தயாரித்துப் பிரசங்கம் செய்தல்

பெரும்பாலான தமிழ் பிரசங்கிகள் பிரசங்கங்களைத் தயாரித்துப் பிரசங்கம் செய்வதில்லை. அவர்கள் தயாரித்துப் பிரசங்கம் செய்வதை ஆவிக்குரிய செயலாகக் கருதுவதில்லை. ஆவியிருக்கிறவன் ஆவியானவரிடம் இருந்து நேரடியாகவே பிரசங்கத்தைப் பெற்றுக்கொள்ளும் ஈவைக் கொண்டிருப்பதாக அவர்கள் மிகத் தவறாக எண்ணி வருகிறார்கள். இது பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளைப் பற்றியும், பிரசங்கப்பணி பற்றியும் தெளிவான இறையியல் நம்பிக்கைகளைக் கொண்டிராததால் ஏற்படும் விளைவு. இதனால் பிரசங்கம் தமிழினத்தில் மிகவும் கீழான நிலையில் இருந்து வருவதை வாசகர்கள் அறிவார்கள். ஐந்து நிமிடம் ஒரு தமிழ்ப் பிரசங்கத்தைக் கேட்டாலே அது தயாரிக்கப்பட்ட பிரசங்கமா இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரையில் கவனத்தோடு தயாரிக்கப்பட்டுச் செய்யப்படும் பிரசங்கங்கள் மட்டுமே ஆவியானவரின் ஆசீர்வாதத்தைக் கொண்டிருக்கும் பிரசங்கங்கள். அத்தகைய பிரசங்கங்களைச் செய்வதற்குப் பயன்படுத்தவேண்டிய பத்துக் குறிப்புகளை நீங்கள் இந்த ஆக்கத்தில் வாசிக்கலாம். ஜெபத்தோடு இவற்றைப் பின்பற்றுகிற பிரசங்கி வீண்போக முடியாது. உங்கள் பிரசங்கங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமானால் இவற்றைப் பின்பற்றி உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்வதோடு, ஆத்துமாக்களுடைய இருதயங்களுக்கும் பாதுகாப்பளியுங்கள்.

1. வேதம் தெரிந்திருக்க வேண்டும் (You must know your Bible).

ஒரு பிரசங்கியாக இருந்தால் கண்டிப்பாக வேதத்தில் நல்லறிவு இருக்க வேண்டும். நீங்கள் ஒரு போதகராக இருந்தால் வேதத்தைக் கற்றுத் தேர்ந்திராமல் இருப்பது மிகவும் ஆபத்தானதாகும். உங்களுக்கு ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியர் அளவுக்கு மட்டுமே வேத அறிவு இருக்கக் கூடாது. அதற்கு மேலாக வேதம் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக நீங்கள் மிகவும் கடினமாக உழைத்து அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதைப் பெற்றுக்கொள்ள முதலில் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் விசேஷம் வரையும் தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும். நாம் சொந்தமாக வாசித்து அதிலிருந்து குறிப்புகள் எடுத்துக்கொள்ள வேண்டும். குழப்பமான பகுதிகளுக்குப் பிறகு விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியம். அவ்வாறாக பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு எனத் தொடர்ந்து வாசித்து வேத அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு நூலிலும் உள்ள விசேஷ அம்சங்கள், அதன் ஆசிரியர், எழுதப்பட்ட காலம், அந்த நூலின் பின்னணி என ஒவ்வொன்றைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். இவையெல்லாம் தெரியாமல் நாம் பிரசங்கம் செய்யப் போகக் கூடாது. ஏனெனில் நாம் எந்தப் பகுதியிலிருந்து பிரசங்கித்தாலும் நமக்கு எல்லா பகுதிகளிலிருந்தும் குறிப்புகள் தேவைப்படுகிறது. ஆகவே நமக்கு வேதத்தில் நல்லறிவு அவசியம்.

வேதம் தெரியாமல் பிரசங்கிப்பவர்கள் அநேகர் இன்றைக்கு நம்மினத்தில் உள்ளனர். வேதம் தெரியாமல் இறையியல் ஆசிரியர்களாகக் கூட இருக்கிறார்கள். வேதம் கர்த்தருடைய வார்த்தை, அதோடு நாம் விளையாடக்கூடாது. வேதத்தை நாம் எப்போதும் தெளிவாகப் போதிக்க வேண்டும். ஏனெனில் வேதப்பிரசங்கம் கொடுக்கிற பொழுது பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாம் நாடுகிறோம், ஜெபிக்கிறோம். அவரும் அதற்கு உதவி செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். நாம் வேதம் தெரியாமல் போதிக்கும் பொழுது, நாம் சொல்லுகிறது பொய் என ஆவியானவர்அறியாமலிருப்பாரா? திரித்துவத்தின் மூன்றாவது ஆழ்த்தத்துவமாகிய ஆவியானவர் நமக்கு எப்படி உதவி செய்வார்? நிச்சயமாகச் செய்யமாட்டார். நமக்கு எதுவும் தெரியாமல் இருந்து, ஜெபம் செய்து பிரசங்கிக்கும் பொழுது பரிசுத்த ஆவியானவர் அற்புதமாக அதைப் பிரசங்க மேடையில் கொடுப்பார் என நாம் நினைக்கக்கூடாது. அப்படி அநேகர் நினைத்து பிரசங்கம் செய்வதுண்டு. ஆனால் ஒருபோதும் ஆவியானவர் அவ்வாறு செய்வதில்லை. அப்படிச் செய்தால் அவர் பொய்யராக மாறிவிடுவார். அவர் பரிசுத்தமான ஆவியானவர்; உழைப்புக்கு மதிப்புக் கொடுப்பவர். ஆகவே அவர் நமக்குத் தெரியாததைப் பிரசங்கத்தில் நமக்குத் தெரியப்படுத்தமாட்டார். ஆகவே முதலாவதாக, வேதம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அந்த அறிவைப் பெற்றுக்கொள்ள சகல முயற்சிகளிலும் நீங்கள் ஈடுபட வேண்டும்.

சபைகளில் பிரசங்கம் செய்பவர்களை வேதத்தில் நல்லறிவு பெறும்படியாக அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவர்கள் ஞாயிறு வகுப்புகள் எடுத்தாலும் சரி, வேதப்பாடம் எடுத்தாலும் சரி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் வேத அறிவைப் பெற்றுக்கொள்ள என்ன முயற்சி எடுக்கிறார்கள், அதற்காக அவர்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதைப் போதகர்கள் அறிந்திருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் தவறான நபர்களை வளர்த்து விட்டுவிடுவீர்கள். ஏனெனில் அவர்கள் சபையில் பிரசங்கித்த உடனேயே சிலர் விபரம் தெரியாமல் அவர்களைப் பாராட்டுவார்கள், உடனே அவர்களுடைய ஆர்வம் அதிகமாகிவிடும். வாலிபர்களிடம் அந்த ஆர்வம் அதிகமாகக் காணப்படும். அப்படிச் செய்வதால் பிரசங்கிப்பவர்களுக்கும் ஆபத்து, அதைக் கேட்கும் ஆத்துமாக்களுக்கும் ஆபத்தாக முடியும். ஆகவே அவர்களை முதலாவது படிக்க வைக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்களை ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவர வேண்டும். அவர்களை ஒழுங்காகப் படிக்க வைத்துப் பயிற்சியளிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வேத அறிவில் வளருவார்கள். அவ்வாறு இல்லையெனில் அவர்களைப் பிரசங்கிக்க விடக்கூடாது.

2. வேதம் விளக்குகின்ற இறையியல் கல்வியைப் பெற்றிருக்க வேண்டும்.

இன்றைக்கு இறையியல் என்றால் அநேக சபைகள் ஏதோ கெட்ட வார்த்தையைக் கேட்டதுபோல் நடந்துகொள்கிறார்கள். அதைப் பெற்றுக்கொள்ளும் இயலாமை இருப்பதால் அதைத் தள்ளிவைத்து விடுகிறார்கள். அநேக இடங்களில் தலைப்பின் அடிப்படையில் பிரசங்கம் செய்வதற்கும், ஊக்குவிப்புப் பிரசங்கம் செய்வதற்கும், உலகத்தைப் பற்றிப் பேசுவதற்கும், சமுதாய சீர்திருத்தம் பற்றிப் பேசுவதற்கும் காரணம் வேத இறையியல் தெரியாமல் இருப்பதுதான். வேதத்தில் இறையியல் ஏராளமாக இருக்கிறது; அதில் அது நிறைந்து காணப்படுகிறது. ஆங்கிலத்தில் அது Theology என்று அழைக்கப்படுகிறது. அதற்குப் பொருள் என்னவெனில் கடவுளைப் பற்றிய போதனைகள் (The study of God). இறையியல் கட்டாயம் அவசியம். அதை அடைய நல்ல தரமான புத்தகங்களை வாங்கி வாசிக்க வேண்டும். உதாரணத்திற்கு நாம் தமிழில் வெளியிட்டுள்ள இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கை வாங்கி வாசிக்கலாம். அந்த புத்தகத்தில் இரட்சிப்பைக் குறித்த அனைத்துப் போதனைகளும் படிமுறையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு என்கிற தலைப்பில் ஆரம்பித்து மகிமையில் சென்று முடிகிறவரை ஒவ்வொன்றையுங் குறித்துத் தெளிவாக விளக்கப்பட்டுள்ள நூலது. மறுபிறப்பு, பரிசுத்தமாகுதல், நீதிமானாக்கப்படுதல், மகவேற்பு என அனைத்தையும் தெளிவாக அறிந்துகொள்ள இதுபோன்ற இறையியல் நூல்களை வாங்கி வாசிக்க வேண்டும். இவையெல்லாம் வேதப்பிரசங்கத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய போதனைகளாகும். பவுல் தன் நிருபங்களில் இறையியலைக் கையாண்டுள்ளார். ஆகவே இறையியலைப் படித்துக் கற்றுக்கொள்ளாவிட்டால் நாம் பிரசங்கங்களில் இறையியலற்ற வெறும் ஊக்குவிப்பு செய்திகளையும், வாக்குத்தத்தங்களையும் மட்டுமே கொடுத்துக்கொண்டிருப்போம்.

இன்று பழைய ஏற்பாட்டில் மறுபிறப்பு இல்லையென்று பிரசங்கம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். சுவிசேஷக் கூட்டங்களில் மறுபிறப்பைக் குறித்துப் பேசுகிறவர்களையே காணமுடிவதில்லை. அதேபோன்று மனந்திரும்புதலைப் பற்றியும் அவர்கள் போதிப்பதில்லை. இந்த வாரம் நான் கொடுத்த பிரசங்கத்தால் சிலர் பாதிக்கப்பட்டு சில நாட்களாகவே அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர், உங்கள் தைரியத்தைப் பாராட்டுகிறேன் என்றார். இன்று நியாயத்தீர்ப்பைப் பற்றியும், நரகத்தைப் பற்றியும் எவரும் எச்சரிக்கை செய்வதில்லை, நீங்கள் தைரியமாக அதைச் செய்தீர்கள் என்றார். அதற்கு நான் அது பற்றி வசனத்தில் காணப்பட்டால் பிரசங்கித்துத்தானே ஆகவேண்டும் என்று பதிலளித்தேன். அவை பற்றிய இறையியல் உண்மைகள் தெரியாமல் அந்தப் பிரசங்கத்தை நான் அளித்திருக்க முடியாது.

ஆகவே இறையியலைக் கற்றுக்கொள்ள வேண்டும். அது மிகவும் அவசியம். நாம் சமீபத்தில் வெளியிட்டுள்ள பியூரிட்டன்களின் பார்வையில் மனந்திரும்புதல், பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் போன்ற புத்தகங்கள் மிகவும் அவசியமான இறையியல் நூல்கள் ஆகும். அவற்றை வாங்கி வாசித்து அவற்றிலுள்ள சத்தியங்களை அறிந்து கொள்ளுங்கள். திரித்துவத்தை நாம் புதிய ஏற்பாட்டில் மட்டுமல்லாது பழைய ஏற்பாட்டிலும் பார்க்கிறோம். இந்நூல்களை முறைப்படுத்தப்பட்ட இறையியல் போதனைகள் என்று சொல்லலாம். அவை நமக்கு மிகவும் அவசியமானவை. வேதத்தில் காணப்படும் ஒவ்வொரு இறையியல் போதனையைப் பற்றியும் நாம் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல் என இரட்சிப்பைக் குறித்த ஒவ்வொரு சத்தியத்தையும் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல் நாம் வேதத்தில் ஒரு வசனத்தையும் கையாள முடியாது. நாம் சரியாக முறைப்படுத்தப்பட்ட இறையியலைக் கற்றுக்கொள்ளாவிட்டால் இரட்சிப்பைப் பற்றிப் பொதுவாக விளக்குவோமே தவிர நாம் சொல்வதில் எந்தப் பொருளும் இருக்காது. மீட்பைக் குறித்த உண்மைகளைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். மீட்பிற்காக இயேசு செய்திருக்கிற பணிகள் என்ன, அவருடைய பணியின் மகத்துவங்கள் என்ன என்பதைக் குறித்த சத்தியங்களை அறிந்துகொள்ள வேண்டும். இதற்கு 1689 விசுவாச அறிக்கை நமக்கு மிகவும் உதவி செய்கிறது. அதிலுள்ள 32 அதிகாரங்களையும் திரும்பத் திரும்ப வாசித்து, ஆராய்ந்து படிக்க வேண்டும். அதைத் தமிழில் நாம் வெளியிட்டுள்ளோம். அதனை இன்னும் விரிவாகவும் கற்றுக்கொள்ளலாம். ஆகவே இறையியல் போதனைகள் நமக்கு மிகவும் அவசியம். இறையியல் தெரியாமல் ஒரு பிரசங்கி பிரசங்கம் செய்ய முடியாது. இதற்காக நேரமும் உழைப்பும் கட்டாயம் தேவை. ஒன்றை மட்டும் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், ஒருவன் ஊழியத்திற்காக அழைக்கப்பட்டிருந்தால் இவற்றை ஆர்வத்தோடு கட்டாயம் கற்றுக் கொள்வான். மேலும் ஒருவர் மெய்யாகவே அழைப்பட்டிருக்கிறாரா என்பதை அறிந்து கொள்ளவும் இது உதவும். யாருக்கு சத்தியத்தில் வளரவும், புத்தகங்களை வாங்கிப் படிக்கவும், உழைக்கவும் மனதில்லையோ அவர்கள் நிச்சயம் ஆண்டவரால் அழைக்கப்படவில்லை.

ஞாயிற்றுக்கிழமை வருமுன் சனிக்கிழமையில் ஒரு ஒருமணிநேரம் மட்டும் எதையாவது துழாவி விட்டு பிரசங்கத்தில் சாட்சி சொல்லிச் சமாளித்துவிட்டு வந்துவிடலாம் என்கிற எண்ணம் ஒருவருக்கிருந்தால் அதற்கெல்லாம் ஒரே காரணம், அவர் ஆண்டவரால் பிரசங்கப் பணிக்கு அழைக்கப்படவேயில்லை. இப்போது எனக்கு உடல்நிலை சரியாக இல்லை, இருந்தபோதும் ஒருநாளைக்கு மூன்று புத்தகங்களை ஒரே நேரத்தில் வாசித்துக்கொண்டு வருகிறேன். ஒரே புத்தகத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது சலிப்பு ஏற்படலாம், ஆகவே மூன்று புத்தகங்களையும் மாறி மாறி வாசித்து வருகிறேன். என்னுடைய படிப்பு மேஜையின் மீது வாசித்து முடிக்க வேண்டிய புத்தங்களை அடுக்கி வைத்துள்ளேன். மேலும் அதிலிருந்து குறிப்புகளை எடுத்துக் கொள்கிறேன். யாரோ எனக்குப் பின்னால் இருந்து இதையெல்லாம் செய்கிறேனா, என்று கவனிப்பதற்கு யாருமில்லை. ஆனாலும் அத்தகைய ஆர்வமும், உழைப்பும் எங்கிருந்து வருகின்றன? கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் ஒரு பிரசங்கிக்கு அடிப்படையிலேயே இருக்க வேண்டும். மெய்ப் பிரசங்கி இறப்பதற்கு முன்பு வரை கற்றுக்கொள்வான். தெரிந்திருக்கும் விஷயத்தையே இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளப் பார்ப்பான். அது அழைப்பு இருந்தால் மட்டுமே வரும். அழைப்பு இல்லாமல் அதை நினைத்தும் பார்க்க முடியாது. அதை யாரும் ஒருவனில் திணிக்கவும் முடியாது. அது ஆண்டவரிடத்தில் இருந்து வந்தாக வேண்டும்.

நாம் இந்த ஊழியத்திற்கு அழைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் கணக்குக் கொடுத்து வாழவேண்டும். எந்தவிதமாக நாம் பிரசங்கம் செய்து ஆத்துமாக்களை வளர்த்திருக்கிறோம் என்பதைப்பற்றியெல்லாம் கணக்கு கொடுக்க வேண்டும். உணவு தாயாரிப்பதற்கு ஒரு முறை இருப்பதுபோல, வாசிப்பு மூலம் நம்மை நாம் தாயாரித்துக்கொள்கிறோம். சத்தியங்களை வாசித்து, அவற்றைக்குறித்து குறிப்பு எடுப்பதன் மூலம் இன்னும் நாம் நம்மை வளர்த்துக்கொள்கிறோம். அதன் மூலமாகத்தான் பங்கு பங்காகவும் வகை வகையாகவும் ஆத்துமாக்களுக்குப் போதிக்கப் போகிறோம். உண்மையாகவே அழைப்பு இருந்தால் நமக்குக் கிடைக்கின்ற நேரத்தையெல்லாம் கவனமாகப் பயன்படுத்திக் கற்றுக்கொள்ளப் பார்ப்போம். எங்கிருந்தாலும் நல்ல புத்தகங்களைத் தேடி வாங்கி வாசிக்க வேண்டும் என்கிற இருதயம் நமக்கிருக்கும். எந்தப் பிரசங்கி இறையியலை அலட்சியம் செய்கிறாரோ அவருடைய பிரசங்கத்தில் எதுவும் இருக்காது. திரும்பத் திரும்ப ஒரே காரியத்தைத்தான் அவரால் சொல்ல முடியும்; கேட்பதற்கும் அது சுவையாக இருக்காது, சிந்திப்பதற்கு அதில் விஷயம் இருக்காது, கற்றுக்கொள்ள ஒன்றுமே இருக்காது. அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? ஆத்துமாக்கள் எப்படி இரட்சிக்கப்பட முடியும்? நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், மகிமையடைதல் போன்ற விஷயங்களை அவர்கள் மேலோட்டமாக மேய்ந்துவிட்டுப் போவார்களே தவிர பிரசங்கத்தில் தெளிவான போதனைகளோ, விளக்கமோ இருக்காது. வெறுமனே அந்த வார்த்தைகளைத் தெரிந்து வைத்திருப்பதினால் என்ன பயனிருக்கிறது? அதற்கான அர்த்தங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றைக் கோர்வையாக விளக்கிச் சொல்லுவதற்கான திறமையைப் பெற்றுக்கொள்ள ஆழமாகப் படிக்க வேண்டும்.

ஆங்கில நூல்களை வாசிக்க இயலாதவர்களுக்குத் துணை செய்வதற்காக தமிழில் திருமறைத்தீபம் நூலை எட்டுப் பாகங்களாக வெளியிட்டுள்ளோம். அவற்றை வாங்கிக் கடினமாக உழைத்து வாசியுங்கள். இறையியல் சத்தியங்கள் அனைத்தும் அதில் அடங்கியிருக்கின்றன. ஆங்கிலம் தெரியாத தமிழ் போதகர்களுக்குத் தேவையான அனைத்துச் சத்தியங்களும் அந்தத் தொகுதிகளில் காணப்படுகின்றன. அத்தொகுதிகள் ஒரு முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலகம். நமக்கு அனைத்து இறையியல் போதனைகளும் தெரிந்திருக்க வேண்டும். அவையெல்லாம் தெரிந்திருந்தால் மட்டுமே எந்த வசனத்தை எடுத்தாலும் அந்த வசனத்திற்கு விளக்கம் கொடுக்க முடியும். ஒவ்வொரு வசனத்தையும் அழகாக விளக்க இந்த சத்தியங்களெல்லாம் தேவை. ஊழியத்திற்கு வருகிறவன் வாழ்நாள் முழுவதும் சத்தியங்களைக் கற்றுக்கொள்ளவே வாஞ்சையாக இருப்பான். பிரசங்கம் தயாரிப்பதற்கு மட்டும் படிப்பவர் பிரசங்கியாகவே இருக்க முடியாது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வருடமும் என்ன வாசித்து இருக்கிறோம்? வாசித்ததில் எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

என்னுடைய நூலகத்தில் அநேக புத்தங்கள் இருக்கின்றன. அனைத்தும் இன்றியமையாதவைகளாகவே உள்ளன. தேவையில்லாத புத்தகங்களை நான் வாங்கி வைப்பது கிடையாது. இருந்தபோதும் இன்னும் படிப்பதற்குத் தேவையான புத்தகங்களை செலவழித்து வாங்கியுள்ளேன். அது அவசியமானதொன்றாக இருக்கிறது. காரணம் புதிய அணுகுமுறைகளைக் கற்றுக்கொள்ளலாம், அநேக சத்தியங்களை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ளலாம். துல்லியமாகச் சத்தியங்களில் தேர்ச்சி அடைய வாசிக்கும் பழக்கம் இருந்தால் மட்டுமே முடியும். இறையியல் தெரியாமல் பிரசங்கித்தால் எப்படி இருக்கும்? சரியான மற்றும் தேவையான பொருட்களைக் கொண்டு தயாரிக்காத உணவு போலவே பிரசங்கம் இருக்கும். உணவில் தேவையான அனைத்துப் பொருட்களும் சரியான அளவைக் கொண்டு தயாரிக்க வேண்டும். அப்பொழுதுதான் அது சாப்பிடுவதற்குச் சுவையாக இருக்கும். அது போலவே வேதப்பிரசங்கம் காணப்பட வேண்டும். அனைத்தையும் கற்றறிந்து பிரசங்கிக்க வேண்டும்.

3. வேத விளக்க விதிகளை அறிந்திருக்க வேண்டும்.

வேதமானது வேத விளக்க விதிகளைத் தனக்குள்ளாகவே கொண்டிருக்கிறது. அநேக பிரசங்கிகளுக்கு அந்த விதிகள் தெரிவதில்லை. சற்று தெரிந்திருப்பவர்களும் அவற்றை உதாசீனம் செய்து விடுகிறார்கள். இதனை ஆங்கிலத்தில் Principles of Interpretation என்று அழைக்கிறார்கள். A.W. பிங்க் ஆங்கிலத்தில் இதற்கென ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அது வாசிப்பதற்கு இலகுவாக இருக்கும். அந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு விதிகளையும் விளக்கமாக எழுதியிருக்கிறார். திருமறைத்தீபத்தில் அதை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறோம்.

வேதத்தில் ஒரு வசனத்தை விளங்கிக்கொள்ள அதற்கென விதிகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகளை அறிந்திருக்கும்போது மட்டுமே அந்த விதிகளைப் பயன்படுத்தி வசனங்களுக்கான சரியான அர்த்தத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக ஒரு சங்கீதத்தை எடுத்துக் கொள்வோம். முதலில் அந்தச் சங்கீதம் எந்த இலக்கிய வகையைச் சார்ந்தது என்று ஒரு நன்கு கற்றறிந்த பிரசங்கி மட்டுமே ஆராய்வார். ஏனென்றால் சங்கீதம் வரலாறு அல்ல. ஆதியாகமம் ஒரு வரலாற்று நூல். ஆனால் சங்கீதம் பாடல் புத்தகம். வரலாறு என்பது நடந்த காரியத்தை விவரிப்பது. படைப்பைப பற்றி வாசிக்கின்றபோது நடந்த நிகழ்வை அது அப்படியே விபரிக்கின்றதைக் கவனிக்கிறோம். அதைச் சந்தேகிக்கவேண்டிய அவசியமில்லை. ஆண்டவரே அதை விளக்கியிருக்கிறார். ஆனால் சங்கீதம் என்பது ஒரு பாடல். இது இன்னொரு இலக்கிய வகையைச் சார்ந்தது; வித்தியாசமானது. சங்கீதம் பாடல் வகையைச் சார்ந்ததால் அதற்கென்று இலக்கணம் இருக்கிறது. அது இராகத்தோடு பாடக்கூடியதாக இருக்கும். ஒவ்வொரு வரியும் மற்றொன்றோடு பொருந்தி வருகிறதாக இருக்கும். முதல் வரியில் வந்த வார்த்தைகளே இரண்டாவது வரியிலும் திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கும். வேத விளக்க விதிமுறைகள் தான் அதைப் புரிந்துகொள்ள உதவும். ஒரு நூல் வரலாற்று இலக்கியமா, பாடல் இலக்கியமா, அடையாளமொழி வகையைச் சார்ந்ததா, உவமையா, உரைநடைப் பகுதியா என்பதை எல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்தப் பகுதிகளுக்கெல்லாம் சில இலக்கணங்கள் இருக்கின்றன. அந்த இலக்கணங்களைப் புரிந்துகொள்ள வேத விளக்க விதிகள் மட்டுமே பயன்படுகிறது. வேத விளக்க விதிகளை அறிந்து பயன்படுத்தும்போது பிரசங்கத்தில் அநேக ஆபத்துகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

சங்கீதங்கள் பாடலாக இருப்பதால், முதலாவது சொன்னதை இரண்டாவது இன்னொருவிதத்தில் விபரிக்கிறது என்பதை அறியாமல், அது இரண்டு விஷயங்களைச் சொல்லுகிறது என்று வேத விளக்க விதிகளை அறிந்திருக்காத ஒருவர் தவறாக விளக்கம் கொடுத்துவிடுவார். அது முற்றிலும் தவறானது. ஒரு உவமையை எடுத்துக்கொண்டால், அது ஒரு கதையின் மூலம் சத்தியத்தை விளக்கக்கூடியதாக இருக்கிறது. வேதவிளக்க விதியை அறிந்திராத ஒருவர் உவமையை எப்படி விளக்குவதென்று தெரியாமல் அந்தக் கதையை உண்மையென நினைத்து விளக்க ஆரம்பித்து விடுவார். உவமை என்பது ஒரு கதை. கதையின் மூலமாக சொல்லப்படுகின்ற சத்தியத்திற்கு மட்டுமே விளக்கம் கொடுக்கவேண்டுமே தவிர அந்தக் கதையில் வருகிற எல்லாப் பகுதிகளுக்கும் விளக்கம் கொடுக்க கூடாது என்று வேத விளக்கவிதிகள் கூறுகின்றன. ஆகவே வேத விளக்க விதிகள் தெரியாமல் வசனங்களைப் புரிந்துகொள்வது கடினம். தமிழில் வில்பிரட் கர்ட் என்பவர் எழுதிய திருமறையை விளக்கும் முறை என்ற நூல் மிகவும் எளிமையாகவும் சுருக்கமாகவும் காணப்படுகின்றது. இன்றைக்கும் அச்சில் இருக்கிறதா, என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் இத்தகைய அநேக புத்தகங்கள் இருக்கின்றன.

வேத விளக்க விதிமுறைகளில் ஒன்று, ஒரு வசனத்தை எடுக்கும்போது அந்த வசனத்தில் எந்த சத்தியமுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்கிறோமா, உண்மையிலே அதை நாம் சரியாகத்தான் புரிந்துகொண்டுள்ளோமா என்பதை அறிய, வேதம் முழுவதும் ஏனைய பகுதிகளில் அதுபற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை வைத்துத்தான் அதை நாம் தீர்மானிக்க வேண்டும். முழு வேதத்தின் பல பகுதிகள் அதோடு ஒத்துப்போனால் அது சரியானது. மாறாக ஒத்துப்போகவில்லை என்றால் நாம் படித்துப் புரிந்திருப்பது தவறு என்கிற முடிவுக்கு வரவேண்டும். ஏனென்றால் வேதம் பொய் சொல்லாது. பவுல் சொன்னதை பேதுருவும், அதுபோல யோவானும், இயேசுவும் ஒப்புக்கொள்ளவேண்டும். நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறபோது நீதிபதி என்ன கேட்பார், சாட்சி யாரென விசாரிப்பார். முதல் சாட்சி, இரண்டாம் சாட்சி, மூன்றாம் சாட்சி என விசாரிப்பார். மூன்று பேரும் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக சாட்சி சொன்னால் நீதிபதிக்குத் தெரியும் என்ன தீர்ப்பு கொடுக்கவேண்டும் என்று. அல்லது மூவரும் ஒரேமாதிரி சொன்னால் அந்த வழக்கு வெற்றியாக முடியும். அதுபோலவே வேதமும். பவுல் சொன்னதையே பேதுருவும், யோவானும், இயேசுவும் சொன்னால் பவுல் சொன்னது சரியாக இருக்கும். வேத விளக்க விதிகள் நாம் தவறு செய்வதிலிருந்து நம்மைக் காப்பது மட்டுமல்ல, வேத சத்தியத்தைத் தெளிவாக விளங்கிக்கொள்ளவும் உதவி செய்கின்றன. இப்போது நான் விளக்கியது ஒரு விதியைத்தான். இதுபோன்று அநேக விதிகள் உள்ளன. ஆகவே வேத விளக்க விதிமுறை புத்தகங்களை வாங்கிப் படித்து வேதத்தை எப்படி விளக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அது மிகவும் அவசியமானது.

இதுவரை நாம் கவனித்திருக்கும் முதல் மூன்று குறிப்புகளும் பிரசங்கிகளுக்கு அடிப்படையாக நான் சொல்ல விரும்பிய ஆலோசனைகளாகும். அடுத்து வரும் நான்கு முதல் பத்துவரையுமுள்ள குறிப்புகள் ஒரு பிரசங்கத்தை நாம் எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பதைப் பற்றியது.

4. பிரசங்கம் தயாரிக்கின்ற போது ஜெபம் மிக அவசியம்.

பிரசங்கம் தயாரிக்கின்றபோது ஆரம்பம் முதல் பிரசங்கத்தைச் செய்து முடிக்கிறவரை ஜெப நிலையில் இருக்கவேண்டும். ஏனென்றால் இதற்கு ஆண்டவருடைய உதவி மிகவும் அவசியமானது. ஜெபம் செய்யாமல் இதை நாம் சரியானவிதத்தில் செய்து முடிக்க முடியாது. படிக்கிற போதும் ஜெபம் பண்ண வேண்டும், தயாரிக்கிற போதும் ஜெபம் பண்ணவேண்டும், தயாரித்த பின்பு மனதில் நிறுத்திக்கொள்ளவும் ஜெபம் பண்ணவேண்டும், பிரசங்க மேடையில் நிற்கிற போதும் ஜெப நிலையில் தொடர்ந்து பிரசங்கம் பண்ணவேண்டும், முடிந்த பிறகும் ஜெபிக்க வேண்டும். ஜெபம் மிகவும் அவசியம். அதன் மூலம் நாம் ஆவியானவரின் துணையை நாடுகிறோம். நாம் உழைக்காமல் ஆவியானவர் நமக்கு உதவி செய்யமாட்டார். பிரசங்கம் தயாரிக்கிற அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவர் துணை செய்கின்றார். வண்டி ஓடுகிற போது அச்சாணி மாதிரியிருந்து இந்தப் பிரசங்க ஊழியத்தில் அவர் நமக்கு உதவி செய்கிறார்.

5. வேத வசன உட்பொருள் விளக்கப் பயிற்சி.

இதனை ஆங்கிலத்தில் Exegesis என்று அழைப்பார்கள். ஒரு வசனத்தையோ அல்லது வசனப் பகுதிகளையோ எடுத்து அந்தப் பகுதியில் இருக்கிற வார்த்தைகளுக்கும் ஏனைய வார்த்தைகளுக்கும் உள்ள இலக்கண பூர்வமான தொடர்பு என்ன? அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிற விதம் எப்படிப்பட்டது? அந்த வார்த்தைகள் ஏனைய பகுதிகளில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன? வேதத்திற்கு வெளியில் (Secular field) அந்த வார்த்தை எப்படியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது? வேதத்தை எழுதியவரை வைத்து ஆவியானவர் அந்த வசனப்பகுதிகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்? அவற்றிற்கான இலக்கணபூர்வமான அர்த்தம் என்ன? வேதத்தின் அர்த்தம் என்ன? என்பதையெல்லாம் வைத்து அந்த வசனப்பகுதிகளைச் சரியான விதத்தில் புரிந்துகொள்ளச் செய்யும் பயிற்சிதான் வேத வசன உட்பொருள் விளக்கப் பயிற்சி. இதற்கு உதாரணமாகத் தமிழ் வேதத்தை எடுத்துக்கொண்டால் தமிழ் இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் வேதம் (பழைய திருப்புதல்) அநேக இடங்களில் சொதப்பலான மொழிபெயர்ப்பைக் கொண்டுள்ளது. ஏனென்றால் தமிழ் மொழி வித்தியாசமான மொழி. மூல மொழியான கிரேக்க எபிரேய மொழிகளிலிருந்து தமிழ் வேதம் மொழிப்பெயர்க்கப்படவில்லை. ஜேம்ஸ் அரசன் (1611) ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே அது சார்ந்திருக்கிறது. அநேக இடங்களில் அதில் மூல மொழிகளில் காணப்படும் அழுத்தங்கள் சரிவர மொழிபெயர்க்கப்படவில்லை. ஒரு காற்புள்ளியையோ அல்லது அரைப்புள்ளியையோ தவறாகப் பயன்படுத்தினால் அதன் அர்த்தமே மாறித் தவறான பொருளைக் கொடுத்துவிடும். ஆகவே தமிழ் வேதத்தைப் புரிந்துகொள்ள நல்ல ஆங்கில வேத நூலைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக ஒருவர் என்னிடத்தில் தமிழ் வேதத்தில் காணப்படும் ஒரு கடுந்தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் கேட்டார். அதை ஆங்கில வேதத்தில் பார்த்துதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு அர்த்தம், வெட்கமில்லாமல் என்பதாகும். வார்த்தைகளைப் புரிந்துகொள்ள நல்ல ஆங்கில வேதாகமத்தை பயன்படுத்துவது நல்லது. ஆகவே தமிழ் வேதத்தைப் பயன்படுத்திப் பிரசங்கம் செய்கிறவர்கள் அதில் மட்டும் தங்கியிருக்காதீர்கள், அது உங்களுக்கு முழுமையாக உதவாது.

நீங்கள் நல்ல ஆங்கில வேதத்தைப் பயன்படுத்த வேண்டும். அது ஏன் அவசியமென்றால் வேத உட்பொருள் விளக்கப் பயிற்சிக்கு அது மிகவும் உதவி செய்யும். வார்த்தைகளின் அர்த்தத்தை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எந்தவொரு வார்த்தையையும் ஊகம் பண்ணக்கூடாது. ஊகம் செய்வது தவறு. நம்முடைய மனம் என்ன சிந்திக்கிறதோ அதையே நாம் சரியென்று நினைத்துக்கொள்ளுவதே ஊகத்திற்குக் காரணம். வேத உட்பொருள் விளக்கப் பயிற்சி மிகவும் அவசியமானது. அதை நாம் பயன்படுத்தவில்லை என்றால் நமக்குதான் ஆபத்து. அதைத் தவிர வசனங்களை விளங்கிக்கொள்ள வேறு வழியே இல்லை. அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். மூல மொழியை ஆராய்ந்து வசனங்களின் அர்த்தங்களைப் புரிந்துகொள்வதற்கு வேத உட்பொருள் விளக்கத்தின் மூலம் முயற்சி செய்கிறோம். மூல மொழியே தெரியாத பட்சத்தில் ஆங்கில வேதாகமம் நமக்கு உதவும். மேலும் அதற்கு வேத அகராதி உதவும், ஒத்த வாக்கிய அகராதி உதவும். இவையெல்லாம் வேத உட்பொருள் பயிற்சிக்கு மிகவும் அவசியமானவை. ஒரு வேதபாடம் எடுத்தாலோ அல்லது பிரசங்கம் செய்தாலோ இது இல்லாமல் அவற்றைச் சரியாகச் செய்ய முடியாது. இது இல்லாமல் வேத வார்த்தையின் சரியான அர்த்தத்தைப் பெற்றுக்கொள்ள வேறுவழியே இல்லை. இதை உதாசீனப்படுத்தக்கூடாது.

6. முழுப் பிரசங்கத்தையும் எழுத வேண்டும்.

நாம் இதற்கு முன்பு பார்த்த குறிப்புகள் வரைக்கும் சரியாக செய்து முடித்து விட்டால், அடுத்ததாக நாம் எடுத்திருக்கிற குறிப்புகளை வைத்து முழு செய்தியையும் எழுதி முடிக்க வேண்டும். அது ஒரு நல்ல பயிற்சி. நம்மினத்துப் பிரசங்கிகளுக்கு அது ஒரு கௌரவக் குறைச்சலாக இருக்கிறது. அதை எழுதி வைத்து, பேப்பர்களை வைத்துப் பிரசங்கித்தால் மதிப்பு குறைவாக எண்ணுகிறார்கள். எதுவுமில்லாமல் பிரசங்கித்தால் அதில் ஏதோ அதிக விசேஷமிருப்பதாக எண்ணுகிறார்கள். அது தவறு. குறிப்புகளெதுவும் இல்லாமல் பிரசங்கித்தால் உளறல் மட்டுமே வரும். நாம் அனைவரும் பெரிய பிரசங்கிகளோ, பரிசுத்தவான்களோ, ஞானிகளோ அல்ல, சாதாரண மனிதர்கள். ஜோன் கல்வின் போன்றோர் ஒவ்வொன்றையும் குழப்பமில்லாமல் சொல்லக்கூடிய அதீத ஞானத்தை ஆண்டவரிடத்தில் இருந்து பெற்றிருந்தார்கள். நாம் அவ்வாறு ஆசீர்வதிக்கப்படவில்லை. ஆகவே நாம் நிச்சயமாக முழுவதையும் எழுதி வைக்கவேண்டும். அது நமக்கு மிகவும் அவசியமானது. எவ்வளவு பெரிய பிரசங்கியும் அவ்வாறு எழுதி வைத்திருப்பார். சில நேரங்களில் அனுபவ முதிர்ச்சியின் காரணமாக அநேக பிரசங்கங்களைச் செய்து வளர்ந்திருப்பவர்கள், ஆரம்பத்தில் செய்ததைப்போல அநேக பக்கங்களை வைத்திருப்பதைவிட பின்னால் பக்கங்களைக் குறைத்திருக்கலாம். ஆனால் பிரசங்கக் குறிப்புகளை அவர்கள் எழுதிக் கையில் வைத்திராமல் இருக்கமாட்டார்கள்.

நாம் வாகனத்தில் ஒரு பயணம் மேற்கொள்ளும்போது போகவேண்டிய இடத்தைச் சரியாகச் சென்றடைவதற்குத் தேவையான கருவிகளைப் பயன்படுத்திப் பிரயாணம் செய்கிறோம். நாம் போய்ச் சேரக்கூடிய இடம் தெரியவில்லையெனில் பாதை மாறி எங்கோ சென்று கொண்டிருப்போம். அதுபோலவே பிரசங்கமும். ஒரு வரைமுறை இல்லையென்றால் பிரசங்கம் எங்கோ போய்க்கொண்டிருக்கும். நாம் பேசுகிற செய்திக்கு கோர்வையான ஆரம்பமும் முடிவும் மிக அவசியம். ஆகவே எழுதி வைப்பது மிகவும் அவசியம். நாம் எழுதி வைத்திருக்கும்போது நமக்கொரு தெளிவு கிடைக்கும். நாம் எழுதி வைத்திருந்தால் நாம் சொல்லவேண்டிய பொருளுக்கு நமக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதையும், தேவையான வசனங்களை எப்படிப் பயன்படுத்துவது என எல்லாவற்றையும் அறிந்திருப்போம். அப்படிச் செய்யும்பொழுது பிரசங்கமானது படிப்படியாக சரியான விதத்தில் பயணிக்கும். நாம் பிரசங்கம் செய்கிறபோது நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற நேரத்தில், அது ஒரு மணி நேரமோ அல்லது நாற்பது நிமிடங்களோ என்றால் அந்நேர அளவிற்குள் குறிப்புகளை எழுதி வைத்திருந்தால் மட்டுமே எல்லாவற்றையும் சரியாக சொல்லி முடிக்க முடியும். அப்படிச் செய்யாவிட்டால் அநேக காரியங்களை விட்டுவிடுவோம் அல்லது நம் பிரசங்கத் தயாரிப்பின்போது இருந்திருக்காத விஷயங்களையெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிடுவோம். இதுபோன்ற அநேக சிக்கல்களைச் சந்திப்போம். தயாரிப்பு இல்லாமல் பிரசங்கம் என்பது கிடையாது. ஆகவே எழுதிப் பிரசங்கம் செய்வது நல்லது, அது நல்ல ஒழுக்கமும் கூட. அவ்வாறு செய்யும்பொழுது நம்மை நாமே சரிசெய்து கொள்ளலாம். ஏனென்றால் தேவையில்லாமல் ஏதாவது பேசுகிறோமா என்பதை அறிந்துகொள்ளலாம், அடுத்த செய்தியைக் கொடுக்கின்ற நேரம் நம் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம். மேலும் நாம் எதுவும் உளறவில்லை என்கிற நிச்சயத்தை அது நமக்குக் கொடுக்கும். எழுதியதைப் பாதுகாத்து வைத்திருந்தால் மீண்டும் ஒருமுறை தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் அதில் தேவையான திருத்தங்களைச் செய்யலாம். ஆகவே தெளிவாக பிரசங்கத்தை எழுதிக்கொள்வது நல்லது.

7. பிரசங்கத்தின் பயன்பாடுகளைத் தயாரிக்க வேண்டும்.

எல்லாப் பிரசங்கங்களிலும் அதற்கொரு முன்னுரை இருக்கும். முன்னுரை என்பது நாம் பிரசங்கத்தில் என்ன சொல்லப்போகிறோம் என்பதைக் குறித்த சுருக்கமான உரை. மூன்று நான்கு தலைப்புகளை வைத்துப் பிரசங்கம் தயாரித்திருந்தால் அந்தப் பகுதிக்குப் பெயர் விரிவாக்கம் (Explanation). நாம் எடுத்துக்கொண்ட வசனப் பகுதிளை அதன் மூலம் விளக்குகிறோம். அதை ஒரு உவமையிலிருந்து எடுத்தாலும் சரி, வரலாற்றுப் பகுதியிலிருந்து எடுத்தாலும் சரி, உரைநடைப் பகுதியிலிருந்து எடுத்தாலும் சரி அதற்கு சரியான விளக்கத்தை அந்தப் பகுதியில் கொடுக்கிறோம். விளக்கத்தைக் கொடுத்து முடித்த பிறகு அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளுகிற பாடம் என்ன? பயன்பாடுகள் என்ன? கேட்கின்ற ஆத்துமாக்கள் அதிலிருந்து அறிந்துகொள்ளவேண்டிய, செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதைப் பற்றிச் சொல்வதுதான் பயன்பாடுகள். அந்தப் பயன்பாடுகள் எப்போதும் நாம் விளக்கிய வேதப்பகுதியில் இருந்துதான் கொடுக்கவேண்டுமேயன்றி அதற்கு வெளியிலிருந்து கொடுக்கக் கூடாது. நாம் வேத உட்பொருள் விளக்கங்களையெல்லாம் பயன்படுத்திப் பிரசங்கம் தயாரிக்கிறபோது பயன்பாடுகளைக் கண்டுகொள்வதற்கு ஆண்டவரே நமக்கு உதவி செய்வார். அவற்றை நாம் தனியாகக் குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்தப் பயன்பாடுகளைத்தான் தான் பிரசங்கத்தின் முடிவில் ஒன்று, இரண்டு, மூன்றாக சொல்லப்போகிறோம்.

பயன்பாடுகளை ஒரு கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாம் அல்லது அது ஒரு அறிக்கையாக (Statement) இருக்கலாம். பயன்பாடுகள் என்பது கேட்ட பிரசங்கத்தின் அடிப்படையில் ஆத்துமாக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குவதாகக் காணப்படும். பிரசங்கத்தின் ஒரு பகுதியாக பயன்பாடுகள் இருக்க வேண்டும். சமீபத்தில் நான் ஒரு பிரசங்கியின் செய்தி கேட்டேன், அவர், பயன்பாடுகள்தான் பிரசங்கம் என்றார். அது தவறு. பிரசங்கத்தில் வசனத்தை விளக்காமல் எவ்வாறு பயன்பாட்டிற்கு வரமுடியும்? வசனத்தை விளக்கிய பிறகு அதிலிருந்து பயன்பாடுகளைக் கொடுக்கும்போது மட்டுமே அவற்றைக் கேட்டு நடைமுறைப்படுத்துகிறவர்களுக்கு அது உண்மைதான் என்ற தைரியம் வரும். ஏனென்றால், ஏற்கனவே அந்தப் பகுதிகளை விளக்கியிருக்கிறோம். கொடுத்த விளக்கத்திலிருந்து வரவேண்டியது பயன்பாடு.

பயன்பாடுகளைக் கவனத்தோடு தயாரிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் அவற்றைப் பயன்படுத்தி ஆத்துமாக்களின் இருதயத்தில் பேசுகிறார். இதையெல்லாம் செய்ய ஒவ்வொன்றுக்கும் நேரம் தேவைப்படும், கடின உழைப்பும் தேவைப்படும். கொடுக்கப்பட்டிருக்கிற நேரத்தில் இவைகளையெல்லாம் செய்து முடிக்க நமக்கு உதவியாகவும் இருக்கும். இந்தப் பயன்பாட்டை எழுதப்பட்ட பிரசங்கத்தின் இறுதிப் பகுதியாக சேர்த்து எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

8. தயாரித்த பிரசங்கத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை பிரசங்கத்தை வெள்ளிக்கிழமை எழுதி முடித்துவிட்டீர்கள், ஞாயிற்றுக்கிழமை காலையில் அதை பிரசங்கிக்க வேண்டுமெனில், அதற்கு முன்பாக அதை மீண்டும் வாசிக்க வேண்டும், படிக்க வேண்டும், திருத்தங்கள் தேவைப்பட்டால் அதையும் செய்துகொள்ள வேண்டும். அவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். பிரசங்கத்தாள்கள் உங்கள் முன்பாக இருந்தபோதும் உங்களுக்கு ஏற்கனவே அதிலிருப்பவைகள் தெரிந்திருக்க வேண்டும். நாம் ஏற்கனவே அதை வாசித்திருக்காவிட்டால், மனதில் நிறுத்திக்கொள்ளாவிட்டால் பிரசங்கிக்கும்போது நாம் தடுமாறுவோம். முழுப் பிரசங்கத்தையும் முழுமையாகப் படித்து, மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் இதைத்தான் பிரசங்கிக்கிறோம், சொல்கிறோம் என்று நமக்கு ஒரு தெளிவு இருக்கும். இருந்தாலும் அதைக் கேட்பவர்களுக்கு அந்தத் தெளிவு உள்ளதா என்பதே மிக முக்கியம். அநேக சமயங்களில் நமக்குத் தெளிவு இருந்தாலும் கேட்பவர்களுக்குத் அதில் தெளிவிருக்காது. கேட்கிற மக்களின் நிலையைப் பார்த்தால் அவர்கள் பலதரப்பட்ட சூழ்நிலைகளிலிருந்து வருகிறார்கள். அவர்கள் வறியவர்களாக, செல்வந்தர்களாக, வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவித்தவர்களாக இருப்பவர்கள்; அல்லது ஓரளவுக்குக் கஷ்டங்கள் இல்லாதவர்கள் என வேறுபாடான மனநிலையில், சூழ்நிலையில் இருந்து சபைக்கு வந்திருப்பார்கள். மேலும் சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் செய்திகள் தெளிவாகச் சென்றடைய வேண்டுமெனில் பிரசங்கத்தில் குழப்பங்களில்லாமல் தெளிவு இருக்கவேண்டும். சில நேரங்களில் பிரசங்கித்த செய்தி மக்களை எவ்வாறாக சென்றடைந்திருக்கிறது என்று நான் நினைப்பதுண்டு. அதை நான் அவர்கள் கேட்கிற கேள்வியிலிருந்து அறிந்துகொள்வேன்; அவர்களுக்குப் புரிந்திருக்கிறதா இல்லையா என்று. சில நேரங்களில் நானே கேட்டு அறிந்துகொள்வேன், காரணம் நாம் பிரசங்கித்த செய்தி அவர்களைத் தெளிவாகப் போய்ச் சேர்ந்திருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள அது அவசியம். தெளிவாக அவர்களைச் சென்றடையாத எதுவும் பயனற்றது. இவ்வாறாகப் பிரசங்கம் தயாரிக்கிறபோது மட்டுமே பிரசங்கமானது மக்களைத் தெளிவாகச் சென்றடையும்.

9. தயாரித்த பிரசங்கத்தை ஜெபநிலையில் ஆவியானவரில் தங்கியிருந்து பிரசங்கிக்க வேண்டும்.

பிரசங்கம் தயாரிக்கிறபோதே நாம் ஜெபத்தில் ஆரம்பித்திருந்தாலும் பிரசங்க மேடையில் எவ்வித சுயநல எண்ணங்களும் இல்லாமல், ஆண்டவருடைய மகிமையை மட்டுமே முன்னிலையில் வைத்து, ஆவியானவரின் உதவியைக் கேட்டு ஜெபிக்கவேண்டும். ‘ஆண்டவரே நான் வெறும் கருவிதான், நீர் பயன்படுத்தாவிட்டால் எந்தவிதமான பிரயோஜனமும் இருக்காது. நான் மிகவும் பெலவீனமானவன், மனித பலவீனங்களை நினைத்துப் பார்க்கிறபோது என்னில் அவை நிறையவே இருக்கின்றன. என் பலவீனங்கள் பிரசங்கத்தில் வராதபடிக்கு, என்னுடைய சுய ஞானத்தைப் பயன்படுத்தாதபடி, தேவ பயத்தோடும், ஆவிக்குரிய நடுக்கத்தோடும், ஆத்துமாக்களின் இருதயத்தின் நன்மையை மட்டும் மனத்தில் வைத்துத் தயாரித்த பிரசங்கத்தைத் தெளிவாக அவர்களுடைய ஆத்தும விருத்திக்காக விளக்குவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள் ஆண்டவரே’ என்று ஜெபிக்க வேண்டும். ஏனென்றால் நாம் சாதாரண மனிதர்கள், குறைபாடுகள் உள்ளவர்கள். நம்முடைய ஞானத்தைச் சார்ந்து பிரசங்கிக்கத் தொடங்கிவிடக் கூடாது. அது மிகவும் ஆபத்தானது. அதனால் அழிந்துபோனவர்கள் பலர். நாம் அவ்வாறு செயல்படும்போது பரிசுத்த ஆவியானவர் நம்மைவிட்டுப் போய் விடுவார். ஆகவே நாம் ஜெபிக்க வேண்டும். அந்த வசனங்கள் வீணாய்ப் போய்விடாதபடிக்கு அவர்களுடைய இருதயத்தில் பதிய வைக்கும்படியாக ஜெபிக்க வேண்டும். அவர்களுடைய தேவைக்கேற்றபடி அவர்கள் பிரசங்கத்தைப் பயன்படுத்திக்கொள்ள உதவி செய்யுங்கள், எனக்கும் உதவி செய்யுங்கள் ஆண்டவரே என ஜெபித்து, ஜெபநிலையில் பிரசங்கிக்க வேண்டும்.

இந்தக் குறிப்புகளில் இல்லை என்றாலும் முக்கியமாக சொல்லவேண்டிய தொன்றுண்டு. பிரசங்கிக்கு நல்ல மொழிநடை அவசியம்: அநேக பிரசங்கிகள் பிரசங்கத்தில் பயன்படுத்துகிற மொழிநடை சரியாக இல்லை. நம் ஊர்களில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான பேச்சு வழக்கு காணப்படும். ஆகவே நாம் தெளிவாகப் பிரசங்கிக்கிற விதத்தில் ஒரு நல்ல பேச்சு நடையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நான் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன் வரையும் ஏழு வருடஙகளுக்குத் தமிழில் பிரசங்கம் செய்யவில்லை. ஆங்கிலத்தில் தான் செய்திகளைக் கொடுத்து வந்திருக்கிறேன். தமிழ்நாட்டிற்கு வந்து நான் தமிழில் செய்திகளைக் கொடுத்தபோது என் தமிழின் மொழிநடையில் காணப்பட்ட குறைபாடுகளை நான் கண்டறிந்தேன். ஆனால் நான் அதை அப்படியே விட்டுவிடவில்லை. தொடர்ந்து வாசிக்க ஆம்பித்து, பேசி, எனக்கென ஒரு பேச்சு நடையை உருவாக்கிக் கொண்டேன். ஆகவே நமக்கென்று ஒரு பேச்சு நடை அவசியம். எளிமையாகத் தெளிவாகத் தமிழில் விளக்கி மக்கள் அதைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள கூடிய பேச்சு நடை நமக்குத் தேவை.

மொழியை நாம் உதாசீனம் செய்யக் கூடாது. மொழியில் கவனம் செலுத்தாமல் இருந்தால் பொதுவெளியில் மொழியை நாம் தவறாகப் பயன்படுத்திவிடுவோம். அதற்கென தெய்வ பாஷை என்று போய்விடக்கூடாது; அப்படி எதுவும் கிடையாது. தமிழ் உலக மொழி. சிலர் பேசுகிறபோது தமிழ் எங்கேயோ போய்விடும். வெறும் தமிழ் வேதமொழிபெயர்ப்பில் காணப்படும் 19ம் நூற்றாண்டின் வார்த்தைகளாக, வசனங்களாகப் பயன்படுத்துவார்கள். அதையெல்லாம் நாம் செய்யக்கூடாது. வேதத்தின் தமிழ் தெய்வ பாஷை கிடையாது. நம் நாட்டிற்கு வந்த மிஷனரிகள் ஆங்காங்கு கேட்ட 19ம் நூற்றாண்டுப் பிராமணத் தமிழை வைத்து வேதத்தை மொழிப்பெயர்த்திருக்கிறார்கள். அந்த மொழியில் நாம் பிரசங்கிக்கக் கூடாது. நாம் பிரசங்கிக்கிற செய்தி மக்களுக்குப் புரிகின்ற, அவர்களுக்குப் பரிச்சயமான மொழிநடையாக இருக்க வேண்டும். நாம் ஆண்டவர் கேட்பதற்காகப் பிரசங்கிக்கவில்லை, நமக்கு முன்னால் இருப்பவர்களுக்காகப் பிரசங்கிக்கிறோம். அவர்களுக்கு அது புரிய வேண்டும். அவர்களிடம் நாம் பேசுகிறது புரிகிறதா என்று கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். நான் சமீபத்தில் இணையத்தில் ஒரு பிரசங்கியின் செய்தியைத் தற்செயலாகக் கேட்டேன். அவர் சென்னையின் கொச்சைத் தமிழில் செய்தியைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதைச் சிறிது நேரத்துக்கு மேல் என்னால் கேட்கவே முடியவில்லை, பிறகு கேட்பதை நிறுத்திவிட்டேன். மிகவும் கொச்சையான நடையில் பிரசங்கமளிப்பது தவறு. தேவனுடைய செய்தியைக் கொடுப்பதற்கு தெளிவான எளிமையான பேச்சு நடை மிகவும் அவசியம். அதற்காக நாம் கடினமாக உழைத்து அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

10. இறுதியாக ஆண்டவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்

ஜெபத்தில் ஆரம்பித்து, ஜெபநிலையில் பிரசங்கித்த பிறகு, அன்றையதினம் வீட்டிற்குச் சென்று ஆண்டவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ‘குறைபாடு உள்ளவனாக இருந்தபோதும் எனக்கும் கூட மதிப்பு கொடுத்து என்னை பயன்படுத்தியுள்ளீரே. என்ன செய்திருக்கிறீர், என்ன நடந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. இருந்தாலும் என்னை இந்தளவுக்குப் பேச வைத்ததற்காக எனக்கல்ல, எனக்காக அல்ல, உங்களுக்கே எல்லா மகிமையும் ஆண்டவரே’ என்று சொல்லி நாம் ஜெபிக்க வேண்டும். ஏனென்று கேட்டால், நாம் பிரசங்கத்தை முடித்த பிறகு மக்கள் வந்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பார்கள். அப்பொழுது நாம் உற்சாகமடைந்து அந்த உற்சாகத்தில் தூக்கம் கூட வராது போய்விடும். ஆனால் நாம் அவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது. நம்மைத் தாழ்த்தி, ஆண்டவரை உயர்த்தி அவருக்கே கனத்தையும், மகிமையையும் கொடுக்க வேண்டும். நம்மில் பெருமை வந்துவிடாதபடிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். அது மிகவும் ஆபத்தானது. அப்படி நாம் பெருமையினால் ஆட்கொள்ளப்பட்டால் ஆவியானவர் நம்மோடு தொடர்ந்து வரமாட்டார். மக்கள் என்னதான் நேர்மறையான கருத்துக்களைச் சொன்னாலும், ஆண்டவரிடத்தில் நாம், ஆண்டவரே என் பாதங்கள் இரண்டும் தரையில் இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்ளும் என்று நாம் ஜெபிக்க வேண்டும். இறுமாப்பு உள்ளவனாக இருக்காதபடிக்கு எனக்கு உதவி செய்யும் என்று நாம் ஜெபிக்க வேண்டும். எல்லா மகிமையும் கர்த்தருக்கு என்று நாம் ஜெபித்து விட்டு அதற்கு நாம் எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்? ஏனென்றால் அவரில்லாமல் நாம் அதை செய்திருக்கவே முடியாது. அவருக்கே எல்லா மகிமையும் கொடுத்துவிட்டு அடுத்த பிரசங்கத்திற்காக இதேபோல முதலில் இருந்து ஆயத்தம் செய்ய வேண்டும். இதுவே ஊழியம், இதுவே பிரசங்கம்.

மறுமொழி தருக