு அது தெரியும். அது நமக்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஆண்டவர் இந்த உவமையில் இந்த இரண்டாவது நிலத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். ஆகவே நீங்கள் ஜெபித்து உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் இருதயம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்து அதைச் சரி செய்துகொள்ளப் பார்க்க வேண்டும். ஆண்டவருடைய உதவியோடு அதை நாம் சரிசெய்து கொள்ளுகிறபோது நாம் சரியான பாதையில் போக முடியும். அப்போது கர்த்தர் நம்மோடு இருப்பார். இருதயத்தைப் பார்க்க மறுக்கிறவன் நிச்சயமாக ஆண்டவரில் எந்த அன்பும் இல்லாதவனாகத்தான் இருப்பான். அவன் சத்தியத்தில் ஆர்வம் காட்டமாட்டான். ஆகவே அதை உங்களுக்கு எச்சரிக்கையாக கொடுத்து இந்த ஆக்கத்தை முடிக்கிறேன்.

மறுமொழி தருக