நுழைவோம் வாருங்கள் கிறிஸ்தவ இலக்கியச் சோலை

தோமா கிறிஸ்தவம்

நான் எழுதி வெளியிட்டிருக்கும் “தோமா கிறிஸ்தவம்” நூல் இப்போது வெளிவந்து விற்பனையாகி வருகிறது. நான் வேகமாக எழுதிய நூல்களில் ஒன்று இது. இதை எழுதவேண்டும் என்ற திட்டம் இருந்ததில்லை. 1980 களில் பிரபலமாக ஆரம்பித்த இந்தப் புராணக்கதை இப்போது மறுபடியும் தலைதூக்கி கிறிஸ்தவர்களைப் பாதித்து வருவதாக சில வாலிபர்கள் என் கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள். அவர்கள் தந்த ஊக்கத்தால் இதை எழுத நேர்ந்தது. இதை எழுதியது அவசியந்தான் என்று இப்போது எனக்குப் புரிகிறது. ஏனெனில், இதுவரை கிறிஸ்தவர்களில் எவரும் “தோமா கிறிஸ்தவம்” என்ற பெயரில் இருந்து வரும் கருத்துக்களுக்கு எதிர்வினையளித்து எழுதிய எதையும் நான் வாசித்ததில்லை. ஆனால், அதற்கு வக்காலத்து வாங்கித் தீனிபோட்டு வளர்த்து வரும் அநேகர் கிறிஸ்தவர்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் அல்லாதோர் மத்தியிலும் இருந்து வருகிறார்கள். எனக்குத் தெரிந்து, கிறிஸ்தவரல்லாத, அதே நேரம் கிறிஸ்தவத்தை அதிகம் மதிக்கும் படைப்பாளி ஜெயமோகன் மட்டுமே மரியாதையோடு இதற்கு மறுப்புத் தெரிவித்து வந்திருக்கிறார். கிறிஸ்தவரல்லாதவர்களுக்கும் இதன் போலித்தனம் புரிகிறபோது நம்மவர்களுக்கு அது ஏன் புரியாமலிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை.

தோமாவின் பெயரைப் பயன்படுத்தி எழுந்திருக்கும் போதனைகள் அனைத்தும் எந்தளவுக்கு வேதக் கிறிஸ்தவ சுவிசேஷத்திற்குக் களங்கம் உண்டாக்கியிருக்கின்றன என்பது தெரியாமல் தமிழ் கிறிஸ்தவம் இருந்து வருவது எனக்குப் பெரிய மனவருத்தத்தை உண்டாக்குகிறது. அதேவேளை, இந்துத்துவாக்களுக்கு ஆத்திரமூட்டி அவர்களை உசுப்பிவிடும் கைங்கரியத்தையும் தோமா கிறிஸ்தவம் செய்திருக்கிறது. கிறிஸ்து இயேசுவோ, பவுலோ ஒருபோதும் செய்திராத, சாத்தான் மட்டுமே செய்யும் செயலைத் தோமா கிறிஸ்தவம் செய்திருக்கிறது. வேதத்தில் நல்லறிவில்லாமலும், சிந்திக்கத் தெரியாமலும் இருக்கிறவர்கள் மட்டுமே இந்தப் பிசாசின் வலையில் விழுந்து தங்களுக்குப் பாதிப்பேற்படுத்திக்கொள்ளுவார்கள்.

சர்வ வல்லவரான தேவனின் வெளிப்படுத்தலாகிய வேதத்திற்குத் தரவேண்டிய இடத்தை, வேதத்தில் அடையாளம் காணமுடியாத தோமா கிறிஸ்தவத்திற்கு கிறிஸ்தவர்கள் கொடுத்திருப்பது மாபெரும் தவறு. நான் ஒரு சீர்திருத்த அப்போலஜிஸ்ட். ஒரு பிரசங்கியாக சத்தியத்துக்காக வாதாடி அதை நிலைநிறுத்துவது என்னுடைய கடமை. அதைச் செய்யும் என் அடிப்படை அணுகுமுறைக்குப் பெயர் “முன்னனுமானக் கணிப்பியம்” (Presuppositionalism). அதை ஆங்கிலத்தில் Presuppositional apology என்று கூறலாம். அதாவது, சர்வ அதிகாரமுள்ளது வேதம் மட்டுமே. அதனால் இறையாண்மையுள்ள வேதத்தில் தங்கியிருந்து அதை மட்டுமே பயன்படுத்தி சத்தியத்தை நிலைநாட்டுவது என் “முன்னனுமானக் கணிப்பியம்.” இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தியே நான் தோமா கிறிஸ்தவத்தின் தோலை உரித்துக் காட்டியிருக்கிறேன். இதற்காக நான் தர்க்கத்தையோ, உலக ஆதாரங்களையோ ஒதுக்கிவிடுகிறேன் என்று அர்த்தமல்ல. நம்பத்தகுந்த ஆதாரத்தை மட்டுமே நம்பமுடியும்; புராணக் கதைகளையல்ல. தர்க்கத்தை என் நூலில் நான் பயன்படுத்தாமலில்லை; முழு நூலுமே என் “முன்னனுமானக் கணிப்பியத்” தர்க்கமாகவே அமைந்திருக்கிறது. இதோடு, நின்றுவிடாமல், கிறிஸ்தவர்கள் வேத மூக்குக்கண்ணாடியை அணிந்து இந்த விஷயத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும் என் ஆய்வுமுறை விளக்குவதாக இருக்கிறது. அநேகருடைய இருதயத்தில் இது சத்திய வெளிச்சத்தை ஏற்படுத்துமானால் அதையே நூலுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதமாகக் கருதுவேன்.

ஜெயமோகனுக்கு நூலின் ஒரு பிரதியை அனுப்பி அவருடைய கருத்தைக் கேட்டிருக்கிறேன்; பதிலையும் எதிர்பார்த்திருக்கிறேன். பதில் கிடைக்குமானால் நிச்சயம் அது இவ்விதழில் வெளிவரும்.

தோமா கிறிஸ்தவம் – வாசிப்பனுபவம்

தோமா கிறிஸ்தவம் நூலை வாசித்துவிட்டு நமது நூல்களின் புதிய வாசகர், நண்பர் தனபால் தேவராஜ் உடனடியாகப் பின்வரும் செய்தியை வாட்ஸ்அப் ஆடியோ செய்தியாக அனுப்பியிருந்தார்.

“தோமா கிறிஸ்தவம் நூலை வாசித்து முடித்துவிட்டேன். அது கையில் கிடைத்தபோதே மிக மிக ஆனந்தமடைந்தேன். நெடுநாட்களாகவே சாது செல்லப்பா, இன்னும் இந்துப் புராணங்களில் இருந்து கிறிஸ்தவத்தை விளக்குகிறவர்கள் மீது எனக்கு ஒருவகைக் கோபம்கூட இருந்தது. அதேபோல் பிரசங்கங்களில் திருக்குறளைப் பயன்படுத்துகிறவர்கள், புராண வேதங்களைப் பயன்படுத்துகிறவர்கள் மீதும், இவர்கள் எந்த வேதத்தைப் படித்திருக்கிறார்கள்? என்ற எண்ணம் ஏற்படும். அதிலெல்லாம் இருந்து எடுத்துக்காட்டுகளை இவர்கள் ஏன் முன்வைக்க வேண்டும்? என்று எண்ணுவேன். நான் கிராமத்தில் வளர்ந்தவன். அந்தப் பாஷையில் சொல்லுவதானால், நீங்கள் பின்னிப் பெடல் எடுத்திருக்கிறீர்கள் ஐயா! இந்தப் புத்தகத்தை வாசித்தபோது, உண்மையாய்ச் சொல்லுகிறேன், பல நேரங்களில் எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது. பல வேளைகளில் நான் இருக்கையைவிட்டு எழுந்து ஜெபம் செய்து, குதி குதித்து உங்களுக்காக ஆண்டவரைத் துதித்திருக்கிறேன். உங்கள் வீரத்துக்காக, கடவுள் உங்களுக்குத் தந்திருக்கும் எழுத்துத் திறமைக்காக, உண்மையை உடைத்து சிறப்பாய் எழுதியிருப்பதற்காக, கர்த்தரைத் துதிக்கிறேன். தெய்வநாயகம், சாது செல்லப்பா மற்றும் “உடைகிறது இந்தியா” வை எழுதியவர்கள் எல்லாம் செய்யும் பொய்யான பிரச்சாரங்களை விமர்சித்து நீங்கள் சிறப்பாக எழுதியிருப்பது எனக்கு மிக மிக சந்தோஷத்தைத் தருகிறது. தோமா கிறிஸ்தவம் நூலைக் கோடிட்டு வாசித்திருக்கிறேன். நூலை அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் எழுதிய நூல்களில் நான் முதல் முதலாக வாசிக்கும் நூல் இது. எனக்கு மிகவும் ஆனந்தமேற்பட்டது; அநேக உண்மைகள் புலப்பட்டன. இந்த ஞானத்தை உங்களுக்குத் தந்த பரிசுத்த ஆவியானவரைத் துதிக்கிறேன். இதைப் பலரும் வாசிக்கும்படியாக நூலை வாங்கி அவர்களுக்குப் கொடுக்கப் போகிறேன். அந்த வேலையைச் சீக்கிரமாகவே ஆரம்பிக்கப்போகிறேன். மறுபடியும் உங்களுக்கு நன்றி.”

இதேபோன்று பெங்களூரில் வாழும், முன்னாள் ஆசிரியரான எலிசபெத் என்பவரும் தோமா கிறிஸ்தவம் நூலை வாசித்துவிட்டுத் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அதையும் இங்கே தருகிறேன்.

“இந்நூலின் ஆரம்பம் முதல் இறுதிவரை பரிசுத்த ஆவியானவரின் துணை ஆசிரியரோடிருந்திருப்பதை நூல் வழியாக அறியமுடிந்தது. இல்லையெனில் சாது செல்லப்பா, தெய்வநாயகம் போன்றோரின் குருட்டுத்தனத்தையும், பொய்களையும் ஆய்வுசெய்து அவற்றின் தன்மைகளை உணர்ந்தபோது கோபத்தைத் தூண்டக்கூடிய சூழலிருந்தபோதும், பொறுமையோடு நிதானமாக வேதவாக்கியங்களின் அடிப்படையில் சரியாக வேதத்தை இந்நூலில் விளக்கியிருப்பது அருமை. ஜீவனுள்ள தேவனாகிய பரிசுத்த ஆவியானவரால் அருளப்பட்ட பரிசுத்த வேதாகமத்திற்கு களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற துடிப்பை ஆசிரியரிடம் காணமுடிகின்றது.

கிறிஸ்தவத்திற்குப் பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய தோமா கிறிஸ்தவப் போதனைகளில் மயங்கி இரையாகும் மக்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம். வாசகர்களை நூல் நிச்சயம் சிந்திக்க வைக்கும்; சீர்படுத்தும், போலிப்போதனையாளர்களிடமிருந்து விடுவிக்கும். ரிக் வேதத்தில் இருந்து சாது செல்லப்பா விளக்கும் பிரஜாபதி இயேசு கிறிஸ்து அல்ல. இயேசு கிறிஸ்து யார்? என்பது இந்நூலில் ஐயமற விளக்கப்பட்டிருக்கிறது. நூலை வாசித்தபிறகாவது வாசகர்கள் மெய்க்கிறிஸ்தவத்தை அறிந்துகொள்ள முயலட்டும் (கலாத்தியர் 1:6-8).

ஆசிரியரின் கடின உழைப்பை நூலை வாசித்து அறிந்துகொள்ள முடிகிறது. இவரைப் போன்ற அநேகரை ஆண்டவர் எழுப்பட்டும். இந்நூலை இத்தனை தெளிவாக எழுதத் துணைபுரிந்த கர்த்தருக்கு நன்றிகூறி மகிழ்கிறேன். சரியானபடி எழுதி வெளியிட்ட ஆசிரியருக்கும் என் நன்றிகள்.”

பாவம் பொல்லாதது – ரால்ப் வென்னிங்

ரால்ப் வென்னிங்கின் “பாவம் பொல்லாதது” நூல் ஏப்ரல் மாதத்தில் வெளிவந்தது. தமிழில் பாவத்தை இந்தளவுக்கு நுணுக்கமாக விளக்கும் ஒரு நூலும் இல்லையெனலாம். இதையே இதுவரை நூலை வாசித்திருப்பவர்கள் எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள். தமிழ் வாசகர்கள் வேகமாக வாசிக்கும் பழக்கமில்லாதவர்களாக இருப்பதால் பொறுத்திருந்தே கருத்துத் தெரிவிப்பார்கள். ஒரு தீவிர வாசகர் நூல் பற்றிய நீண்ட கருத்துரையை அருமையாக எழுதி அனுப்பியிருக்கிறார். அத்தகையோர் அதிகமாகப் பெருக வேண்டும். இந்நூல் அனைத்துக் கிறிஸ்தவர்களும் வாசிக்க வேண்டிய நூல். திருச்சபைப் பணியில் அக்கறை காட்டி அது பரிசுத்தத்தோடு இருக்கவேண்டும் என்று ஜெபித்து வரும் போதகர்கள் இந்த நூலைச் சபையார் வாசிக்கச் செய்யவேண்டும். நிச்சயம் சபையார் அவர்களை வாழ்த்துவார்கள்.

இதை மொழிபெயர்க்கும்போதே என் இருதயத்தை இது பலவேளைகளில் தொட்டு மனமிளகச் செய்திருக்கிறது. ரால்ப் வென்னிங் பியூரிட்டன் காலத்துப் பிரசங்கி. பரிசுத்தத்தில் அதிக அக்கறைகாட்டியவர்கள் வாழ்ந்த அக்காலத்தில் பாவத்தை அவர்கள் அலட்சியம் செய்யவில்லை. சீர்திருத்தப் பிரசங்கிகளே வரலாற்றில் பாவத்தைப் பற்றி இந்தளவுக்குப் பிரசங்கிக்கவும், எழுதவும் செய்திருக்கிறார்கள். இதையே பதினெட்டாம் நூற்றாண்டு சீர்திருத்தப் பிரசங்கிகளான ஜோர்ஜ் விட்பீல்ட், ஜொனத்தன் எட்வர்ட்ஸ் போன்றோரிடமும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்பர்ஜன், ஜே.சி. ரைல் போன்றோரிடமும், இருபதாம் நூற்றாண்டில் மார்டின் லொயிட் ஜோன்ஸ் போன்றோரிடமும் காண்கிறோம்.

இந்த 21ம் நூற்றாண்டில் பாவத்தைப் பற்றிய உணர்வு கிறிஸ்தவர்களிடம் மந்தமாகவே இருக்கிறது. கர்த்தரின் கிருபையைப் பற்றிப் பெரிதாகப் பேசுகிறவர்கள், நியாயப்பிரமாண எதிர்ப்பாளர்களாக, ஒழுங்குமுறையற்ற வாழ்க்கையை வாழ்வதிலேயே நாட்டம் காட்டுகிறார்கள். இவர்களுடைய எண்ணத்தில் இறையியல் கோளாறிருக்கிறது; விசுவாசத்திலும் கோளாறிருந்துவிடுமோ என்று பயப்படுகிறேன். பரிசுத்தத்தில் ஒழுங்கற்றுக் காணப்படுவதற்கு பாவம் ஒரு பெரிய காரணம் என்பதை இந்நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் உணரவேண்டும். பாவத்தோடு போராடி வெற்றி காணாமல் பரிசுத்தம் வளராது.

தெலுங்கு மொழியில் 1689 விசுவாச அறிக்கை

திருப்பதியில் வாழும் நண்பர் ருத்ரா போல் 1689 விசுவாச அறிக்கையை, நண்பர் முரளியோடும் (பெங்களூர்), வேறு சிலரோடும் இணைந்து உழைத்து தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். இது ஒரு கூட்டு முயற்சி. எப்போதோ ஆரம்பித்த பணி, இப்போது பல்வேறு கட்டங்களைத் தாண்டித் தன் இறுதி நிலையை அடைந்திருக்கிறது. அதைக் கூடிய விரைவில் சீர்திருத்த வெளியீடுகள் மூலம் வெளியிடும் பணிகள் நடந்து வருகின்றன. தெலுங்கு கிறிஸ்தவ சபைகள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் இதைக் கர்த்தர் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் ஜெபம்.

தமிழில் 1689 விசுவாச அறிக்கை (திருத்திய பதிப்பு)

1995ல் தமிழில் 1689 விசுவாச அறிக்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதை இப்போது திருத்திய பதிப்பாக வெளியிடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பதிப்பில் சில கடினமான வார்த்தைகளுக்கு இலகுவான தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதும், முடிந்தவரை 17ம் நூற்றாண்டு ஆங்கில மூலத்தில் காணப்படும் விசுவாச அறிக்கையை ஒத்துக் காணப்படுமாறு கவனித்துக்கொள்ளுவதும் முக்கிய இலக்காக இருக்கிறது. இந்த இருபது வருட காலப்பகுதிகளில் விசுவாச அறிக்கை பல பதிப்புகளாக ஆங்கிலத்தில் வந்திருக்கின்றது. அதை எளிமைப்படுத்தி வெளியிடுவதில் பலர் அக்கறை காட்டியிருக்கிறார்கள். அவ்வாறு செய்யும்போது மூலத்தில் காணப்படுகின்ற அழுத்தமும், இறையியல் வார்த்தைகளின் பொருளும் படிப்படியாக உருமாறிவிடுகிற ஆபத்து இருக்கின்றது. விசுவாச அறிக்கை 17ம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டதோடு, அக்காலத்து வரலாற்று, இறையியல் சந்தர்ப்ப சூழ்நிலையின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும். ஆகவே, அந்தக் காலத்து நூலை 21ம் நூற்றாண்டின் இறையியல் சூழ்நிலையின் அடிப்படையில் வாசித்துப் பொருள்கொள்ளக் கூடாது. அது எழுதப்பட்ட காலத்து வார்த்தைகளுக்கான அர்த்தத்தையும், வரலாற்றுச் சூழ்நிலையையும் மனத்தில் இருத்தி விசுவாச அறிக்கையின் போதனைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே புதிய திருத்திய பதிப்பு வெளிவரவிருக்கிறது. திருத்திய பதிப்பில் அதிரடியான மாற்றங்கள் இல்லாமல் போனாலும், அவசியமான மாற்றங்கள் இருக்கப்போகின்றன. அத்தோடு, விசுவாச அறிக்கைக்கான வரலாற்று, இறையியல் அடிப்படையில் அமைந்த ஒரு பொதுவான சுருக்க விளக்கமும் இதில் வெளிவரும்.

திருமறைத்தீப வாசகர்கள்

திருமறைத்தீப வாசகர்கள் தென் தமிழகத்தில் அதிகரித்து வருவதாகத் தன்னிடம் பலரும் சொல்லியிருக்கிறார்கள் என்று பாளையங்கோட்டையைச் சேர்ந்த நண்பர் தனபால் தேவராஜ் சமீபத்தில் எனக்கு செய்தி அனுப்பினார். அவர் தீபத்தின் புதிய வாசகர். சீ.எஸ்.ஐ. குருக்களும், ஊழியக்காரர்களும், இறையியல் கற்று வரும் மாணவர்களும் இதழை வாசித்து சந்தோஷமடைந்ததாகவும் அதில் வெளிவரும் சத்தியங்களில் ஆர்வம் காட்டி வருவதாகவும் சொன்னார். ரேனியஸ் பற்றி நான் எழுதிய ஆக்கமும், இதழில் வந்திருக்கும் சத்தியத்தை விளக்கும் ஆழமான ஆக்கங்களும் தனக்கும், பலருக்கும் பெரும் பயனளித்து வருவதாகவும், நான் தொடர்ந்து அதிகம் எழுதவேண்டும் என்றும் என்னை ஊக்குவித்தார். சமீபத்தில் அவர் நாகர்கோவிலில் சீ.எஸ்.ஐ. புத்தகக்கடைக்குப் போயிருந்தபோது, வெளிநாட்டில் இருந்து வந்தவர்போல் தோற்றமளித்த ஒருவர் திருமறைத்தீபத்தைப் பற்றியும், நாம் வெளியிட்டிருக்கும் நூல்களைப் பற்றியும் அந்தக் கடையில் விசாரித்துக் கொண்டிருந்தாராம். அது அவருக்குப் பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியதாம். தேவராஜ் நாம் வெளியிட்டுள்ள நூல்கள் அனைத்தையும் பெற்று வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். சில வேளைகளில் எழுதத்தான் வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறபோது, இவரைப் போன்றோரிடம் இருந்து வரும் செய்திகளே என்னைத் தொடர்ந்து எழுத வைக்கின்றன.

நண்பர் தேவராஜைப் போலவே, வேலூரைச் சேர்ந்த நண்பர் கிங்ஸ்லியும் மத்தியக் கிழக்கு நாடான ஓமானில் திருமறைத்தீபத்தையும், நமது வெளியீடுகளையும் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மத்தியில் அறிமுகப்படுத்தி விநியோகித்து வருகிறார். அதற்காக இருநூறு கி.மீ. பிரயாணம் செய்யவும் அவர் தயங்குவதில்லை. அவர் திருமறைத்தீபத்தின் தீவிர வாசகர்களில் ஒருவர். அவர் மட்டுமல்லாமல் அவருடைய மனைவியும் பிள்ளைகளும் அவற்றை ஆர்வத்தோடு வாசித்து வருகிறார்கள். இதழும், நூல்களும் அநேகரைச் சென்றடைய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். முழுநேர அரசுப் பணியில் அவர் இருந்தபோதும் இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் அவருடைய வாஞ்சை அதீதமானது; தொற்று போன்றது. அவரிடம் பேசிப் பார்த்தால்தான் அது புரியும்.

சமீபத்தில் திருமறைத்தீபத்தையும், நமது வெளியீடுகளையும் பற்றி அறிந்துகொண்ட பிரான்ஸில் இருக்கும் ஒரு தமிழ்ச் சபை நமது வெளியீடுகள் அனைத்திலும் பல பிரதிகளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டது. அவற்றை சபையார் வாசிக்கும் ஏற்பாடுகளை அது செய்துவைத்திருக்கிறது. இதையெல்லாம் கேள்விப்படும்போது கர்த்தரின் செயல்களின் மகத்துவத்தை எண்ணிப்பார்க்கச் செய்கிறது. உண்மைதான், கருத்தோடு திருமறைத்தீபத்தை வாசிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகைக் கிறிஸ்தவர்கள் பல நாடுகளில் இருந்து வருகிறார்கள். இவர்கள் ஏனோதானோவென்று கடமைக்காக வாசிக்கிறவர்களாக எனக்குத் தெரியவில்லை. ஆர்வத்தோடும், சத்திய வாஞ்சையோடும் வாசிக்கின்ற அநேகரை நான் அறிந்திருக்கிறேன். அவர்கள் அடிக்கடி தொடர்புகொண்டு வருகிறார்கள். இவர்களில் பலருடைய வாழ்க்கையில் திருமறைத்தீபம் பெரும் சத்திய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது; இறையியல் நம்பிக்கைகளில் மட்டுமல்லாது, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது. அதற்கு மேல் ஓர் இதழுக்கு என்ன தேவை? பொதுவாகத் தமிழிலக்கியத்துக்கு சிற்றிதழ்கள் செய்து வந்திருக்கும், செய்து வரும் பணியைக் கிறிஸ்தவத்திற்கு திருமறைத்தீபம் செய்து வருவதாக அறிகிறேன். கர்த்தருக்கே எல்லா மகிமையும்!

ரேனியஸ் வாழ்க்கை வரலாறு – தனபால் தேவராஜ், விலை ரூபாய் 150/-

தனபால் தேவராஜ் “ரேனியஸ் வாழ்க்கை வரலாறு” என்ற நூலை வரைந்திருக்கிறார். அதுபற்றி நான் ஏற்கனவே ரேனியஸ் பற்றிய “நெல்லை கண்ட அப்போஸ்தலன்” எனும் ஆக்கத்தில் இதழில் விளக்கியிருந்தேன். இப்போது, என் ஆலோசனைகளை ஏற்று, நூலுக்கான ஆதார நூல்களின் பட்டியலைத் தந்து மறுபடியும் அந்த நூலை வெளியிட்டிருக்கிறார் தேவராஜ். முதல் வெளியீட்டில் ஆதார நூல்களில் பட்டியல் இருக்கவில்லை. இந்நூலில் ரேனியஸ் உருவாக்கியதும், பணியாற்றியதுமான 406 சபைகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. நூலின் விலை ரூபாய் 150. சி.எஸ்.ஐ. புத்தகக் கடைகளில் நூலைப் பெற்றுக்கொள்ளலாம்.

வாழ்த்துரை, அணிந்துரை, கருத்துரை என்று பல சி.எஸ்.ஐ. முக்கியஸ்தர்கள் அளித்திருந்த அநாவசியக் குறிப்புகளை நூலில் இருந்து அகற்றிவிடும்படியும் அவருக்கு நான் ஆலோசனை தந்திருந்தேன். சி.எஸ்.ஐ. ஊழியக்காரராக அவரிருப்பதால் அவற்றை நூலில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கிருந்திருக்கிறது. என்ன செய்வது, இதைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். நூலை வாங்கும் வாசகர்கள் அந்த மனிதர்களின் குறிப்புகளை ஒதுக்கிவிட்டு நூலை மட்டும் வாசியுங்கள் என்று மட்டுந்தான் என்னால் சொல்லமுடியும். ரேனியஸ் போன்ற விசுவாசமும், வைராக்கியமுள்ள தேவ ஊழியருடைய நூலுக்கு அணிந்துரை அளிக்க ஒருவருக்குத் தகுதி வேண்டும். குறைந்தது, ரேனியஸ் விசுவாசித்த சீர்திருத்த இறையியல் கோட்பாடுகளில் வாஞ்சையும், நம்பிக்கையும் ஒருவருக்குத் தேவை. அத்தகைய நம்பிக்கையுள்ள ஒரு சி.எஸ்.ஐ. முக்கியஸ்தராவது இருக்கிறார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. தனபால் தேவராஜின் நூல் சி.எஸ்.ஐ. சபையைச் சேர்ந்தவர்களைச் சிந்திக்க வைக்குமானால் கர்த்தருக்கே எல்லா மகிமையும்.

அத்தோடு இப்புதிய பதிப்பில் ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது. பதினைந்தாம் பக்கத்தில் கத்தோலிக்க மத சமூக சேவையாளராகப் பணியாற்றி மறைந்த அன்னை தெரேசாவின் குறிப்பு தரப்பட்டிருக்கிறது. இது யார் விட்ட தவறு என்று தெரியவில்லை. ஒரு கிறிஸ்தவ நூலில் இத்தகைய தவறு நேரக்கூடாது. கத்தோலிக்க மதமும், கிறிஸ்தவமும் ஒன்றல்ல. தன்வாழ்நாள் முழுதும் அன்னை தெரேசா கத்தோலிக்கராகவே இருந்து மறைந்தவர்; மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் அடையவில்லை. மதங்களைப் பற்றி அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “நான் எல்லா மதங்களையும் நேசிக்கிறேன் . . . மக்கள் நல்ல இந்துக்களாகவும், நல்ல இஸ்லாமியர்களாகவும், நல்ல புத்தமதத்தவர்களாகவும் மாறினால் அங்கே ஏதோ வளர்கிறதென்றுதான் அர்த்தம்; எல்லோருமே ஒரே கடவுளோடுதான் தொடர்புகொள்கிறார்கள்.” இதை ஒரு கிறிஸ்தவன் சொல்லுவானா? இதையும்விட மேலும் மோசமான நம்பிக்கைகளையும் அன்னை தெரேசா கொண்டிருந்தார். டிம் செல்லிஷ் இதைப்பற்றி விளக்கியிருப்பதை இணையத்தில் பின்வரும் பதிவில் வாசிக்கலாம். (https://www.challies.com/articles/the-myth-of-mother-teresa/).

நூலாசிரியரிடம் இதுபற்றி நான் விளக்கினேன். அவர் மிகுந்த தாழ்மையோடு நூல்கள் அனைத்திலும் ஒரு வெள்ளைப் பேப்பரை அந்தக் குறிப்பின் மேல் ஒட்டி இனி நூல்களை விற்கப்போவதாகச் சொன்னார். அந்தக் குறிப்பு அவருக்குத் தெரிந்து நூலில் வரவில்லையாம். நூலைத் தயாரிக்கத் துணை செய்தவர் இடத்தை நிரப்ப அதைப் போட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இருந்தபோதும் இத்தகைய தவறுகள் தவிர்க்கப்படுவது நல்லது.

சீர்திருத்த வெளியீடுகள், சென்னை

திருமறைத்தீபம் இதழையும், நமது ஏனைய வெளியீடுகளையும் சென்னையில் இருந்து இயங்கும் சீர்திருத்த வெளியீடுகள் பதிப்பகம் வெளியிட்டு வருகின்றது. அதன் நிர்வாகியாக சகோதரர் ஜேம்ஸ் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். பதினைந்து வருடங்கள் அச்சகத்துறையில் நல்ல அனுபவமுள்ள அவர், இப்போது சுயாதீனத் தொழிலாக அதைக் கணிப்பொறியில் செய்து வருகிறார். அத்தோடு திருச்சபைப் போதகராகவும் இருந்து வருகிறார். திருமறைத்தீபத்தை அச்சிட்டு விநியோகிப்பது முதல் ஏனைய நூல்களை அச்சுக்குத் தயாரித்து வெளியிடுவது முதலான சகல பணிகளும் அவருடைய மேற்பார்வையின் கீழேயே நடந்து வருகின்றன. அவருடைய பணிகளுக்குத் துணையாக அவர் பணியாற்றும் கிருபை சீர்திருத்த திருச்சபை (வில்லிவாக்கம், சென்னை) இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் அவசியமான ஒரு சில நூல்களையாவது கர்த்தரின் கிருபையால் வெளியிடுவது எமது நோக்கம். நாம் வெளியிடும் நூல்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் இவ்விதழில் தரப்பட்டுள்ள சீர்திருத்த வெளியீடுகளின் முகவரியோடோ அல்லது தொலைபேசி எண்ணோடோ தொடர்பு கொண்டு அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.

வரவிருக்கும் கிறிஸ்தவ இலக்கியங்கள்

எப்போதுமே வெளியிட வேண்டிய சில நூல்கள் அரைவாசிப் பணிகள் முடிந்த நிலையில் இருந்து வருவது வழக்கம். “சிக்கலான வேதப்பகுதிகள்” என்ற தலைப்பில் ஒரு நூலை எப்போதோ எழுதி முடித்திருக்கிறேன். அதில் மேலும் திருத்த வேலைகள் செய்யவேண்டியிருக்கிறது. திருச்சபை பற்றிய ஒரு நூலும் விரிவாக்க வேண்டிய நிலையில் இருக்கின்றது. வெளிப்படுத்தல் விசேஷத்திற்கான விளக்கவுரையாக ஒரு நூலும் அரைவாசிப் பணிகள் முடிந்த நிலையில் இருக்கின்றது. பல வருடங்களாக அச்சிலில்லாமல் இருந்து வரும் பத்துக்கட்டளைகள் நூலையும் விரிவாக்கி வெளியிடும் திட்டம் இருக்கிறது. கர்த்தரின் பிரசன்னத்தை விளக்கி ஒரு சிறு நூலை தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுத்திருந்தேன். அதையும் விரிவாக்கி வெளியிடும் எண்ணம் இருக்கிறது. இவற்றிற்கு முதலிடம் தந்து முடித்து அச்சிட வேண்டும் என்ற ஆதங்கத்தோடு பல வேலைகளுக்கும் மத்தியில் நேரத்தைக் கொடுத்து வருகிறேன். அச்சில் இல்லாத ஒரு சில நூல்களும் மறுபதிப்பு செய்யப்படுகின்றன. முக்கியமாக, திருமறைத்தீபத்தின் எட்டாவது தொகுதி அடுத்த வருடம் வெளிவரும். இம்மட்டும் நம்மை வழிநடத்தியிருக்கும் கர்த்தருக்கே எல்லா மகிமையும். இவ்விலக்கியப்பணியில் என்னோடிணைந்து உழைப்பவர்களுக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

ரேனியஸின் தமிழ்வேத மொழிபெயர்ப்பு

ரேனியஸின் புதிய ஏற்பாட்டுத் தமிழ் மொழிபெயர்ப்பைப் பதிவிறக்கம் செய்து வாசித்தேன். அன்றிருந்த பெப்ரீஸியஸின் மொழிபெயர்ப்பைவிட இது சிறந்தது என்பது பரவலாக இருந்து வரும் கருத்து. இருந்தபோதும் ரேனியஸின் மொழிபெயர்ப்பும் அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்து வந்த தமிழ் வார்த்தைகளையும், நடையையுமே கொண்டிருக்கிறது. அப்போதிருந்தவர்களுக்கு ரேனியஸின் மொழிபெயர்ப்பு இலகுவாக வாசித்துப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த 21ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்ற தமிழில் அது இல்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது. அன்றைய தமிழ் அளவுக்கு மீறி வடமொழியான சமஸ்கிருத மொழியைத் தழுவிக் காணப்பட்டது. அதுவே அன்று கற்றவர்கள் பயன்படுத்திய மொழிநடை. அன்றைய வார்த்தைகளை இன்றைய தமிழ் சமுதாயம் விளங்கிக்கொள்ளத் தடுமாறும். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாகப் பெரும்பாலும் வடமொழியைத் தவிர்த்துத் தனித் தமிழில் எழுதவும் பேசவும் பழகி வந்திருக்கிறோம். வேதம் இன்று மொழிபெயர்க்கப்படுமானால் இன்று நாம் பேசி, எழுதப் பயன்படுத்தும் நடையிலேயே அது இருப்பது அவசியம். அதுவும் மூலமொழிகளைத் தழுவியதாகத் தவறுகளற்றதாக அது அமைந்திருக்கவேண்டும். ஆகவே, ரேனியஸின் மொழிபெயர்ப்பு தமிழ் வேதம் பற்றிய ஆய்வுகளுக்கு இன்று நிச்சயம் உதவும்; பொதுவான சபைப் பயன்பாட்டிற்கும், வாசிப்புக்கும் இன்று பயனுள்ளதாக இருக்காது. இப்போது பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய திருப்புதலும் அதேநிலையில் இருப்பதுதான் கிறிஸ்தவர்கள் அனுபவித்து வரும் துன்பமாக இருக்கிறது. கிறிஸ்தவர்களல்லாதவர்கள் அதை வாசிக்கும்போது கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருக்கும்.

மறுமொழி தருக