வசனத்தின் மெய்யான அர்த்தத்தைக் கண்டறிதல்

அதிகாரம் 6 – A.W. பின்க்

“பொருள் விளக்கம்” (Interpretation) என்ற வார்த்தை தீர்க்கமானதும், விரிவானதுமான அர்த்தத்தைத் தன்னில் கொண்டுள்ளது. தீர்க்கமானது என்கிறபோது அது ஒரு பத்தியின் இலக்கண ரீதியிலான அர்த்தத்தை அழுத்தமாக விளக்குகிறது. விரிவானது என்கிறபோது அது அப்பத்தியின் ஆத்மீக அர்த்தத்தை விளக்குகிறது. வேதத்தை விளக்குகிற ஒருவர், வேதஉட்பொருள் விளக்க விதிகளைப் பயன்படுத்துவதில் எந்தவிதத்திலும் வளைந்துகொடுக்காதவராக இருந்தால், அவருடைய அறிவுத்திறன் மூலமாக ஒரு விதத்தில் நன்மையைப் பெற்றாலும், கர்த்தருடைய மக்களுக்கு நடைமுறையின் அடிப்படையில் அவர் பெருமளவுக்குத் துணைபோகிறவராக இருக்க மாட்டார். உணவில் காணப்படும் இரசாயன அம்சங்களின் பண்புகளைப் பட்டியலிட்டு விளக்குவது, பசியிலிருக்கிற ஒருவனுடைய பசியைப் போக்காது. அதேபோல், எபிரெய, கிரேக்க மொழிகளிலுள்ள வார்த்தைகளின் மிக ஆழமான பொருளை விளக்குவது (சில இடங்களில் அவசியமாக இருந்தபோதும்), கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒருவர், தன்னுடைய விசுவாசத்திற்கான நல்ல போராட்டத்தில் ஈடுபடுவதில் அவருக்குப் பெரியளவில் உதவாது. இப்படிக் கூறுவதால் நாம் அறிஞர்களை அவமதிக்கவில்லை, அத்தோடு கர்த்தருடைய வார்த்தையைக் கையாளுகிற வேளையில் தங்களுடைய கற்பனைக் குதிரையை ஓடவிடுகிறவர்களை ஆதரிக்கவும் இல்லை. மாறாக, வேதத்தை விளக்குகிறவர்கள், சத்தியத்தை எடுத்துரைப்பதோடு, அதைக் கேட்கிறவர்களின் இருதயத்தை ஊக்கமடையச் செய்து, பத்திவிருத்தியடையவும், அவர்களில் நன்மையான மாற்றங்கள் ஏற்படுவதையும் மைய நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம்.

இப்புத்தகத்தின் முந்தைய ஆக்கங்களில், வேதத்தை விளக்குகிறவர்களின் செயல்பாடுகள், எப்போதும் நெகேமியா 8:8ல் சொல்லப்பட்டிருப்பதற்கு ஏற்றவிதமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறேன், “அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்” (நெகேமியா 8:8). இதைச் செய்வதற்கு ஒரு பிரசங்கி ஒவ்வொரு வாரமும் பல மணிநேரத்தை வேதத்தைப் படித்து ஆராய்வதில் செலவிட வேண்டும் என்று சொல்லியிருந்தேன். அவர் பிரசங்கிக்கும் வேதப்பகுதியிலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும், வேதத்தில் அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் பொதுவான விதத்தில் துல்லியமாகவும் திட்டவட்டமாகவும் அர்த்தம் தர வேண்டும். இல்லாவிட்டால், கடவுளுடைய வார்த்தையை அதனுடைய தன்மைக்கேற்ற விதத்தில் விளக்காமல், தன்னுடைய சொந்தக் கற்பனைகளின்படியும், அது குறித்துத் தான் கொண்டிருக்கிற எண்ணங்களின்படியும், தன்னிச்சையாகத் தன் மனம்போன போக்கில் அவர் விளக்கிவிடுவார். ஒவ்வொரு மொழியிலும் காணப்படுகின்ற பொதுவான விதியை ஒருபோதும் மீறவும் கூடாது; எந்தவொரு வார்த்தைக்கான அர்த்தத்தையும் நம் வசதிக்கு ஏற்ற முறையில் மாற்றவும் கூடாது. எந்தவொரு வார்த்தையின் உள் அர்த்தத்தின் வலிமையை நாம் குறைக்கவும் கூடாது, மாற்றியமைக்கவும் கூடாது. அவற்றை ஆரோக்கியமான விதத்தில் விளக்க வேண்டுமே தவிர, இல்லாத ஒன்றை நாமாக உருவாக்கக் கூடாது.

வேதத்தை விளக்குபவரின் பணி, வேதஉட்பொருள் விளக்க விதிகளைப் பொறுப்பாகக் கையாண்டு, வேதத்தில் பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தியிருக்கிற வார்த்தைகளுக்கான சரியான அர்த்தத்தை உறுதிசெய்து, தன்னால் முடிந்தவரை கடவுளுடைய எண்ணங்களைத் தன்னுடைய சொந்த மொழியில் எடுத்துரைப்பதுதான். கர்த்தருடைய வேதத்திலுள்ள வார்த்தைகளுக்கான சரியான அர்த்தத்தை முதலில் ஆராய்ந்தறிய வேண்டும். அதில், தன்னுடைய அபிப்பிராயத்தை நுழைத்துவிடாதபடி மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தன்னுடைய கருத்துக்கள் எதையும் அதில் திணிக்கக் கூடாது. தான் விளக்குகிற பகுதியின் சாராம்சத்தை உள்ளபடி எடுத்துரைக்கவே முழு முயற்சி செய்யவேண்டும். அதில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிற எதையும் நிராகரிக்கவோ, மறைக்கவோ அல்லது விளக்காமல் விட்டுவிடவும் கூடாது. தன்னுடைய எண்ணவோட்டத்திற்கு ஏற்றபடி அதில் எதையும் சேர்க்கவோ அல்லது திணிக்கவோ கூடாது. வேதம் தன்னைத்தானே விளக்குகிறதாக இருக்க வேண்டும். இதை, வேதத்தை விளக்குகிறவர் உணர்ந்து பொறுப்புடன் செயல்படுகிறபோதுதான் உணர முடியும். வேதத்திலுள்ள வார்த்தைகளுக்குச் சரியான விளக்கந் தருவது மட்டுமல்ல, அதிலுள்ள போதனைகளின் தன்மையையும் சரியாக விளக்க வேண்டும். இல்லாவிட்டால், வார்த்தைகளில் கவனத்தைச் செலுத்தி, போதனைகளில் கோட்டைவிட்டதாகிவிடும். ஒரு வேதப்பகுதியிலுள்ள வார்த்தைகளுக்கான அர்த்தத்தைத் துல்லியமாக ஆராய்ந்தறிந்தும், அப்பகுதியைப் பற்றிய தன்னுடைய தவறான எண்ணங்களினால், அப்பகுதியிலுள்ள போதனைகளைத் தவறாக விளக்கிவிடக் கூடிய பெரிய ஆபத்தும் உண்டு.

கர்த்தருடைய வார்த்தையாகிய வேதத்தை விளக்குகிறவர்கள் தங்களுடைய மனம்போன போக்கில் ஈடுபடும் எந்தவிதமான கவனக்குறைவான செயலையும் ஒருபோதும் ஏற்க முடியாது. ஒரு ஓவியன், இயற்கையோடு தொடர்புடைய காரியங்களை வரைகிறபோது, அதை உள்ளபடி காட்ட வேண்டும் என்பதற்காக, அதற்கான வர்ணங்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் காட்டுவான். ஆனால் மத விஷயங்களோடு தொடர்புடைய காரியங்களை வரைகிறபோது பெரும்பாலும் அசட்டையாகவே இருந்துவிடுவான். உதாரணமாக, நோவாவின் பேழையைப் பல ஜன்னல்கள் கொண்டதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அந்தப் பேழையின் மேற்புறத்தில் ஒரேயொரு ஜன்னல் மட்டுமே இருந்தது. அதேபோல், வெள்ளம் தணிந்தபின் நோவா வெளியே விட்ட புறா, தன் வாயில் ஒலிவ இலைகளின் கொத்தைக் கொண்டு வந்ததாகக் காட்டுகிறார்கள். ஆனால் அது கொண்டு வந்ததோ ஒரேயொரு “இலை” (ஆதியாகமம் 8:11). நாணல் பெட்டியில் இருந்த குழந்தையான மோசே அழுகிற விதத்தில் இல்லாமல் மனதைக் கவரும் புன்னகையுடன் இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது (யாத்திராகமம் 2:6)! பரிசுத்த வேதாகமத்தை விளக்குகிறவர்கள், இந்தவிதமான அலட்சியப்போக்குக் கொண்டிருக்கக்கூடாது. மாறாக, மிகுந்த கவனத்துடன் ஒரு சிறு குறிப்பையும், ஒரு துணுக்கையும்கூட விட்டுவிடாமல் ஆராய்ந்தறிந்து, அவற்றைத் துல்லியமாக விளக்குவதற்கான சகல முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். “வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்” என்று யோவான் 5:39ல் குறிப்பிடப்பட்டிருக்கிற வசனம், ஒரு வேட்டைக்காரன் விலங்குகளுடைய நடமாட்டத்தை மோப்பம் பிடித்துப் பின்தொடருவது போல் மிகுந்த கவனத்துடன் ஆராய்வதை வலியுறுத்துகிறது. வேதத்தை விளக்குகிறவர்கள், வேத வார்த்தைகளின் சாராம்சத்தை, அதன் தன்மையை எடுத்துரைக்கிறவர்களாக இருக்க வேண்டுமே தவிர, வெறுமனே அந்த வார்த்தைகளை மட்டும் விரிவாக்கி விளக்குகிறவர்களாக இருக்கக் கூடாது.

வேதத்தை விளக்குகிறவர்கள் கவனத்தில் கொண்டிருக்க வேண்டிய வேத விளக்க விதிகளைப் பற்றி ஏற்கனவே நாம் கவனித்திருக்கிறோம்.

முதலாவது, பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுக்கிடையேயுள்ள தொடர்பையும், அவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதையும் அறிந்துணர்ந்திருப்பது அவசியம்.

இரண்டாவது, புதிய ஏற்பாட்டில் பழைய ஏற்பாட்டிலுள்ள பகுதிகளின் மேற்கோள்கள் எந்தவிதத்தில் தரப்பட்டிருக்கின்றன என்பதையும் அதற்கான நோக்கத்தையும் கவனிப்பது அவசியம்.

மூன்றாவது, ஒரு வேதப்பகுதியை விளக்குகிறபோது, அது வேதத்தின் ஏனைய பகுதிகளோடு சகலவிதத்திலும் பொருந்திப் போகிறதாக இருக்க வேண்டியதை உறுதிசெய்வது மிகவும் அவசியம். வேதத்திலுள்ள ஒவ்வொரு வசனத்தையும் கடவுள் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிற ஒட்டுமொத்த சத்தியத்தோடு இசைந்திருக்கிற விதத்தில் விளக்க வேண்டும். எந்தவொரு விளக்கமும் வேதத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள போதனைகளோடு முரண்பட்டால் அது தவறான விளக்கம்.

நான்காவது, வேதத்திலுள்ள எந்தவொரு பகுதியையும் அது அமைந்திருக்கும் முழு சந்தர்ப்பத்தின் அடிப்படையில் ஆராய வேண்டும்.

ஐந்தாவது, ஒவ்வொரு வேதப்பகுதியின் நோக்கத்தையும், அதில் காணப்படும் சத்தியத்தையும் கண்டறிவதிலேயே நாம் கவனம் காட்ட வேண்டும்.

இந்த விதிகளின் அவசியத்தை மலைப் பிரசங்கத்தில் அதிகமாகக் காணலாம். மலைப் பிரசங்கத்தின் பல பகுதிகளை, அவற்றின் நோக்கத்தையும் அமைப்பையும் அறியாததனால் பலர் மிகவும் மோசமான விதத்தில் அவற்றைத் தவறாக விளங்கிக்கொள்கிறார்கள். மத்தேயு 5:27-28 வசனங்களில், நம்முடைய கர்த்தர், “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று” என்று சொல்லியிருப்பது, சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட கட்டளைகளையும்விட மிக உயர்ந்த நிலையிலான ஒழுக்கநெறியைக் குறித்து இயேசு இங்கே சொல்லுகிறார் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் இத்தகைய கருத்து, நம்முடைய ஆண்டவர் அதைச் சொல்லியிருக்கிற விதத்திற்கு நேர் எதிரானது. எப்படியென்றால், இதற்கு முன்புதான் 17 ஆவது வசனத்தில், நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் அழிப்பதல்ல தன்னுடைய ஊழியம், அதை நிறைவேற்றுவதே, அதாவது, அதன் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் உடன்பட்டு அவற்றைச் செயல்முறைபடுத்துவதற்காகவே தான் வந்திருக்கிறேன் என்று ஆணித்தரமாகச் சொல்லிவிட்டு, உடனடியாகத் தனக்குத்தானே குழிவெட்டிக்கொள்ளுகிற விதத்தில், அதன் போதனைகளுக்கு எதிராக நிச்சயமாக இயேசு இந்தவிதத்தில் சொல்லியிருக்க மாட்டார். 21 ஆவது வசனத்திலிருந்து, தம்முடைய இராஜ்ஜியத்தின் மக்களிடத்தில் தான் வலியுறுத்துகிற நீதி எத்தகையது என்பதையே இயேசு விளக்கி வருகிறார்.  அது “வேதபாரகர், பரிசேயர் என்பவர்களுடைய” நீதியைவிட மேலானது. அவர்கள், கடவுளால் கொடுக்கப்பட்ட கட்டளைகளைப் புறந்தள்ளி, தங்களுடைய பாரம்பரியச் செயலின்படி அவர்களுடைய ரபிகளின் கோட்பாடுகளைப் பரப்பி வந்தார்கள்.

மத்தேயு 15:6
உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.

“சினாய் மலையில் கடவுள் என்ன சொன்னார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” என்று கிறிஸ்து சொல்லவில்லை. மாறாக, “பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்” என்றே சொன்னார். இதன் மூலம், யூதமத மூப்பர்கள், கடவுளுடைய பத்துக்கட்டளைகளில் ஏழாவது கட்டளையை, திருமணமான ஒரு பெண்ணுடன் வேறொருவன் தவறான உடலுறவு கொள்ளுவதைப் பற்றி மட்டுமே விளக்குகிறது என்று அந்தக் கட்டளையின் நோக்கத்தைக் குறைத்திருப்பதற்கு எதிராகத் தன்னுடைய விளக்கத்தைத் தருகிறேன் என்றே குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கட்டளை, மனிதனுடைய உள்ளான உணர்வுகளோடு தொடர்புடையது என்பதையும், இருதயத்தின் எல்லாவிதமான அசுத்தமான எண்ணங்களையும் விருப்பங்களையும் உள்ளடக்கமாகக் கொண்டது என்பதையும் இயேசு வலியுறுத்துகிறார். நம்முடைய ஆண்டவரின் நோக்கத்தையும், அவர் அதை விளக்கியிருக்கிற விதத்தையும் நாம் அறிந்துகொள்ளாவிட்டால், மத்தேயு 5 முதல் 7 வரையுள்ள அதிகாரங்களில் இருக்கிற அநேக விஷயங்களை நாம் சரியாக விளங்கிக்கொள்ள முடியாமல் போய்விடும். இயேசுவின் நோக்கத்தையும், அவர் அதை விளக்கியிருக்கும் விதத்தையும் நாம் அறியாதவரை, அதிலுள்ள தெளிவான குறிப்புகள்கூட நம் கண்களுக்குப் புலப்படாமல் இருந்துவிடும்; அதிலுள்ள அருமையான உதாரணங்கள்கூட பொருத்தமற்றதாகவே தென்படும். ஆகவே, நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகளின் மெய்யான போதனைகளுக்கு எதிராக இயேசு போதிக்கவில்லை. மாறாக, யூதமதத் தலைவர்களின் தவறான போதனைகளையும், அவற்றைப் பற்றி அவர்கள் கொண்டிருந்த தவறான எண்ணங்களையும், அவை அக்காலத்தில் எந்தளவுக்கு மக்கள் மத்தியில் பகிரங்கமாகப் போதிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதையுமே சுட்டிக்காட்டி, அவற்றை இயேசு எதிர்த்துப் போதித்திருக்கிறார். ஆவியானவருடைய பட்டயத்தின் கூர்மையான முனையை, யூதமத ரபிகள் தங்களுடைய போதனைகளால் மழுங்கடித்து, பாவிகளான மனிதர்கள் கர்த்தரிடம் திரும்புவதற்கு அன்று பெரும் தடையை ஏற்படுத்தியிருந்தார்கள்.

ஒரு வசனப்பகுதியை விளக்குவதற்கு முன், அந்தப் பகுதியின் நோக்கத்தை அறிய வேண்டியது அவசியம் என்பதற்கான இன்னுமொரு உதாரணத்தை மத்தேயு 5:38-39ல் காணலாம்,

“கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.”

இந்த வசனப்பகுதியின் நோக்கத்தை அறியாததனால், இந்தப் பகுதியின் முக்கியமான அழுத்தத்தைப் பலரும் கவனிக்காமல் போய்விடுகிறார்கள். இதைப் படிக்கிறபோது, மோசேயின் நியாயப்பிரமாணத்தில் விளக்கப்பட்டிருப்பதை விடவும் இரக்கமான வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு புதிய விதியைக் குறித்து இயேசு பேசுகிறார் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் உபாகமம் 19:17-21 வரையுள்ள வசனப்பகுதியை நீங்கள் வாசித்துப் பார்த்தால், அது இஸ்ரவேலர்களின் நியாயாதிபதிகளுக்குத் தரப்பட்டது என்பதை அறியலாம். உணர்ச்சிகளின் அடிப்படையில் எதையும் அணுகாமல், தீமை செய்தவர்களுக்கு நீதியை வழங்குவதில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும் – “கண்ணுக்குக் கண்” என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்றே இந்தப் பகுதி விளக்குகிறது. நியாயாதிபதிகளுக்குரிய இந்தக் கட்டளையைப் பரிசேயர்கள், சகல மனிதர்களும் தங்கள் வாழ்க்கையில் செய்யவேண்டியதொன்றாக மாற்றி விளக்கினார்கள். மனிதர்கள் தனிப்பட்ட விதத்தில் பழிவாங்குதலில் ஈடுபடக் கூடாது என்பதை நம்மாண்டவர், தெளிவான போதனைகளுடன் விளக்கியிருக்கிறார். இதையே பழைய ஏற்பாடும் போதிக்கிறது. யாத்திராகமம் 23:4, 5; லேவியராகமம் 19:18; நீதிமொழிகள் 24:29; 25:21, 22. தனிப்பட்ட துவேஷம் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையைப் பழைய ஏற்பாடு வெளிப்படையாகத் தடை செய்கிறது.

இன்னொரு உதாரணம், மத்தேயு 7:24, 25
“ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.”

மேலே காணப்படும் வசனப்பகுதிக்கான சரியான விளக்கத்தை அறியாததால், எத்தனை பேர் இந்தப் பகுதியைப் பயன்படுத்தி இதில் சொல்லப்படாத விஷயங்களைப் பிரசங்கித்திருக்கிறார்கள். கடவுளுடைய கிருபையுள்ள சுவிசேஷத்தை அறிவிக்கும் விதமாகப் பாவிகள் கர்த்தரிடம் வருவது மட்டுமே ஒரே வழி என்பதை சுட்டிக் காட்டும் விதத்தில் நம்முடைய ஆண்டவர் இதைச் சொல்லவில்லை. அவர் தன்னுடைய பிரசங்கத்தின் இறுதியில் அதன் நடைமுறைப் பயன்பாட்டையே இங்கு விளக்குகிறார். இப்பகுதியின் ஆரம்பத்தில் காணப்படும், “ஆகையால்” என்ற வார்த்தையின் மூலம், இதுவரை அவர் விளக்கிவந்திருக்கும் அனைத்தின் மூலமாக அவர் எதிர்பார்ப்பது இதுதான் என்பதைத் தெரிவித்திருக்கிறார். இதற்கு முந்தைய வசனங்களில் கிறிஸ்து, தங்களுடைய இரட்சிப்பிற்காக நற்கிரியைகளிலும், மதச் சடங்குகளிலும் தங்கியிருந்தவர்களுக்கு எதிரான போதனையை அளிக்கவில்லை. அதற்கு மாறாக, தன்னுடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்த அனைவரையும் இடுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசிக்கும்படியும் (வசனங்கள் 13, 14), போலித் தீர்க்கதரிசிகளுக்கு எதிரான எச்சரிப்பையும் (வசனங்கள் 15-20) இப்பகுதியில் விளக்கியிருக்கிறார். இதுவரை, பாவிகள் தன்னை நாடிவரும்படியான மீட்பராகத் தன்னைக் காட்டியிருக்கும் கிறிஸ்து, இப்போது, மாய்மாலக்காரர்களிடம் “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்” (வசனம் 23) என்று தன்னை நியாயாதிபதியாகக் காட்டுகிறார்.

இவற்றின் அடிப்படையில், இந்தப் பகுதியில் கிறிஸ்து சுவிசேஷத்தை அறிவித்து, இரட்சிப்பின் நிறைவேற்றத்திற்காகத் தான் செய்திருக்கும் செயலே பாவிகளின் இரட்சிப்பிற்கான ஒரே அடித்தளம் என்று விளக்குகிறார் என்று கூறுவது மிகவும் விநோதமானது. அப்படிக் கூறுவதால், “ஆகையால்” என்ற அறிமுக வார்த்தைக்கும் இனி வரப்போகும் விஷயங்களுக்கும் தொடர்பில்லாமல் போய்விடுகிறது. பாவநிவாரணத்திற்காகத் தன்னுடைய இரட்சிக்கும் இரத்தத்தில் விசுவாசம் வைக்கவேண்டும் என்று கூறாமல், இயேசு இந்தப் பகுதியில், அவருடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டியது எத்தனை அவசியமானது என்பதையே விளக்குகிறார்.  “இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே” (ரோமர் 3:26) அல்லாமல் வேறு எந்தவிதத்திலும் எந்தவொரு ஆத்துமாவுக்கும் மீட்பு இல்லை என்பது உண்மை. ஆனால் அதைப்பற்றி இயேசு இந்தப் பகுதியில் விளக்கவில்லை. தன்னை நோக்கி “கர்த்தாவே, கர்த்தாவே” என்று சொல்லுகிற எல்லாரும் தம்முடைய இராஜ்யத்தில் நுழைந்துவிட முடியாது என்றும், “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே” (வசனம் 21) அதில் நுழைவான் என்றும் சொல்லியிருக்கிறார். தன்னை அறிந்திருக்கிறேன் என்று சொல்லுவதன் மெய்த்தன்மையை நிரூபித்துக் காட்டுங்கள் என்றே அவர் வலியுறுத்துகிறார். மெய்யான விசுவாசம், அதற்கேற்ற நற்காரியங்களைக் கொண்டிருக்கும். ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் இரட்சிப்பு உண்டு என்று விசுவாசித்திருக்கிறேன் என்று அறிவித்தும், அவருடைய கட்டளைகளை அலட்சியப்படுத்துகிறவர்களாக இருந்தால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளுகிறீர்கள் என்கிறார் இயேசு. கிறிஸ்து தம்முடைய வார்த்தைகளைக் கேட்டு, அதை விசுவாசிக்கிறவர்களை கற்பாறையின் மீது வீடு கட்டிய ஞானமுள்ளவனுக்கு ஒப்பாக இந்தப் பகுதியில் விளக்கவில்லை. யார், தன் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்கிறானோ அவனையே இயேசு ஞானமுள்ளவனாகக் காட்டுகிறார். தம்முடைய வார்த்தைகளைக் கேட்டும் அதன்படி நடக்காதவனை மணலின்மீது தன் வீட்டைக் கட்டியவனோடு ஒப்பிடுகிறார்.

ரோமர் 3:28
“ஆதலால் மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.”

யாக்கோபு 2:24
“ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.”

இந்த இரண்டு பகுதிகளையும் எழுதியவர்களின் நோக்கத்தை நாம் தெளிவாக அறிந்திராவிட்டால், இவை இரண்டும் நேரடியாக ஒன்றுகொன்று முரண்படுபவையாகவே நமக்குப் புலப்படும். ரோமர் 3:28, அந்த வசனத்திற்கு மேலிருக்கின்ற (21-27) வசனங்களின் முடிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, இரட்சிப்பிற்கான கடவுளுடைய வழிமுறை மனிதர்களுடைய எந்தவிதமான பெருமைக்கும் வழியில்லாதபடிச் செய்திருக்கிறது. விசுவாசத்தினால் ஒருவன் கடவுளுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுகிறானென்றால் அது மனிதனுடைய எந்தவொரு நற்செயலினாலும் இல்லாமல், விசுவாசத்தினால் மட்டுமே அமைய முடியும்.

யாக்கோபு 2:24, இந்தப் பகுதியிலிருக்கிற 17, 18 மற்றும் 26 வசனங்களின் அடிப்படையில் ஒரு மனிதன் கடவுளால் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுகிறான் என்பதை விளக்காமல், கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவன் அதற்கான நிரூபனங்களைத் தன்னில் கொண்டிருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறார். பவுல் ரோமரில், மனிதர்களுடைய இரட்சிப்பிற்காகச் சுய நீதியை நாடுகிறவர்களின் போக்கை மறுக்கிறார். ஆனால் யாக்கோபோ, சுவிசேஷத்தைக் குழப்பி, நற்செயல்கள் எந்தவிதத்திலும் அவசியமற்றது என்று போதிக்கிற கர்த்தருடைய கட்டளைகளுக்கு எதிரானவர்களோடு போராடுகிறார். கிருபையினாலேயே இரட்சிப்பு என்பதை நிராகரிக்கிறவர்களுடைய தவறான எண்ணத்தைப் பவுல் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் யாக்கோபோ, ஒரு மனிதனில் கிருபை செயல்படுகிறபோது, அது அவனுடைய நீதியிலும், அவனில் ஏற்படும் மாற்றங்களிலும் வெளிப்படும் என்று விளக்கி, செத்த விசுவாசத்தின் பயனற்ற தன்மையை வெளிப்படுத்திக் காட்டுகிறார். கர்த்தருடைய உண்மையுள்ள ஊழியன், தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்களை, சுயநீதிக்கு எதிராகவும், தாராளவாதத்திற்கு எதிராகவும் எச்சரிக்கிறவனாக இருப்பான்.

ஆறாவது, வேதத்தை வேதத்தோடு ஒப்பிட்டு விளக்க வேண்டியது அவசியம். இது குறித்த பொதுவானதொரு விளக்கத்தை 1 கொரிந்தியர் 2:13ல் காணலாம்,  “ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.” இந்த வசனத்தின் முற்பகுதி, அப்போஸ்தலனாகிய பவுல், கர்த்தருடைய நேரடிப் பிரதிநிதியாக இருந்து தெய்வீக வெளிப்படுத்தலின் மூலமாகத் தான் போதித்து வருவதாகச் சொல்லுகிறார் என்பதைக் காட்டுகிறது. இருந்தும், 12 மற்றும் 14 ஆவது வசனங்களில், ஆவிக்குரிய காரியங்களை அறிந்துகொள்ளுவதைப் பற்றிப் பவுல் குறிப்பிடுகிறார். ஆகவே 13 ஆவது வசனத்தின் பிற்பகுதி கூடுதலான அழுத்தம் கொண்டதாக இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இதிலுள்ள “சம்பந்தப்படுத்தி” என்ற வார்த்தைக்கான கிரேக்க வார்த்தை, பழைய ஏற்பாட்டின் செப்டுவஜின்ட் (Septuagint) மொழிபெயர்ப்பில் பல முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கனவுகள் மற்றும் புதிரான காரியங்களைக் குறிப்பிடுவதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்” என்பதை சார்ள்ஸ் ஹாட்ஜ், “ஆவியானவரைப் பற்றிய காரியங்களை ஆவியானவரின் வார்த்தைகளில் விளக்குதல்” என்று விளக்கியிருக்கிறார். ஆகவே “ஆவிக்குரிய” என்ற வார்த்தை தன்னில்தானே பொருள் கொண்டதல்ல. இது முந்தைய வாக்கியத்திலுள்ள “வார்த்தை” என்பதோடு இணைந்து காணப்படுகிறது; அதோடு ஒத்துக் காணப்படுகிறது. இந்தக் காரணங்களினால்தான், 1 கொரிந்தியர் 2:13, கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வதற்கும் விளக்குவதற்குமான மிக முக்கியமான விதியை விளக்குகிறது என்று கருதுகிறோம். அதாவது, கர்த்தருடைய வார்த்தையின் ஒரு பகுதியை அதனுடைய மற்றொரு பகுதியைக் கொண்டு விளக்க வேண்டும். ஆவிக்குரிய காரியங்கள், ஒன்றுக்கொன்று பக்கத்தில் அமைந்திருக்கிறபோது, ஒரு பகுதியை மற்றொன்று விளக்குகிறதாகவும், அதற்கு ஒளியூட்டுவதாகவும் இருக்கிறது. இது கர்த்தருடைய வார்த்தை தன்னில்தானே இணக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கிற அடையாளமாக இருக்கிறது. வேதத்தில் குழப்பமான அல்லது தெளிவற்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுகிறபோது, சத்தியத்தின் ஒரு பகுதி மற்ற பகுதிகளுடன் முழுமையாக ஒத்துப்போகிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப வேதத்தை விளங்கிக்கொள்ள வேண்டும்.

பரிசுத்த வேதாகமம், ஏனைய புத்தகங்களைப் போல் இல்லாமல், தன்னைத்தானே விளக்குகிறதாக இருக்கிறது. அது, தான் கொண்டிருக்கும் வாக்குறுதிகள் மற்றும் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைக் கொண்டிருப்பதனால் மட்டுமல்லாமல், தன்னிலுள்ள முன்னடையாளங்களின் வெளிப்பாட்டையும் கொண்டிருப்பதால், தன்னில் காணப்படும் அனைத்து சத்தியங்களுக்கும் எந்தவிதமான வெளிப்புற உதவிகளின் அவசியமில்லாமல் தன்னில்தானே விளக்கங்களைக் கொண்டமைந்திருக்கிறது. வேதத்திலுள்ள ஒரு பகுதிக்கான விளக்கத்தை அறிவது கடினமாக இருந்தால், அதோடு தொடர்புடைய வேதத்தின் இன்னொரு பகுதியோடு சேர்த்து ஆராய்ந்து அதன் பொருளை அறிந்துகொள்ள வேண்டும். அது ஒரேவிதமான வார்த்தைப் பதங்கள் கொண்டிருக்கிற பகுதியாகவோ, அல்லது, ஒரேவிதமான போதனையை விரிவாகவும், விவரமாகவும் கொண்டிருக்கிற பகுதியாகவோ இருக்கலாம். உதாரணமாக, வேதத்திலுள்ள முக்கியமான ஒரு வார்த்தைப்பிரயோகமாகிய “தேவநீதி” ரோமர் 1:17ல் இடம்பெற்றிருக்கிறது. இந்த வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை முடிவுசெய்வதற்கு முன்பாக, பவுலின் ஏனைய நிருபங்களில் இதே வார்த்தைப்பிரயோகம் எந்தவிதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கவனமாக ஆராய்ந்தறிய வேண்டும். இப்படிச் செய்வதனால், உலக எழுத்தாளர்களுடைய கருத்துக்களை நாம் நாடி ஓட வேண்டிய அவசியமில்லாமல் போகிறது. வேதத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் மட்டுமல்லாது, ஒரு வார்த்தையிலுள்ள ஒரு பகுதிக்கும், அதனுடைய வழியின்படி வருகிற துணைக் குறிப்புகளுக்கும் இதேவிதத்தில், நுட்பமாக ஆராய்ந்து விளக்கத்தைப் பெறவேண்டும். இத்தகைய சிறு குறிப்புகளின் மூலமாகவும் அவ்வப்போது நாம் வேத விளக்கத்தின் வெளிச்சத்தைப் பெறுகிறோம். கர்த்தருடைய வார்த்தையை இந்தவிதத்தில் நாம் படிக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார் என்பதை இதிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம்.

வேதத்திலுள்ள முக்கியமான போதனைகள், வேதத்தின் பல பகுதிகளிலும் இங்கும் அங்குமாகப் பரவி, சில நேரடியாகவும், சில மறைமுகமாகவும், பல்வேறு விதங்களில் காணப்படுகிறது. தம்முடைய வார்த்தையை நாம் ஆராய்ந்தறிய வேண்டும் என்பதற்காக கர்த்தர் தாமே தம்முடைய ஞானத்தினால் இந்த விதத்தில் வேதத்தைத் தந்திருக்கிறார். எந்தவொரு காரியத்தைப் பற்றியும் கடவுளுடைய சித்தத்தை நாம் அறிய வேண்டுமானால், அது குறித்து தரப்பட்டிருக்கும் அனைத்து வேதப்பகுதிகளையும் ஒன்று திரட்டி, அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்தவிதத்தில், கவனத்துடனும் விடாமுயற்சியுடனும் நாம் ஆராய்கிறபோது, கர்த்தருடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தில் அவை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கிற காரியங்களைப் பற்றிய தெளிவான அறிவை நாம் பெற்றுக்கொள்ளலாம். பரிசுத்த வேதாகமம் ஒரு விதத்தில் மொசைக் கற்களைப் போன்றது. அதனுடைய பகுதிகள் இங்கும் அங்குமாக சிதறிக் காணப்படும். அவற்றைச் சேகரித்து, மிகுந்த கவனத்துடன் ஒன்றிணைத்துப் பார்க்கிறபோதுதான், அதிலுள்ள எந்தவொரு போதனையின் முழுமையான படத்தை நாம் காண முடியும். வேதத்திலுள்ள பல பகுதிகளை, வேதத்தின் ஏனைய பகுதிகளில் தரப்பட்டிருக்கிற விளக்கங்களின் மூலமாகவே புரிந்துகொள்ள முடியும்.

மறுமொழி தருக