உண்மையாய்ச் சிந்தி, உண்மையைப் பேசு, உண்மையாய் நட

தலைப்பைப் பார்த்தவுடன் காந்தித் தாத்தாவின் மூன்று குரங்கு பொம்மை நினைவுக்கு வருகிறதா? ஆண்டவரை அறியாத பெரியவர் காந்திகூட இந்த விஷயத்தில் நம்மோடு ஒத்துப் போகிறார். உண்மையை மட்டுமே கேள், அதை மட்டுமே பார், அதை மட்டுமே பேசு என்கிறது அந்தக் குரங்கு பொம்மை. அதுபற்றியதுதான் இந்த ஆக்கம்.

யாக்கோபு 5ம் அதிகாரத்தில் 12ம் வசனத்தில் பின்வரும் வசனத்தைக் காண்கிறோம்.

விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள்; நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.

இந்த வசனத்தில் விளக்கப்படுவதை யாக்கோபு தன் சகோதரராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ்ந்த காலத்தில் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறார். அதை இந்த இடத்தில் அவர் குறிப்பிட்டு தன் வாசகர்களுக்கு விளக்குகிறார். இந்த வசனத்தில் இருப்பதை மத்தேயு 5:34-37 வரையுள்ள வசனங்களில் இயேசுவின் மலைப்பிரசங்கத்தில் காண்கிறோம்.

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின் பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். பூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய பாதபடி; எருசலேமின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவின் நகரம். உன் சிரசின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.

இயேசு இந்தப் பகுதியில் மேலதிக விளக்கத்தைத் தந்திருக்கிறார். மத்தேயு நிருபம் யாக்கோபு எழுதப்பட்ட பின்பே எழுதப்பட்டிருப்பதால் யாக்கோபு இயேசு விளக்கியதைத் தன் நினைவில் இருந்தே குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வசனங்களில் விளக்கப்பட்டிருப்பது என்ன? அநேகர் இதன் மூலம் இயேசுவும், யாக்கோபுவும் ஒருபோதும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் சத்தியம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். வாசகர்களாகிய நீங்களும் அதையே நம்பிக்கொண்டிருந்தாலும் அதில் எனக்கு ஆச்சரியமில்லை. ஏனெனில், இந்த வசனங்களை மேலெழுந்தவாரியாக வாசிக்கும்போது அப்படித்தான் கண்களுக்குத் தெரிகிறது. அதனால், அநேகர் நியாயஸ்தலத்தில் வேதத்தின் மேல் கைவைத்து சத்தியம் செய்வதையும், எவருக்கும் எந்த வாக்குறுதியளிப்பதையும், இராணுவம், காவல்துறை போன்ற பணிகளில் இணைவதற்கு எடுக்கவேண்டிய வாக்குறுதிகளையும் இந்த வசனங்களின் அடிப்படையில் தங்களுடைய கிறிஸ்தவ விசுவாசத்தைக் காரணமாகக் காட்டி செய்ய மறுப்பார்கள். இவர்கள் செய்வது சரியா? இதைத்தான் இந்த வசனங்கள் விளக்குகின்றனவா?

1. உண்மையில் இந்த வசனங்கள் ஒருபோதும் சத்தியம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. மேலெழுந்தவாரியாக வாசிக்கும்போது அத்தகைய எண்ணத்தை இவை தந்துவிடுகின்றன என்பதை மறுக்கமுடியாது. ஆனால், கவனத்தோடு ஆராய்ந்து பார்த்தால் இவை விளக்கும் விஷயங்களே வேறு என்பதை அறிந்துகொள்ளலாம்.

மத்தேயு 5:34ல் ‘பரிச்சேதம்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது மிகவும் பழமையான கடுந்தமிழ் வார்த்தை. தமிழ் (OV) வேத நூலில் இத்தகைய வழக்கிலில்லாத வார்த்தைகள் நிரம்பி வழிகின்றன. இன்று மறந்தும் எவரும் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை; அநேகருக்கு இதன் அர்த்தம் தெரியாது. இதற்கு எழுத்துபூர்வமாக ‘சிறுபகுதி’ என்று அர்த்தம். கிரேக்க மூலத்தில் இந்த வசனத்தில் ‘me omosai holos’ என்று காணப்படுகிறது. அதைத் தமிழில் ‘அடியோடு சத்தியம் செய்யவேண்டாம்’ என்று மொழிபெயர்க்கலாம். Holos என்பதற்கு, ஒரு சிறிதும், எவ்விதத்திலும், முழுமையாக, எந்தக் காரணத்தைக் கொண்டும், அடியோடு என்ற அர்த்தங்களுண்டு. இந்த வார்த்தை ‘ஒட்டுமொத்தமாக சத்தியம் செய்யாதே’ என்கிறது. இதற்குப் பழங்காலத் தமிழில் 1900களில், இன்று வழக்கில் இல்லாத ‘பரிச்சேதம்’ என்ற கடுந்தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

18ம் நூற்றாண்டு பெப்ரீஸியஸ் மொழிபெயர்ப்பின் காலத்தில் இருந்து இந்த வார்த்தையைத் தொடர்ந்தும் இந்திய வேதாகம சங்கத்தின் OV தமிழ் மொழிபெயர்ப்பு விடாப்பிடியாகப் பயன்படுத்தி வருகிறது. அக்காலத்தில் சார்ள்ஸ் ரேனியஸ் புதிய தமிழ் மொழிபெயர்ப்பின் அவசியத்தை முன்வைத்தார். இருந்தும் அன்றைய மொழிபெயர்ப்புக் கமிட்டி அவரோடு முரண்பட்டு நின்றது. 1859ல் வெளிவந்த சார்ள்ஸ் ரேனியஸின் புதிய ஏற்பாட்டுத் தமிழ் மொழிபெயர்ப்பில் ரேனியஸ் இந்த வார்த்தையை ‘எவ்விதத்திலும்’ என்று நல்ல தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இதிலிருந்து ரேனியஸின் மொழிபெயர்ப்பு பெப்ரீஸியஸின் மொழிபெயர்ப்பைவிடச் சிறந்தது என்பது தெரிகிறது. இருந்தபோதும் தொடர்ந்தும் இந்திய வேதாகம சங்கம் பெப்ரீஸியஸின் காலத்து வார்த்தைகளையே 123 வருடங்களாகப் பழைய திருப்புதலில் பயன்படுத்தி வருகிறது. ரேனியஸின் மொழிபெயர்ப்பை அவர்கள் உதாசீனம் செய்கிறார்கள். மத்தேயு 5:34ல் ‘எவ்விதத்திலும் சத்தியம் செய்யவேண்டாம்’ என்பதே மிகவும் சரியான, சிறந்த எழுத்துபூர்வமான மொழிபெயர்ப்பு.

இயேசு இந்த வசனத்தில் இப்படிச் சொல்லியிருப்பதால், ஒருபோதும் சத்தியம் செய்யக்கூடாது என்ற எண்ணம் அநேகரிடம் காணப்படுகிறது. ஆனால், உண்மையில் இயேசு அந்த அர்த்தத்தில் அதைச் சொல்லவில்லை.; யாக்கோபுவும் அந்த முறையில் விளக்கவில்லை. இந்த வசனங்கள் காணப்படும் முழுப்பகுதியையும் ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே உண்மையைப் புரிந்துகொள்ள முடியும்.

இயேசு இந்தப் பகுதியில் 33ம் வசனத்தில் ‘பொய்யாணையிடாதே’ என்று கூறியிருக்கிறார். அதையே இயேசு இந்தப் பகுதியில் தடைசெய்கிறார். பொய்யாணையிடாமல் உன் ஆணைகளைச் செலுத்து என்பதுதான் இயேசுவின் போதனை. அதையே பூர்வத்தில் நியாயப்பிரமாணமும் விளக்கியிருக்கிறது என்கிறார் இயேசு. அதைத்தான் மேலும் தொடர்ந்து இயேசு 35-37 வரையுள்ள வசனங்களில் விளக்குகிறார். பூர்வத்தில் (பழைய ஏற்பாட்டில்) நியாயப்பிரமாணத்தை வைத்துப் பரிசேயர்கள் போதித்திருப்பதைச் சுட்டிக்காட்டிவிட்டு, இயேசு இப்போது அதற்கான மெய்யான விளக்கத்தைத் தருகிறார். இந்த இடத்தில் இயேசு இப்படிச் செய்வதற்குக் காரணமென்ன? என்று சிந்திக்கவேண்டும். அதற்குக் காரணம் அக்காலத்தில் யூதப் பரிசேயர்கள் நியாயப்பிரமாணத்தின் போதனைகளோடு தங்களுடைய சொந்தப் போதனைகளையும் இணைத்துக் கர்த்தரின் கட்டளைகளை மாசுபடுத்தியிருந்தார்கள். யூதர்களை அவர்கள் தவறான வழியில் வழிநடத்தி வந்திருந்தார்கள். அந்தத் தவறைக் கண்டித்து இயேசு, பொய் சத்தியம் செய்யக்கூடாது என்றும், கர்த்தர் முன் செய்யும் சத்தியங்களைச் சத்தியமாய்ச் செய்யவேண்டும் என்றுதான் இந்த வசனங்களில் விளக்குகிறார்.

பரிசேயர்கள், ஆண்டவரின் பெயரில் மட்டுமல்லாமல், மனிதர்கள் மேலும், எந்தப் பொருட்களைப் பயன்படுத்தியும் சத்தியம் செய்யலாம் என்ற போலித்தனமான முறைகளையும் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். இந்தப் பெயர்களில் சத்தியம் செய்வதற்குத்தான் பரிசேயர்கள் முக்கியத்துவம் தந்தார்களே தவிர செய்யும் சத்தியத்தை உண்மையாய்ச் செய்வதற்கல்ல. பிரபலமான மனிதர்களினதும், இடங்களினதும், பொருட்களினதும் பெயர்களைப் பயன்படுத்தி வாக்குறுதியளிப்பதன் மூலம், அவ்வாறு செய்பவர்கள் தங்களுடைய பொய்யாணைகளையும், வாக்குறுதிகளையும் உண்மையானவை என்று மற்றவர்களை நம்பவைக்கப் பார்க்கிறார்கள். ‘சாமி சத்தியமாக’ செய்வேன் என்று ஒருவன் வாக்குறுதியளிக்கும்போது அவன் தெரிந்திருந்தும் தன் பொய்வாக்குறுதிக்கு கடவுளைப் பயன்படுத்திக்கொள்ளுகிறான். ‘என் மகன் தலையில் வைத்துச் சொல்லுகிறேன், பணத்தைக் கொடுத்துவிடுவேன்’ என்கிறவனும் தான் செய்யமுடியாத ஒன்றைச் செய்வதாக மகனைப் பயன்படுத்தி ஆணையிடுகிறான். இதெல்லாம் பொய்ச் செயல்கள். இயேசு இந்தவிதமான போலித்தனத்தைத்தான் மத்தேயு 5ல் ஆணித்தரமாய்க் கண்டிக்கிறார். அதாவது, போலித்தனமாக, எந்தப் பொருளையோ பெயரையோ பயன்படுத்தியும், எக்காரணத்தைக் கொண்டும் போலிச்சத்தியங்களைச் செய்யாதே என்பதுதான் இயேசுவின் போதனை. அதனால் இயேசுவும், யாக்கோபுவும் ஒருபோதும் ஆணையிடக்கூடாது, சத்தியம் செய்யக்கூடாது என்று இந்த வசனங்களின் மூலம் விளக்கவில்லை.  இருவருமே எடுக்கும் ஆணைகளையும், கொடுக்கும் வாக்குறுதிகளையும் கர்த்தர் முன் உண்மையாய்ச் சிந்தித்துப் பேசிச் செய்யவேண்டும் என்றுதான் விளக்கியிருக்கிறார்கள்.

உண்மை பேசுவதைத் தவிர வேறு எதையும் கிறிஸ்தவன் கனவிலும் நினைத்துப் பார்க்கக்கூடாது என்பதுதான் வேதம் விளக்கும் உண்மை. இதுதான் பத்துக்கட்டளைகளின் மூன்றாவது கட்டளையின் பொருள். “உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்” (யாத்திராகமம் 20:7). கர்த்தரின் பெயரை வீணில் வழங்காதே என்பதற்குப் பெயர், அவருடைய பெயரை வைத்துக்கொண்டு, அவருடைய பிள்ளையாக உன்னை அடையாளங்காட்டிக்கொண்டு (கிறிஸ்தவன்) பொய் வாழ்க்கை வாழாதே என்கிறது மூன்றாம் கட்டளை. அன்றாடம் குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும், சபையாரிடமும், வேலைத்தளத்தில் இருப்பவர்களிடமும் எத்தனை பொய்களைச் சொல்லிப், பொய்யாய் நடந்து உண்மையாய் நடப்பதாய்க் தங்களைக் காட்டிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் தொடர்ந்திருந்து வருகிறார்கள். அனேகருக்கு இது பொய்யாய்த் தெரிவதில்லை; அதுவே அவர்களின் தமிழ்க் கலாச்சாரமாக மாறிவிட்டிருக்கிறது. பிரசங்க மேடையில் சத்திய வசனத்தை உள்ளது உள்ளபடி விளக்காமல், அதன் அர்த்தம் தெரியாமல் விளக்குகிறவனும் இந்தக் கட்டளையை மீறி ஆண்டவருடைய நாமத்தை வீணில் வழங்குகிறான். தான் சொல்லப்போவது சத்தியம் என்று அவன் ஜெபம் செய்து அதை ஆசீர்வதிக்கும்படி ஆண்டவரைக் கேட்கின்ற மகாப் பொய்யன் அந்தப் பிரசங்கி. ஓய்வுநாளில் இந்தவிதத்தில் நடந்துவரும் பிரசங்கியும், சபையும் பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலைப்போல இருதயம் கனத்து நியாயத்தீர்ப்பை எதிர்நோக்கித் திமிரோடு நடந்துவரும் கூட்டம் மட்டுமே. கர்த்தருக்கு இவர்கள் செய்வதைவிடப் பெரிய நம்பிக்கைத் துரோகம் வேறு என்ன இருக்கமுடியும்.

2. மத்தேயு 5:34-37 வரையுள்ள வசனப்பகுதியை முழுமையான ஒரே வசனப்பகுதியாகக் கருதவேண்டும். அதிலுள்ள ஒரு வசனத்தை மட்டும் வைத்து அந்தப் பகுதிக்குப் பொருள் தரக்கூடாது. பொய்யாணையிடுவதைத் தடை செய்யும் ஆண்டவர், எதைச் செய்யவேண்டும் என்பதைத் தெளிவாக 37ம் வசனத்தில் விளக்கியிருக்கிறார். இந்த வசனமே இந்தப் பகுதிக்கான முழுமையான விளக்கத்தைத் தாங்கி நிற்கிறது. இதில், ‘உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள். இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்’ என்கிறார் இயேசு. இதற்கு என்ன அர்த்தம்? இந்த வார்த்தைப் பிரயோகத்திற்கு அர்த்தம், உண்மையைப் பேசுங்கள், அதற்கு மாறானதனைத்தும் தீமையானது என்பதுதான். இந்த வசனத்தில் காணப்படும், ‘இல்லதை இல்லதென்று’ என்று நாம் தற்காலத்தில் எழுதுவதில்லை. இதற்கு ‘இல்லாததை இல்லாததென்று’ என்றுதான் எழுதுவோம். இதன்படி ஆண்டவர், எது உண்மையோ அதை மட்டும் உள்ளது உள்ளபடி சொல்லுங்கள், செய்யுங்கள் என்று விளக்குகிறார். இதற்கு முரணானதனைத்தும் பொய் என்பது இயேசுவின் விளக்கம்.

3. மத்தேயு 5:34-37 பகுதியையும், யாக்கோபு 5:12ஐயும் பயன்படுத்தி, ஆணையிடுவதும், சத்தியம் செய்வதும், வாக்குறுதிகள் அளிப்பதும் முழுத்தவறு என்ற போதனையை 16ம் நூற்றாண்டில் அனாபாப்திஸ்து என்ற இயக்கத்தாரும், அவர்கள் வழியில் வந்து இன்று அமெரிக்காவில் காணப்படும் மெனோனைட் இயக்கத்தாரும், சகோதரத்துவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் விளக்கிவருகிறார்கள். இதன் மூலம் இவர்கள் அரசுக்கு விசுவாசமாயிருப்பேன் என்று ஆணையிடுவதையும், அரச படைகள் மற்றும் காவல்துறைப் பணியில் இணையும்போது ஆணையிடுவதையும், வாக்குறுதியளிப்பதையும் மதரீதியில் விரோதமானது என்று கூறி தவிர்த்து வருகிறார்கள். இவை பற்றி வேதம் இவ்விரு பகுதிகளிலும் விளக்கியிருப்பதை இவர்கள் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதால் இந்தத் தவறைச் செய்கிறார்கள்.

கத்தோலிக்க மதம் இன்னொரு தவறைச் செய்கிறது. ஆணையிடுவதையும், வாக்குறுதியளிப்பதையும் அது போலித்தனமாகப் பயன்படுத்தி, தன்னைச் சார்ந்தவர்களைத் தவறாக வழிநடத்தி வருகிறது. குருமார்கள் திருமணத்தை நிராகரித்து, தனித்துவாழ்வதாகப் பதவிப் பிரமாணம் எடுத்தும், வறுமை வாழ்வை மேலானதாகக் கருதி அவ்வாறு வாழ வாக்குறுதி அளித்தும், கத்தோலிக்கர்கள் தொடர்ச்சியான கீழ்ப்படிவுடன் வாழ்வதாக வாக்குறுதி எடுத்தும், ஆணையிடுவதையும், வாக்குறுதி அளிப்பதையும் போலித்தனமானதாக்குகிறார்கள். இவர்களும் யூதப் பரிசேயர்கள் செய்ததையே செய்து வருகிறார்கள். இத்தனையும் இவர்கள் மானுடர்களாகப் பின்பற்ற அவசியமற்றவை. ஒரு மதகுரு திருமணம் செய்யக்கூடாது என்று வேதம் விளக்கவில்லை. வறுமை வாழ்க்கை கர்த்தருக்கு முன் ஆசீர்வாதமான மேலான வாழ்க்கை என்றும் வேதம் விளக்கவில்லை. தொடர்ச்சியான கீழ்ப்படிவு என்பது ஆவியின் துணையால் மட்டுமே செய்யமுடிந்த ஒரு கிருபை. அப்படி வாழ்வோம் என்று வாக்குறுதி அளிக்கும் ஆவியற்ற கத்தோலிக்கர்கள் தங்களால் முடியாத ஒன்றைச் செய்வோம் என்று பொய் வாக்குறுதி அளிக்கிறார்கள்.

4. மேலே குறிப்பிட்ட போலித்தனமான ஆணைகளையும், வாக்குறுதிகளையும் மதத்தின் பெயரால் செய்து வந்த அனாபாப்திஸ்து மற்றும் கத்தோலிக்க மதங்களுக்கு எதிராகத்தான் 1689 விசுவாச அறிக்கையில் 23ம் அதிகாரம் ‘நீதியான ஆணையிடுதலும், உறுதிமொழிகளும்’ எனும் அதிகாரத்தைத் தந்திருக்கிறது. இவ்வதிகாரத்தின் தலைப்பே நீதியான, உண்மையான ஆணையிடுதலும், வாக்குறுதியளிப்பதும் வேதம் போதிக்கும் உண்மையென்பதை விளக்குகிறது. அனாபாப்திஸ்துகளின் போக்குக் காரணமாக 17ம் நூற்றாண்டு பார்டிகுளர் பாப்திஸ்துகளைப் பலர் தவறாகக் கணித்ததனாலேயே, அவர்கள் அந்தக் குற்றச்சாட்டுக்கு மறுமொழியளிக்கும் விதத்தில் இந்த அதிகாரத்தை வரைந்திருக்கின்றனர். இந்த அதிகாரம் நீதியான முறையில் வழக்கு மன்றத்தில் நீதிபதிக்கு முன் வேதத்தில் கைவைத்து ஆணையிடுவதையும், முக்கியமான ஏனைய சந்தர்ப்பங்களில் வாக்குறுதிகள் அளிப்பதையும் வேதபூர்வமான செயல்களாக விளக்குகின்றன. அத்தோடு, இந்த அதிகாரம் முழுவதும் உண்மையைப் பேசி, உண்மையாய் நடந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும், கர்த்தருக்கு முன் அந்த முறையிலேயே ஆணையிடவும், வாக்குறுதிகள் அளிக்கவும் வேண்டும் என்பதையும் விளக்குகின்றது.

மறுமொழி தருக